Flash News

Saturday, October 23, 2010

பொதுப் பணத் துறை

இந்த வார தமிழக அரசியல் இதழில், “வழக்கில் சிக்க வைக்க சதி. ராமசுந்தரம் ஐஏஎஸ் ராஜினாமா ? “ என்ற தலைப்பில் அட்டைச் செய்தி வந்திருக்கிறது. படித்துப் பார்த்தால், நமது சுனில் குமார் பற்றியும் செய்தி இருக்கிறது. சுனில் குமாரைப் பற்றி வேறு யாரோ எழுதவும், அதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியுமா ? சுனில் குமார் சவுக்கின் செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒருவர் சுனில் குமாரைப் பற்றி எழுதுகிறார்களே. சவுக்கு கம்மென்று பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று, நாக்கு மேலப் பல்லப் போட்டு நாலு சாதி சனம் கேள்வி கேட்டுட்டா அசிங்கமாப் போயிடாது… … ? அதனால், இந்தச் செய்தியைப் பற்றி சவுக்கு டீம் புலன் விசாரணையில் இறங்கியது. நமது புலன் விசாரணையில் கிடைத்த செய்திகளுக்கு போவதற்கு முன், தமிழக அரசியலில் வந்த கட்டுரையை படியுங்கள். மேலும் படிக்க
சவுக்கு

சூடும் இல்லை. சொரணையும் இல்லை.

யாருக்கு என்று கேட்கிறீர்களா ? தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தான்.

ஒரு அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யும் ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை என்னவென்று சொல்வீர்கள் ? மேலும் படிக்க
சவுக்கு

முதலை வடிக்கும் கண்ணீர்.

போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ?

இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும். 2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வந்து, கருணாநிதியை சந்தித்த சோனியா, 2010ல் விமானநிலையத்தில், 10 நிமிடங்கள் மட்டுமே கருணாநிதிக்கு நேரம் ஒதுக்குகிறார் என்றால், கருணாநிதி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஒன்றரை வருட காலமாக தமிழ்ச் சொந்தங்கள் முள்வேளி முகாமுக்குள் தானே அடைபட்டுள்ளார்கள் ? அப்போதெல்லாம் இல்லாத கரிசனம், கருணாநிதிக்கு இப்போது என்ன ? என்னவென்றால், திமுகவை அனுசரித்து, சட்டசபைத் தேர்தலில் உரிய கூட்டணி வைக்காவிட்டால். திமுக தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்கும், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சூசகமாக உணர்த்துகிறாராம்…..!!!! மேலும் படிக்க
சவுக்கு

Monday, October 18, 2010

இன்றோடு ஆறு ஆண்டுகள்.

இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.


வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. மேலும் படிக்க


சவுக்கு

Tuesday, September 7, 2010

இளங்கோவடிகளும், எல்காட் நிறுவனமும்.


தலைப்பை பார்த்து விட்டு, இந்தப் பதிவு ஏதோ சிலப்பதிகாரம் தொடர்பானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தப் பதிவு, சிலப்பதிகாரம் பற்றியது அல்ல. எல்காட் நிறுவனத்தில் உள்ள இளங்கோவன் என்ற ஒரு அதிகாரியின் சித்து விளையாட்டைப் பற்றியது.

எல்காட் நிறுவனம் என்பதன் பணி என்ன ? தமிழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும், கணினி வாங்கித் தருவது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கணினி வாங்குவது, நில ஆவணங்கள் மற்றம் பத்திரப் பதிவுத் துறை ஆவணங்களை கணினி மயப்படுத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை கணினி மயப் படுத்தவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை செய்து வரும் தமிழக அரசின் நிறுவனம் தான் எல்காட்.

இந்த எல்காட் நிறுவனம், ஒரு துணை நிறுவனத்தை துவக்கி, அரசுப் பணம் 700 கோடி ரூபாயை கபளீகரம் செய்ததை ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தான் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.

ஆவணங்களோடு தெள்ளத் தெளிவாக, அரசு முதலீடு செய்திருந்த ஒரு நிறுவனம், ஒரே நாளில் எப்படிக் காணாமல் போனது என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அவரை பணி இடை நீக்கம் செய்தது கருணாநிதி அரசு.

உமாசங்கருக்கு தலித் அமைப்புகளிடமிருந்தும், மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிடைத்த ஆதரவை பார்த்த கருணாநிதி அரசு, பயந்து பின் வாங்கியது. ஆனால் உமாசங்கருக்கு கிடைத்திருக்கும் டான்சி மேலாண்மை இயக்குநர் என்ற புதிய பதவி, அவரை மேலும் சிக்கலில் ஆழ்த்தவே என்று சவுக்கு பார்க்கிறது. அந்தத் துறையில் ஏதாவது ஒரு புகாரில் உமா சங்கரை சிக்க வைக்கவே இந்த பணி நியமனமோ என்ற சந்தேகம் சவுக்குக்கு உள்ளது.

உமாசங்கர் அவர்கள் மேலும் கவனமாக, தான் கையெழுத்துப் போடும் கோப்புகளில் அதிக கவனத்தோடும், தொலைபேசியில் பேசும் உரையாடல்களில் ஜாக்ரதை உணர்வோடும் இருக்க வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது. ஏனெனில், சாதாரணமாகவே, சகட்டு மேனிக்கு அனைவரது போனையும் ஒட்டுக் கேட்கும், நபர்கள் உளவுத் துறையில் இருப்பதால், இவரது மொபைல், வீட்டுத் தொலைபேசி மற்றும், அலுவலகத் தொலைபேசி கட்டாயமாக ஒட்டுக் கேட்பில் இருக்கும் என்று சவுக்கு நம்புகிறது.

இந்த எல்காட் நிறுவனம், அரசுத் துறைகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும், டெண்டர் விடுகிறது. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும் இது போல ஓபன் டெண்டர் மூலமாகவே பெறப் படுகின்றன.

