Flash News

Monday, April 5, 2010

விடுதலை கேட்பது நளினியின் உரிமை, சலுகை அல்ல: கவிஞர் தாமரை





நளினி விடுதலை, அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில், நளினி விடுதலையை பல்வேறு கோணங்களில் அலசும் ஒரு கருத்தரங்கை, கீற்று டாட் காம் இணைய தளம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் எழுத்தாளர் பூங்குழலி, இதழாளர் அருள் எழிலன், கவிஞர் தாமரை, விடுதலை ராசேந்திரன், வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.



வழக்கறிஞர் சுந்தரராஜன்


வழக்கறிஞர் சுந்தரராஜன் தனது உரையில் நளினியின் விடுதலை குறித்து மக்களிடம் பரவலான கருத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், இன்று சிறையில் இருப்பது நளினியாக இருக்கலாம். நாளை இதுவே நம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.




வழக்கறிஞர் சுந்தரராஜன்


ஆகையால் நளினி விடுதலையை, இச்சமூகத்தை பாதிக்கும் ஒரு பிரச்சினையாகவே பார்க்க வேண்டும். இப்பிரச்சினையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல, பரந்துபட்ட சமூகம் இருக்கிறது. ஆனால், இந்தப் போக்கை மாற்றுவதற்கான வேலையில் நாம் இறங்க வேண்டும், அதுதான் நளினிக்கு நலம் பயக்கும் என்று கூறினார்.



அருள் எழிலன்


இதழாளர் அருள் எழிலன் பேசுகையில், நளினி விடுதலை குறித்த விவாதங்களின் போது எப்போதுமே ராஜீவ் கொலை மட்டும் தான் பேசுபொருளாக இருக்கிறது.



அருள் எழிலன்



ஆனால் அமைதிப்படையின் அட்டூழியங்கள் வசதியாக மறைக்கப் படுகின்றன. அமைதிப்படையால் பல ஆயிரம் உயிர்கள் பறிக்கப் பட்டதைப் பற்றி யாருமே பேசவில்லை. சாத்தானின் படைகள் என்று அமைதிப்படை வர்ணிக்கப் பட்டதே ? அந்தச் சாத்தான் யார் என்பதை யாரும் பேச முற்படுவதில்லை.

நளினி யாரிடமும் கருணை கேட்கவில்லை. அவரது விடுதலை சட்டம் அவருக்கு வழங்கியுள்ள உரிமை. இது வரை தமிழ்நாட்டில் எத்தனை கொலைகாரர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் ? நளினி மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கூறினார். மேலும் நளினி விடுதலைக்காக ஒரு பெரிய இயக்கம் கட்டப் பட வேண்டும். போராட்டம் ஒன்றே நளினியை விடுதலை செய்யும் என்று கூறினார்.

கவிஞர் தாமரை தனது உரையில், நளினிக்காக நான் கையெழுத்து இயக்கம் நடத்தினேன். சாதாரண மக்கள் கையெழுத்து இட்டால், அது அரசின் கவனத்தை ஈர்க்காதோ என்று முக்கிய நபர்களிடம் கையெழுத்து இட்டேன். இந்த இயக்கத்தை எடுக்கும் முன் இவ்வழக்கு தொடர்பான அவ்வளவு ஆவணங்களையும் விரிவாக படித்தேன். அண்ணா நூற்றாண்டில் கைதிகளை விடுவிக்கப் போகிறார்கள் என்ற காரணத்தால் விரைவாக வாங்கினேன். கனிமொழி மூலமாக முதல்வரைச் சந்திக்க அனுமதி வாங்கி, நான், கவிஞர் க்ருஷாங்கிணி, தியாகு ஆகியோர் கருணாநிதியை சந்தித்தோம்.



கவிஞர் தாமரை



அப்போது கருணாநிதி “எனக்கு நளினியை விடுதலை செய்வதில் ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் சோனியாவுக்கு ஆட்சேபம் இல்லையா என்பது எனக்குத் தெரியாது. சோனியா சரி என்றால் எனக்கு விடுதலை செய்வதில் தடையேதும் இல்லை“ என்று கூறினார். அப்போது நான் கருணாநிதியிடம் “அய்யா அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 ன் படி, இது மாநில அரசின் அதிகாரம். நீங்கள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கூறினேன். ஆனால் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

இதுவரை எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசைக் கேட்க வேண்டும், மத்திய அரசைக் கேட்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறியே 19 ஆண்டுகளாக நளினியை சிறையில் அடைத்துள்ளார்கள்.

முன் விடுதலையை கைதி உரிமையாகக் கோர முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால், மற்ற கைதிகளைப் போல என்னை சமமாக நடத்து என்பதற்கு அனைத்துக் கைதிகளுக்கும் உரிமை உண்டு. ஆலோசனைக் குழுமம் என்பது ஒரு சடங்கு. விடுதலை செய்ய முடியாது என்பதற்காக அந்தக் குழுமம் கூறியுள்ள காரணங்கள் நகைச்சுவையானவை.

மேலும் நளினி விடுதலைக்கு எதிராக கூறப்படும் மற்றொரு காரணம், நளினி தேசத்திற்கெதிரான குற்றத்தை புரிந்துள்ளார் என்பது. எது தேசத்திற்கெதிரான குற்றம் ?



கவிஞர் தாமரை


1984ம் ஆண்டு, போபாலில் விஷவாயுவைக் கசிய விட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்ததே யூனியன் கார்பைடு நிறுவனம்…. அது தேசத்திற்கெதிரான குற்றம். அந்தக் குற்றத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சனை இன்று வரை கைது செய்யாமல் இருக்கிறதே அரசாங்கம் ? யூனியன் கார்பைடு நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்தால் வாங்கப் பட்டு அந்த நிறுவனமும் இன்று இந்தியாவில் கால் பதித்துள்ளதே !