இந்த டெண்டர்கள் பரிசீலனை செய்யப் படுகையில் L1, L2, L3 என்று மூன்று வகையாக பரிசீலிக்கப் படும். L1 என்றால் Lowest Rate 1 என்று பொருள். எல்லா டெண்டர்களிலும், குறைந்த விலையை குறிப்பிட்டிருக்கும் L1க்குத் தான் ஆர்டர் தர வேண்டும். L1ஐ விட்டு விட்டு L2 தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில், அந்த டெண்டர் கமிட்டி அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, L1 நிறுவனத்தின் பொருட்கள் தரமானதாக இல்லை, அந்த நிறுவனம் உடனடியாக குறிப்பிட்ட காலத்துக்குள் பொருட்களை தராது, ஏற்கனவே இது போல டிஃபால்ட் ஆன நிறுவனம் போன்ற வலுவான காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதனால் பெரும்பாலான நேர்வுகளில் L1 தான் தேர்ந்தெடுக்கப் படும். ஒரு டெண்டருக்கு ரேட்டை அனுப்பும் முன் ஒரு நிறுவனம், அந்த ரேட் கட்டுப் படியாகுமா, சப்ளை செய்ய முடியுமா, இந்த ரேட்டில் லாபம் கிட்டுமா என்பதையெல்லாம் பரிசீலித்துதான் அனுப்பும். சில நிறுவனங்கள், குறைந்த விலையை போட்டு பெரிய அளவில் லாபம் இல்லாவிடினும், அரசு ஆர்டர் கிடைத்தால் அடுத்த ஆர்டரில் லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டு விடுவார்கள். ஆனால், L1 ரேட்டுக்கு மாறாக L2வையோ L3யையோ, தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க எல்காட் நிறுவனத்திற்கு டெண்டர் கோட் செய்யும் ஒரு நிறுவனம், டெண்டர் எப்படி விட வேண்டும் என்று மின்னஞ்சலில் எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளரான ஆர்.இளங்கோ என்பவருக்கு ஆரஞ்சு எஜுகேஷன் என்ற மல்டி மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் வருமாறு.

டியர் இளங்கோ சார்,

வரக்கூடிய மேன் பவர் டெண்டர் எப்படி விட வேண்டும் என்பது குறித்த எனது எண்ணங்கள்.

சார், இந்த டெண்டரில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், டெக்னிக்கல் சூப்பர்வைசர்கள், ப்ரோக்ராம்மர்கள் என்று பல்வேறு திறன்வாய்ந்த நபர்களின் தேவை இருப்பதால், இந்த டெண்டரில் முக்கியமாக மேன்பவர், டேட்டா என்ட்ரி பணி மற்றும் தொழில் நுட்ப அறிவு தேவையாக இருப்பதாலும், நல்ல தொழில்நுட்ப பின்னணி கொண்ட குழுவினரிடம் இந்த டெண்டர் கிடைக்க வேண்டும் (உதாரணத்திற்கு எங்களின் பின்னணி இது போன்ற தொழில்நுட்ப வல்லுனர்களை பயிற்சி அளித்து அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக அனுப்ப இயலும்)

இதை அடிப்படையாக கொண்டு, டெண்டரில் விண்ணப்பிப்பதற்கான தகுதி கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.

1. ஆண்டுக்கு 2.5 கோடிக்கும் மேலாக கடந்த மூன்று ஆண்டுகள் டர்ன் ஓவர்
2. அரசு மற்றும் அரசு சார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சத்திற்கு குறையாமல் டேட்டா என்ட்ரி மற்றும் வேலை பார்த்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் டெண்டர் பெற்றதற்கான சான்று.
3. மூன்றில் இரண்டு முக்கிய வேலைகளை (டெட்டா என்ட்ரி, மற்றும் கணினி பயிற்சி ) எடுத்துச் செய்ததற்கான அனுபவம்.
4. அரசுத் துறைகளில் டெண்டர் எடுத்து அதை நிறைவாகச் செய்து முடித்ததற்கான சான்றிதழ்
5. மாநில அளவில் டெண்டர் எடுத்து வேலை முடித்ததற்கான அனுபவம்.
6. உங்கள் கையில் கட்டுப் பாட்டை வைத்துக் கொள்ளும் அளவுக்கு பரிசீலிக்கும் அளவுகோல்கள் (அனுபவம் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு சிறந்த மூன்று நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட வேண்டும்)
மாநில அளவில் அனுபவம் மற்றும் கூடுதலாக கணினி பயிற்சி மற்றும் டேட்டா என்ட்ரி அனுபவம்.

முதல் சுற்று முடிந்து விலை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு வரும் முன், மிகுந்த கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும். முதல் கட்ட பரிசீலனைக்குப் பின் சிறந்த மூன்று நிறுவனங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். மேலும் ஜீவன் மற்றும் ஸிக்மா நிறுவனங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் படக் கூடாது. அவர்கள் மிகக் குறைவான விலையை குறிப்பிடுவார்கள், அந்த விலைக்கு நாங்கள் குறைத்து குறிப்பிட முடியாது. இவர்களை வெளியே தள்ளுவதற்கான சிறந்த வழி முதல் கட்ட பரிசீலயின் போதுதான். ஜீவன் நிறுவனத்தை ஏற்கனவே இது போல முதல் கட்ட பரிசீலனையில் தள்ளி விட்டு விட்டோம், அவருக்கும் முதல் கட்ட பரிசீலனைக்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு வர முடியாது என்பது புரிந்து விட்டது. இரண்டே இரண்டு நிறுவனங்கள் இறுதி கட்டம் வரை வந்து விட்டால் பேச்சுவார்த்தைக்கு இரண்டு பேர்தான் வருவார்கள். எங்கள் நிறுவனத்தை போல ITFS data entry மற்றும் Linux training என்ற எல்லா டெண்டர்களிலும் விலை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் போது நாங்கள் தான் L1 ஆக இருப்போம். இந்த உத்தியையே நாம் போகஸ் டெண்டர் மற்றும் மேன்பவர் டெண்டரில் கையாள வேண்டும். இந்த இரண்டு டெண்டர்களையும் நாம் மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். மிகுந்த கட்டுப் பாடுகளை விதித்தால் தான் நாம் முன்னேற முடியும்.

போகஸ் டெண்டருக்கு ஒரு வேலைக்கான மதிப்பீட்டை ஒரு கோடிக்கு உயர்த்தினல் வெறும் நான்கு நிறுவனங்கள் தான் போட்டி போட இயலும். இறுதி கட்டத்திற்க 2 நிறுவனங்கள் தான் வரும். இதை பற்றி சிந்தியுங்கள் சார்.

நீங்களும் நாங்களும் ஒரு சிறந்த அணி இளங்கோ சார். உங்களின் திறமையைப் பார்த்தும், அனுபவத்தைப் பார்த்தும் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் சார். இதற்கெல்லாம் மேலாக நான் உங்களோடு மிகுந்த பாதுகாப்பாகவும், உணர்கிறேன் சார். நான் உங்களோடு உங்கள் வீட்டில் இருப்பது போலவும், உங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவும் உணர்கிறேன் சார். உங்களின் உதவிக்கு மிக்க நன்றி இளங்கோ சார். என்னுடைய இனிமையான கடவுளிடம் நமது இந்த அற்புதமான உறவை என்றென்றைக்கும் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் சார்.

அன்புடன்
கீதா


இதற்கு இளங்கோ பதில் எழுதுகிறார்.

நன்றி கீதா. ஒரு உறவு பலமாக இருந்து விட்டால், வெளிப்புற சக்திகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அதன் மீது தாக்கம் செலுத்தும் வரை அந்த உறவு நீண்ட காலம் தொடரும் என்றே நான் எண்ணுகிறேன். என்னுடைய இமேஜ் பாதிக்காத வரை, தொழில் ரீதியாக என்னால் இயன்றவற்றை நான் உங்களுக்கு செய்கிறேன்.

அன்புடன்

ஆர்.இளங்கோ
பொது மேலாளர் (பி)
எல்காட்
692, அண்ணா சாலை
நந்தனம்,
சென்னை 600035
தொலைபேசி 65512323

(இளங்கோ சார். நான் உங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல உணர்கிறேன். இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே. என்னா ஒறவு சார் அது ?)




மேற்கூறிய இரண்டு மின்னஞ்சல்களையும், ஒரு அப்பாவி ஊழியர், தற்போது எல்காட்டின் மேலாண் இயக்குநராக இருக்கும் சந்தோஷ் பாபுவுக்கு அவருடைய santynits@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறார்.



அவ்வளவுதான். என்ன நடக்கிறது தெரியுமா ? அந்த ஊழியருக்கு தண்டனை வழங்கப் பட்டு, பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார்.

இளங்கோ, கலர் டிவி கொள்முதல் செய்யும் பிரிவுக்கு மாற்றப் பட்டு கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார்.

இந்த ஆரஞ்சு எஜுகேஷன் என்னும் சன் ஐடெக் நிறுவனத்திற்கு தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 7200 மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் டெண்டர் வழங்கப் படுகிறது. இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பல்வேறு ஆர்டர்கள் இதே நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.



இந்த கேடு கெட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பாருங்கள் ?

இது தொடர்பாக தகவல் தொழில் நுட்ப செயலர் டேவிட் தாவிதாரிடம் புகார் கொடுக்கலாம் என்று பார்த்தால், இந்த நபர் மீது ஏற்கனவே வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு குற்றச் சாட்டு.

சரி அமைச்சரிடம் புகார் கொடுக்கலாம் என்றால், பூங்கோதை ஏற்கனவே லஞ்சப் புகாரில் சிக்கிய தனது உறவினருக்காக ஐபிஎஸ் அதிகாரி உபாத்யாயை போனில் தொடர்பு கொண்டு சிக்கியவர்.

இது போன்ற திருடர்களை கருணாநிதி நல்ல பதவி கொடுத்து அலங்கரிக்கிறார். எனக்கு ஒரு வீட்டு மனை, ஒரு Flat தவிர வேறு சொத்து எதுவுமே இல்லை என்று கூறும் ஐஏஎஸ் அதிகாரி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கு. எப்படி இருக்கிறது ?

கருணாநிதி அரசில்தான் இது போன்ற கேடுகெட்ட அதிகாரிகள் தலை கொழுத்து ஆடுகிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை தொலைபேசியில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி விசாரிக்காதே என்று மிரட்டிய ஸ்ரீபதிக்கு தலைமை தகவல் ஆணையர் பதவி. ஊரே நாம் இந்தப் பதவியை ஏற்பதை எதிர்க்கிறதே என்று கொஞ்சமும் சூடு சொரணை இல்லாமல் சிரித்துக் கொண்டே பதவி ஏற்கும் ஒரு ஜென்மம்.

மரியாதைக் குறைவாக எழுதியும் கூட வெட்கமில்லாமல் பதவியை தொடரும் தகவல் ஆணையர்கள்.

ஊழல் வழக்கில் எஃஐஆர் போட பரிந்துரைக்கப் பட்ட அதிகாரியை தலைமைச் செயலாளராக்கி அழகு பார்க்கும் ஒரு முதலமைச்சர்.

தனக்குத் தானே அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டு, அதை வைத்து வீட்டு மனை வாங்கும் ஒரு அயோக்கியத் தனமான ஐஏஎஸ் அதிகாரி.

ஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.

இதை விட கேவலமாக எழுத முடியாது என்று ஒரு மாநகர காவல்துறை ஆணையாளரைப் பற்றி எழுதிய பிறகும், நான் ஊழலுக்கு எதிரானவன் என்று தனக்குத் தெரிந்த பத்திரிக்கையாளரை வைத்து செய்தி வெளியிடும் ஒரு கேவலமான கமிஷனர்.

சரியாகத் தானே சொன்னான் பாரதி

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று..

ஒரு பேய்க் கூட்டமே அரசாண்டு கொண்டிருக்கிறதே… சாத்திரங்கள் பிணந்தின்னாமல் வேறு என்ன செய்யும் ?
சவுக்கு

Monday, September 6, 2010

துவைக்காத சாக்ஸும், கருணாநிதியும்.