அது தேசத்திற்கெதிரான குற்றம் இல்லையா ? இந்தியாவில் அணு விபத்து ஏற்பட்டால், அதற்கான நஷ்ட ஈட்டை அதற்கு காரணமான நிறுவனங்கள் ஏற்க வேண்டாம் என்ற Nuclear Liability Bill கொண்டு வரப்பட்டுள்ளதே. அதற்கு காரணமான மன்மோகன் சிங் தேசத்திற்கெதிரான குற்றத்தை புரியவில்லையா ?

தீவிரவாதம், தீவிரவாதம் என்கிறார்களே. உச்சநீதிமன்றமே ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டப் பிரிவில் இக்கொலை வழக்கு விசாரிக்கப் பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்ததை ஏன் அனைவரும் வசதியாக மறந்து விட்டார்கள் ? தடா சட்டம் இவ்வழக்கில் செல்லாது என்று எப்போது உச்சநீதிமன்றம் முடிவெடுத்ததோ, அப்போதே இவ்வழக்கு சாதாரண, குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் கீழ், மீண்டும் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் துர்பாக்கியசாலிகள்.

அதனால், தடா சட்டம் செல்லாது என்றாலும், அச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்கு விசாரணை மட்டும் செல்லும் என்று முடிவு செய்யப் பட்டது.


எத்தனை புலம்பினாலும் ராஜீவ் மரணத்தை மாற்ற முடியாது. அதனால், அதை விட்டு நகர்ந்து முன் செல்ல வேண்டும். நளினி படித்துப் பட்டம் பெற்றார் என்ற காரணத்தால் அவரை விடுதலை செய்ய முடியாது என்று கூறுகிறார்களே, நளினி படிக்காமல் சிறையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தால் மட்டும் விடுதலை செய்திருப்பார்களா ?


இது போன்ற காரணங்களைக் கூறியதற்காக தமிழக அரசு வெட்கப் பட வேண்டும். இந்தக் காரணங்களை நீதிமன்றங்கள் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது நளினியின் உரிமை. சோனியா கருணாநிதியின் முடிவு அல்ல என்று பேசினார்.


விடுதலை ராசேந்திரன் பேசுகையில், கையெழுத்து இயக்கம் தொடர்பாக கருணாநிதியை சந்திக்க கனிமொழி நேரம் வாங்கிக் கொடுத்தபோதே அவர் டெல்லியில் மனு கொடுங்கள் என்று தாமரையிடம் கூறியிருக்கிறார். தாமரைதான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நம் எல்லோரையும் விட, கனிமொழிக்கு தனது தந்தையை நன்கு புரியும் அல்லவா. அதனால்தான் டெல்லிக்கு மனு கொடுங்கள் என்று கூறியுள்ளார். தாமரைதான் கருணாநிதியை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.



விடுதலை ராசேந்திரன்


நளினி விடுதலை குறித்து, இடதுசாரிகள் கூட குரல் கொடுக்கத் தயாராக இல்லாத போது, பொது மக்கள் கருத்தை நளினிக்கு ஆதரவாக உருவாக்குவது மிக மிக அவசியம். தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய செல்வி.ஜெயலலிதா கூட, ஒரு பெண் என்ற வகையில் கூட நளினி விடுதலை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.


நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை, என்று கூறுகிறார்களே, நளினி நான்தான் கொன்றேன், என்று கழுத்தில் ஒரு போர்டையா மாட்டிக்கொண்டு சுற்ற முடியும் ?

தேர்தலில் தோற்கும் அரசியல் கட்சிகள், குறைந்த பட்சம் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா ? குறைந்தபட்ச இந்தத் தார்மீக பொறுப்பு கூட இல்லாத பொழுது நளினி மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.
ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வு அதிகாரி, டி.ஆர்.கார்த்திக்கேயன் தான் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அவர் இந்த வழக்கில் தடா சட்டம் மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட போது, அந்த அறிக்கையில் திமுகவினருக்கு ராஜீவ் கொலை வழக்கில் பங்கு இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பாது பதவியில் இருந்த ஐ.கே.குஜ்ரால் அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றது, இதே காங்கிரஸ் அல்லவா ? அதற்கு பயந்துதான் இன்று தமிழனின் மானத்தை திமுக காங்கிரஸ் காலடியில் அடகு வைத்துள்ளதா ?


இங்கே, நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட அரசியல் தீர்மானிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ராஜீவ் படுகொலை என்ற பெயரில், எத்தனை தமிழர்களின் உயிர் பறிக்கப் பட்டிருக்கிறது ? கோடியக்கரை சண்முகம் என்பவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே, ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டாரே… அவர் உயிரை பறித்தது இந்திய அரசாங்கம் அல்லவா ?



கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பகுதியினர்


பிரியங்கா நளினியைச் சந்தித்ததால் அவர் கருணை காட்டினார் என்கிறார்களே… அதற்குப் பிறகுதானே, ஈழத்தில் போர் தீவிரமடைந்தது ? மே 21 ராஜீவ் இறந்தார் என்றால் அதற்கு முன் பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகத் தானே, மே 20 முள்ளிவாய்க்காலில், பிரபாகரன் போன்ற ஒரு உடலைக் காட்டினார்கள். நளினியின் விடுதலை நம் அனைவரின் பொறுப்பு. அதற்காக நான் ஒவ்வொருவரும் குரல் கொடுப்போம் என்று பேசினார்.



சவுக்கு

1 comment:

யூர்கன் க்ருகியர் said...

பகிர்வுக்கு நன்றி சார்

Post a Comment