இந்தத் தலைப்பு, பரபரப்புக்காகவோ, ஆர்வத்தை தூண்டுவதற்காகவோ வைக்கப் பட்டது அல்ல. துவைக்காத சாக்ஸ் எடுக்கும் நாற்றத்தை விட, மோசமான துர்நாற்றத்தை உருவாக்கக் கூடிய ஒரு சாக்ஸை கருணாநிதி விரும்பி அருகில் வைத்துக் கொண்டிருப்பது எப்படி என்பது குறித்துதான் இந்தப் பதிவு.

அந்த துவைக்காத சாக்ஸ் வேறு யாருமல்ல. சாக்ஸ் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப் படும், ஹன்ஸ்ராஜ் சக்சேனா தான் அந்த துவைக்காத சாக்ஸ்.




கடந்த வாரம், பரபரப்பாக வெளியான தாக்குதல் செய்திகளைப் பற்றி ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். இதன் பின்னணியும், இதற்குப் பிறகு நடந்த சம்பவங்களும், மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கக் கூடியதாக உள்ளன.




சன் டிவி. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்று ஊடகத்துறையையே விழுங்க அலைந்து கொண்டிருக்கும் இந்த ஆக்டோபஸின் மிக முக்கியப் புள்ளி தான் இந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

பூமாலை வீடியோ கேசட்டாக இருந்து சன் டிவியாக மாற்றம் பெரும் போது கேடி பிரதர்ஸ் சார்பில் போடப் பட்ட முதலீடு வெறும் இருபது லட்சம். ஆனால், அன்று தனது நண்பர்களுக்காக முதலீடு போட்டு, இந்த ஆக்டோபஸ் உருவாகக் காரணமாக இருந்த நபர் சரத் ரெட்டி. கேடி சகோதரர்களின் வகுப்புத் தோழர். சரத் ரெட்டி செய்த முதலீடு 80 லட்சம்.



இன்று தமிழ்நாட்டில் கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தி யாரென்று பார்த்தீர்களென்றால், அது இந்த கேடி சகோதரர்கள் தான். இந்த கேடி சகோதரர்கள், அணு குண்டு வெடித்தால் ஏற்படும் கதிரியக்கத்தை விட மோசமானவர்கள். அணுக்கதிர் வீச்சு, எப்படி பரவிய இடத்திலேல்லாம் சர்வ நாசத்தை ஏற்படுத்துமோ, பல ஆண்டுகளுக்கு புல் பூண்டு முளைக்காமல் செய்யுமோ, அதைப் போல மிக மோசமான விளைவை ஏற்படுத்துபவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.



கருணாநிதியே இந்த கேடி சகோதரர்களின் வலிமையைப் பார்த்துதான், அழகிரியின் அதிருப்தியையும் மீறி கண்கள் பனிக்கச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் வளர்ந்து, அந்த அரசியல் அதிகாரம் தந்த பலன்களையெல்லாம் அனுபவித்து, அதன் மூலம் அசுர வளர்ச்சி கண்டு முன்னேறிய பின்னர், குடும்பத்தில் பிணக்கு என்றதும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சலுகை விலையில் தினகரனில் விளம்பரம் போட்டவர்கள் இந்த கேடி சகோதரர்கள் தான். இதைக் கண்டுதான் கருணாநிதி பயந்தார். தன்னுடைய மகன்கள், இந்த அசுரர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தும், தயாநிதி மாறன் பேரவை என்று துவக்கி, கட்சியை கபளீகரம் செய்ய இவர்கள் செய்த முயற்சியையும் அறிந்தே கருணாநிதி இவர்களோடு சமாதானமாக போனார்.

தனது மகன்களுக்கு ஆத்திரம் இருக்கும் அளவுக்கு அறிவில்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருக்கிறார். இந்த கேடி சகோதரர்களின் ஆணவத்திற்கு ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர்கள் உதாரணமாக சொல்கிறார்கள்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது, தயாநிதி மாறனுக்கு இந்தக் தகவல் போகிறது. அப்போது அவர் மத்திய அமைச்சர். தயாநிதி மாறன் உடனடியாக உள்துறைச் செயலாளர் மாலதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது மதுரையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமா என்று கேட்டுள்ளார். மாலதி, இதை அப்படியே டேப் செய்து, கருணாநிதியிடம் போட்டுக் காட்டியுள்ளார். இதன் பிறகே கருணாநிதி வெகுண்டெழுந்து, மாறன் சகோதரர்களுடனான உறவை முறித்துக் கொண்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் தான் மாலதி பலரை முந்திக் கொண்டு இன்று தலைமைச் செயலாளராக உட்கார்ந்திருக்கிறார்.

கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவிக்கு ஆண்டுதோறும், சன் டிவி நிறுவனத்திலிருந்து வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா ? தலா 100 கோடி ரூபாய். இந்த 100 கோடி ரூபாயும் வெள்ளைக் கணக்கில். கருப்புக் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த கேடி சகோதரர்களை எதிர்க்க வலுவான நபர், அழகிரி என்றாலும் அழகிரிக்கு இந்த சகோதரர்களின் சாதுர்யம் இல்லாததால், இவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியவில்லை.

80 லட்ச ரூபாய் முதலீடு செய்து, சன் ஆக்டோபஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சரத் ரெட்டி, கேடி சகோதரர்களால் விரட்டியடிக்கப் படுகிறார். விரட்டியடிக்கப் பட்ட அவர், ஆந்திரா சென்று வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அந்தச் சூழலில் குடும்பம் பிரிந்து கலைஞர் டிவி என்ற ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் படுகிறது. முடிவெடுத்தவுடன், ஆற்காடு வீராச்சாமி ஆந்திரா சென்று, சரத் ரெட்டியைச் சந்தித்து, உடனடியாக கலைஞர் டிவிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன் படி சரத் ரெட்டி கலைஞர் டிவியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

சரத்ரெட்டி எதிரி முகாமுக்கு தலைமை ஏற்கிறார் என்றதும், கேடி சகோதரர்கள் மீண்டும் சரத் ரெட்டியை அணுகி சன் டிவிக்கு வேலைக்கு வருமாறு வெட்கமில்லாமல் கேட்கின்றனர். ஆனால் சரத் ரெட்டி மறுத்து விடுகிறார்.

டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கருணாநிதி “இதயம் இனித்தது. கண்கள் பனித்தது“ என்கிறார். இது நடந்த மறு நாளே கேடி சகோதரர்கள், சரத் ரெட்டியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு செல்கின்றனர். குடி போதையில் எங்களையாடா எதிர்க்கிறாய் என்று சரத் ரெட்டியை பின்னி எடுக்கிறார்கள். சரத் ரெட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. கலாநிதி மாறன் ஒரு பக்கமும், காவேரி கலாநிதி மறு பக்கமும், சரத் ரெட்டியை கைத் தாங்கலாக அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

அன்று அந்த சம்பவம் ஊடகங்களில் வெளி வரவே செய்தன. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் இது குறித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், கருணாநிதி மவுனச் சாமியார் போல உட்கார்ந்திருந்தார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்று கருணாநிதி தனது பேரன்கள் என்று பார்க்காமல், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பாரே யானால், இன்று தனது பேரன்களின் அல்லக்கையான துவைக்காத சாக்ஸ் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருக்குமா ?



அந்த ஞாயிறு அன்று இரவு என்ன நடந்தது. நீலாங்கரையில் ஒரு பண்ணை வீட்டில் கலாநிதி மாறன் ஒரு ரேவ் பார்ட்டி நடத்துகிறார். அந்த ரேவ் பார்ட்டியில், சன் டிவியின் சிஇஓ துவைக்காத சாக்ஸும், சன் நியூஸ் எடிட்டர் ஆர்எம்ஆரும் கலந்து கொள்கிறார்கள். பார்ட்டி முடிந்து வெளியே வரும் போது கார் மற்றொரு கார் மீது மோதி ஒரு சிறு விபத்து ஏற்படுகிறது. துவைக்காத சாக்ஸும், ஆர்எம் ரமேஷூம் “நிதானத்தில்“ இருந்ததால் அந்த மோதிய கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.



அந்த வாக்குவாதம் கை கலப்பில் முடிகிறது. அந்தப் பெண்ணின் தம்பி சித்தார்த்தையும், அந்தப் பெண்ணையும் தாக்க முயல்கிறார்கள். இருவரும் தப்பி தங்கள் வீட்டுக்கு ஓடுகிறார்கள். அங்கே இருந்த அவர்கள் காரை அடித்து சேதப் படுத்தியதோடு அவர்கள் வீட்டுக்குச் சென்று காரையும் வீட்டையும் அடித்து சேதப் படுத்தி அந்தப் பெண்ணையும் தாக்குகிறார்கள். அவரின் தம்பி சித்தார்த் தலைமறைவாகிறார்.

இந்தத் தாக்குதலில் துவைக்காத சாக்ஸின் ஆத்திரம் அடங்காததால் அந்த சித்தார்த்தின் நண்பரும், ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன் வினோஜ் செல்வம் நடத்தும் செக்கர்ஸ் ஓட்டலுக்கு ஏராளமான அடியாட்களை அழைத்துச் சென்று ஒரு பெரும் தாக்குதலை துவைக்காத சாக்ஸ் நடத்துகிறார்.



இந்தத் தகவல், இரவு ட்யூட்டியில் இருந்த மீடியா நிறுவனங்களுக்குத் தெரிந்து, அனைவரும் தாக்குதலை படம் பிடிக்கின்றனர். இது தவிரவும், அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் முழுமையாக பதிவாகிறது.

மறு நாள் ஜெயா டிவியில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகிறது. ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் பெரியதாக செய்தி வெளியிடுகின்றன.



இந்தச் செய்திகளை பார்த்ததும் வேறு வழியின்றி, கண்ணாயிரம் எஃப்ஐஆர் பதியச் சொல்லி உத்தரவிடுகிறார்.



துவைக்காத சாக்ஸ் முதல் எதிரியாக குறிப்பிடப் படுகிறார். இரண்டு வழக்குகள் பதியப் படுகின்றன.

ஆனால் வழக்கு பதியப் பட்டதும், துவைக்காத சாக்ஸ் எங்கிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தும், கண்ணாயிரம் அவரைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு சில ஆட்டோ டிரைவர்களை கைது செய்யச் சொல்லுகிறார். அதன் படி ஒரு பத்து ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

ஆனால் இதற்குப் பிறகு, இந்த துவைக்காத சாக்ஸ் ஜெயா டிவிக்கும் மற்ற ஊடகங்களையும் தொடர்பு கொண்டு, தன்னைப் பற்றிய செய்திகளை போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயா டிவி தரப்பிலும், நம் தினமதி தரப்பிலும், இது மறுக்கப் படுகிறது.

தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்று சொல்லிக் கொள்ளும் வாரமிருமுறை இதழ், துவைக்காத சாக்ஸ் விஷயத்தில் தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது. மீறி துடித்தால், விகடன் டாக்கீஸின் தொலைக்காட்சித் தொடர்களுக்கும், அந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கும் ஆபத்து என்பதால் அதைப் பற்றி மூச்ச விடவில்லை.



துவைக்காத சாக்ஸ் இந்தியாவில் இருந்தால் ஒரு வேளை கைது செய்யப் படுவோமோ என்று அஞ்சி, வெளி நாட்டுக்கு கிளம்புகிறார். இவர் கிளம்புவது பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும் போது கண்ணாயிரத்திற்கு தெரியாதா ? ஆனால் கண்ணாயிரம் நிம்மதியாக கண்ணயர்ந்திருக்கிறார்.




துவைக்காத சாக்ஸ் வெளி நாட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தும்மியதற்குக் கூட வளைத்து வளைத்து கைது செய்த கருணாநிதியின் காவல்துறை, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்காக பலரை தேசத் துரோக வழக்கில் கைது செய்த காவல்துறை, கருப்புக் கொடி காட்டியதற்காக கடுமையாக தாக்கிய காவல்துறை, ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கி, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஒருவர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருக்கிறது.

அன்று கேடி சகோதரர்கள் சரத் ரெட்டியை அடித்து காலை முறித்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கேடி சகோதரர்களின் அல்லக் கைக்கு இந்தத் தைரியம் வந்திருக்குமா ?



கேடி சகோதரர்களின் அல்லக்கை மீதே நடவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துணிவில்லை என்றால், கேடி சகோதரர்கள் செய்யும் அத்தனை காரியங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருப்பார் ?

இந்த துவைக்காத சாக்ஸ் எழுப்பும் துர்நாற்றத்தை கருணாநிதி சகித்துக் கொண்டு அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், இந்த துர்நாற்றத்தில் கருணாநிதிக்கு மிகுந்த உடன்பாடு என்று தானே பொருள் கொள்ள முடியும் ?


ஒரு நபர் ரவுடிகளை கூட்டிச் சென்று ஒரு நட்சத்திர விடுதியை அடித்து நொறுக்கி விட்டு, பத்திரமாக அவர் பெயரில் எஃஐஆர் நிலுவையில் இருக்கும் போது வெளி நாட்டுக்கு தப்பிச் செல்ல முடிகிறதென்றால், கருணாநிதி ஆட்சியில் உங்களுக்கும் எனக்கும் என்ன பாதுகாப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.

கருணாநிதிக்கு இதையெல்லாம் விட, குஷ்பூவின் புருஷன் எப்போது திமுகவில் சேர்ந்து திராவிட இயக்கத்தை வளர்ப்பார் என்று ஆர்வமும் கவனமும் இருக்கும் போது, இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறதா என்ன ?

சவுக்கு

Sunday, September 5, 2010

அடுத்து என்ன செய்வது ?


சவுக்குக்கு எழுதிய பின்னூட்டத்தில் ஒரு அன்பர்,

“சவுக்கிடம் ஒரு கேள்வி,, சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர்,
savukku and Team Should answer this Question ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி,இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ?
What is next Step ? What we want to do Next ? “

என்று கேட்டிருந்தார்.

சமீபத்தில் சந்தித்த ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாளர் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்க வைப்பது. வெற்றிகரமான பத்திரிக்கையாளராக இன்று வரை இருந்து வரும் அவர், விரைவில் பத்திரிக்கை தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லப் போகிறேன் என்று கூறினார்.

ஏன் என்று கேட்டதற்கு, நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தொடக்கத்தில் நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்த போது, இந்தச் சமுதாயத்தையே மாற்றிப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். ஆனால் நாளடைவில் பத்திரிக்கை தொழிலில் இருந்து கொண்டு அது போல எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து, ஏதோ நம்மால் இயன்றவற்றை செய்யலாம் என்று தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பாவது பத்திரிக்கையில் எழுதினால் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். நடவடிக்கை இருக்கும். ஆனால் இப்போது சூழல் மிக மோசமாக மாறி விட்டது. ஆதாரத்தோடு பத்திரிக்கையில் எழுதினால் கூட எதுவுமே நடக்க மாட்டேன்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ரோடு சரியில்லை, விவசாயிகள் பிரச்சினை, காவல்துறையிலும் மற்ற துறைகளிலும் ஊழல் என்று நான் எழுதியது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றும், சாலை சரியில்லை, ஊழல் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, நான் எதற்காக பத்திரிக்கை துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் ? ஜனங்களே காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலைக்கு சமுதாயம் சீரழிந்து விட்ட நிலையில் வேறு ஏதாவது நேர்மையான தொழில் செய்து பிழைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்வி, சவுக்கை சிந்திக்க வைத்தது.

இருபது ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் பின்னோக்கித் தானே செல்கிறது ? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்ணாவிரதம் இருக்கவும், ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் இருந்த உரிமைகள் கூட இன்று இல்லையே ?

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது எழுந்த முந்த்ரா ஊழலால், டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேரிட்டதே. ஒரே ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினாரே.. …. ?

25 ஆண்டுகளுக்கு முன்பு கூட, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற குற்றச் சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகினாரே ?

இன்று என்ன நிலை ? சட்ட விரோதமாக எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வந்த போதும் குறைந்த பட்சம் குற்றம் சாட்டப் பட்ட நபரை அந்தப் பதவியை விட்டு மாற்றுவதற்கு கூட கருணாநிதி தயாராக இல்லை. மாற்றுவதற்கு தயாராக இல்லாததால், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பின் பின்னணியில் உள்ளது கருணாநிதி தானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் புற்று நோயைப் போல, அனைத்து இடங்களிலும் புரையோடிப் போய் இருக்கிறது. ஆனால் இந்த ஊழலோடு சமரசம் செய்து கொண்டு, இந்த ஊழலில் நாம் எப்படி பங்கு பெறுவது என்ற ஆர்வத்தோடு உள்ளது நமது சமூகம். இப்படிப் பட்ட சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் ?

காந்தி படத்தில் ஒரு காட்சி வரும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வெள்ளையர் அல்லாதவர்களுக்காக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார். அந்த போராட்டத்தில் காந்தி கடுமையாக தாக்கப் படுவார். அதையொட்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்.

காந்தி தாக்கப் பட்டதையும், கைது செய்யப் பட்டதையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தியாக வெளியிடும். இதைக் கண்ட தென்ஆப்பிரிக்க ஆங்கிலேய அரசாங்கம், உடனடியாக காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்து உத்தரவிடும்.

இன்று ஊடகங்கள் இருக்கும் சூழலை எண்ணிப் பாருங்கள். எண்பது விழுக்காடு பத்திரிக்கைகள் கருணாநிதியின் கட்டுப் பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில் கருணாநிதியை மீறி ஊடகங்களில் செய்தி எப்படி வெளி வரும் ? மீதம் உள்ள இருபது விழுக்காடு ஊடகங்கள் எதிர்க்கட்சி ஊடகங்களாக இருப்பதால் அதற்கான நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

அதையும் மீறி ஏதாவது ஊடகத்தில் அரசுக்கு எதிரான செய்திகள் வருமானால், அதை எழுதிய செய்தியாளரைப் பற்றியும், அவர் சாதியைப் பற்றியும், விலாவரியாக ஆராய்ந்து, முரசொலியிலேயே, படிக்கக் கூசும் அளவுக்கு, சிலந்தி, காராபூந்தி என்று ஏதாவது ஒரு பெயரில் எழுதுவது.

இதுதானே இன்றைய சூழல் ? இன்று சவுக்கு தளத்தில் வெளிவரும் குற்றச் சாட்டுகளை வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயாராக இருக்குமேயானால் சவுக்கு என்ற தளம் எதற்கு ?

அரசியல் சீரழிந்து விட்டது. ஊடகங்கள் தரம் தாழ்ந்து தங்களது சுதந்திர மன நிலையை இழந்து விட்டன. நம்பகத் தன்மையை இழந்து விட்டன. சரி நீதிமன்றத்திலாவது நியாயம் கிடைக்குமா என்றால், இது எல்லாவற்றையும் விட, மோசமான சூழலில் தான் நீதிமன்றம் இருக்கிறது.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் மொழி வளரவில்லை என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு எப்படி வேண்டுமானாலும் வரி விலக்கு வழங்கலாம் என்று தீர்ப்பு.

போலி என்கவுண்டரில் தொடர்ந்து படு கொலைகள் நடந்து வருகின்றன என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் மார்ச் மாதத்தில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், இது குறித்து மத்திய அரசுக்கு புகார் அனுப்பவும் என்று தீர்ப்பு.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் ஒரு நபர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு நியமித்துள்ள ஆர்.டி.ஓ விசாரணையை நம்பி, பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் உயர்நீதிமன்றம்.

அணு உலை நஷ்ட ஈடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு நோட்டீஸ் கூட வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் இருக்கும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், பத்திரமாக டக்ளஸ் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் வரை, வழக்கை தள்ளி வைத்து விட்டு, இலங்கை சென்றவுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமை நீதிபதி.

கருணாநிதிக்கு வண்டி தள்ளுபவர்கள் திடீரென்று ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் கட்டுகிறார்கள். அது ஊழல் செய்து சம்பாதித்த சொத்தாக இருக்கும் அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால் விசாரணை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்கள் மூன்று பேரும் அந்த மனையை “கை மாற்றி“ விட்டு விட்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறும் ஒரு நீதிபதி.

பள்ளிக் கட்டணத்தை சீரைமைக்க அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தடை விதிக்கக் கோரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், மாணவர்கள் சார்பில் ஒரு பொது நல விரும்பி, அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டி அணுகிய போது, கோவிந்தராஜன் கமிட்டி வருவதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று கேட்கும் ஒரு பொறுப்பற்ற நீதிபதி.

இந்தச் சூழலில் தான் நாம் இருக்கிறோம். நமக்கு முன்னே இப்போது இருப்பது ஒரு சில வழிகள் தான்.

ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது

இரண்டு, கொள்ளையடிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது.

இந்த அநியாயங்களை காணச் சகியாமல், அஷோக் குமார் போல தற்கொலை செய்து கொள்வது.

அல்லது, எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.

இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய தாராளமய பொருளாதார சூழலில், எந்த வழியிலாவது உடனடியாக பணக்காரனாக வேண்டும், ஊரை அடித்து உலையில் போட்டாவது நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 98 சதவிகித மக்களின் மனநிலை உள்ள சூழலில் எழுதுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தொடர்ந்து போராடுவதையும் தவிர வேறு என்னதான் செய்வது என்று சவுக்குக்கு தெரியவில்லை. சவுக்கின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும் தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சவுக்கு

Saturday, September 4, 2010

ரட்சிக்கப் பட்ட ஜெகதரட்சகன்.



ஜெகதரட்சகன். இந்தப் பெயர் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, வன்னியர் சங்க தலைவர் என்ற வகையில், அங்கங்கே சுவர் விளம்பரங்களில் மட்டும் தென்படும். வன்னியர் சமுதாயத்தில் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு ஒன்றும் இல்லை. கருணாநிதி, இவரை ராமதாசின் செல்வாக்கை உடைப்பதற்கென்று பயன் படுத்திக் கொண்டார்.

தேர்தல் நேரத்தில் ஜெகதரட்சகனும் தனது சங்கத்தை கலைத்து விட்டு, திமுகவுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆக ஆனார்.

எம்.பி ஆக ஆனதும், பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கும் வகையில் மந்திரி சபைக்கு பரிந்துரைக்கப் பட்டார் ஜெகதரட்சகன்.

திமுக எம்.பியாக ஆகும் முன், ஜெகதரட்சகன், “கல்வித் தந்தையாக“ இருந்தார். அவரின் பாலாஜி பல்மருத்துவக் கல்வி மூலமாக கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். வெறும் கல்வி வியாபாரத்தின் மூலமாக பெரும் செல்வத்தை ஈட்ட முடியாது என்பதால், தற்போது தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக மட்டுமல்லாமல், “கருணாநிதி பாராட்டு விழா துறையையும்“ கூடுதலாக கவனித்து வருகிறார்.

இப்படிப் பட்ட ஜெகதரட்சகன் கடந்த ஆண்டு ஜுன் 2009ல் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனம், வியாபாரமாகும் கல்வியை படம் பிடித்துக் காட்ட ஒரு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. (இதற்கு நல்ல தமிழ் வார்த்தைகள் இருந்தால் அறிஞர்கள் கூறவும்) இந்த ஆபரேஷனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிக்கியது இரண்டு கல்லூரிகள். ஒன்று ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகம் மற்றொன்று, ஜெகதரட்சகனின் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி.



ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் கேமரா முன்பு ஒருவர் மருத்துவ மேல்படிப்புக்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று பேரம் பேசி சிக்குகிறார். பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் பல் மருத்துவக் கல்விக்கான இடத்துக்கு இதே போல பேரம் பேசி சிக்குகிறார்.

இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து, மத்திய அரசிடமிருந்து இந்தக் கல்லூரிகளிடம் அறிக்கை கேட்பதும், விசாரணைக்கு உத்தரவிடுவதும் என நடவடிக்கைகள் தூள் பறந்தன. அதன் பிறகு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாயே சிபிஐ வலையில் சிக்கியதும், இந்த விவகாரம் மறக்கப் பட்டது.

இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வராமலே நடந்தேறியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தக் கல்விக் கட்டணக் கொள்ளையையும், மருத்துவ சீட்டுகளை ஏலம் போடும் விஷயத்தையும், விசாரிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவெடுத்தது உண்மையே. இதற்காக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டது. சிபிஐ ஒரு விஷயத்தில் விசாரணை நடத்த வேண்டுமென்றால், சம்பந்தப் பட்ட மாநில அரசின் ஒப்புதல் வேண்டும். இதற்கான கடிதத்தை மத்திய புலனாய்வு நிறுவனம், மாநில அரசிடம் அளிக்கிறது.

இந்த கடிதம் மாநில அரசை வந்து அடைந்த போது ஒரு சுவையான நிகழ்வு நடக்கிறது.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தின் வேந்தர் வெங்கடாச்சலத்துக்கும் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்டுக்கும் ஒரு மனத்தாங்கல் ஏற்படுகிறது. ஜாபர் சேட்டின் அதிகாரத்தை மதிக்காமல் வெங்கடாச்சலம் நடந்து கொள்கிறார் என்று நினைத்த ஜாபர் சேட், வெங்கடாச்சலத்துக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க நினைக்கிறார்.

விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி கேட்டு வந்த சிபிஐ கடிதம் உள்துறை செயலரை அடைந்த உடன், உள்துறை செயலர் மாலதியும் ஜாபர் சேட்டும் இதைப் பற்றி விவாதித்து, இந்த விசாரணை நடந்தால், திமுக அமைச்சர் ஜெகதரட்சகனை இது பாதிக்கும் என்று தெரிந்தும், கருணாநிதிக்கு தெரியாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்கள். இதற்கான ஆணை அரசாணை எண் 593 உள்துறை நாள் 25.06.2010ல் வெளியிடப் படுகிறது.

இந்தத் தகவல் அறிந்த வெங்கடாச்சலம், ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர் மூலமாக கருணாநிதியை அணுகுகிறார். கருணாநிதி ஜாபரை அழைத்து என்ன விபரம் என்று கேட்கிறார்.

ஜாபர் சேட்டும் மாலதியும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்காவிட்டால் மாநில அரசுக்கு மிகுந்த கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறுவதை கேட்டு கருணாநிதி அமைதியாகிறார்.

இதற்கு முன்பு, இந்த ஸ்டிங் ஆபரேஷன் நடந்த போது, பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி சார்பில் கேமராவில் பணம் கேட்டு சிக்கியவர்கள் இருவர். ஒருவர் ஜான்சன். மற்றொருவர் லட்சுமி. இந்த இருவரும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அலுவலகர்கள் (Administrative Officers). இந்த இருவர் மீதும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், இவர்கள் இருவரும் நிர்வாகத்திற்கே தெரியாமல் ஏமாற்றி பணம் வாங்கி விட்டதாக ஒரு புகாரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்கின்றனர்.

இந்தப் புகார் குரோம் பேட்டை காவல் நிலைய குற்ற எண் 290/2009 என்ற எண்ணில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 511 (குற்றம் செய்ய ஆயத்தம் செய்தல்) ஆகிய இரு பிரிவுகளின் பதிவு செய்யப் படுகிறது.

விசாரிக்க மாநில அரசின் அனுமதி அனுமதி கேட்ட கடிதம் வந்த உடனேயே, அவசர அவசரமாக குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி அளித்த புகாரில் ஜான்சன் மீதும் லட்சுமி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கின்றனர். இந்தக் குற்றப் பத்திரிக்கை தாம்பரம் இரண்டாம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படுகிறது. இந்த வழக்கு எண் சி.சி. 528/2010.


சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு அனுமதி அளித்த விவகாரம் ஜெகதரட்சகனுக்கு தெரிய வருகிறது. ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய ஜான்சன் மற்றும் லட்சுமியை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் படுகிறது. இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே எங்கள் மீது குரோம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடரப் பட்டு விட்டது. அதனால், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 22.07.2010 அன்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறது.

இதற்கு நடுவே தாம்பரம் இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் லட்சுமி மற்றும் ஜான்சன் மீதான வழக்கு 13.08.2010 அன்று விசாரணைக்கு வந்த போது இவருவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். குற்றவாளிகள் இருவருக்கும் நீதிபதி தலா ரூ.5000/- அபராதம் விதித்து வழக்கை மூடுகிறார்.

இது போலவே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சார்பில், போரூரிலும் ஒரு புகார் வழங்கப் பட்டு அதுவும், இதே போல மூடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

இதில் தப்பித்தாலும், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, 1500 கிலோ தங்கப் புகழ் கேதன் தேசாய் மீதான வழக்கு விசாரணையில் சிபிஐ, அந்தக் கல்லூரி உரிமையாளரை நெருக்கும் போது, அந்த வலையில் ஜெகதரட்சகனும் வருவார் என்று தெரிகிறது.

ஒரு போக்குவரத்துக் காவலர், 200 ரூபாய் லஞ்சம் வாங்கி விட்டார் என்றால் அவரை இடை நீக்கம் செய்து, அவரை கைது செய்து, அவர் மீது, நீதிமன்ற வழக்கு, துறை நடவடிக்கை என்று அவரின் வாழ்க்கையை நாசம் செய்யும், இந்த அரசுத் துறையும், நீதித் துறையும், சமூகத்தில் பெரிய மனிதர்களை காப்பாற்ற எப்படி கூட்டு சேர்ந்து வேலை செய்கிறது என்று பாருங்கள்.

லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மீது என்ன குற்றச் சாட்டு தெரியுமா ? கேதன் தேசாயோடு சேர்ந்து கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கு எந்த விதமான வசதியும் செய்து கொடுக்காமல், வசதிகள் இருப்பது போன்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்து, லஞ்சம் பெற்றுக் கொண்டு, கூட்டுச் சதியில் ஈடுபட்டு, மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி பெற்று நடத்தி வந்துள்ளனர் என்பதுதான் அந்தக் குற்றச் சாட்டு.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐக்கு, ஆகஸ்டு 17 அன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. தடை விதித்த நீதியரசர் வேறு யாருமல்ல ? நமது சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நீதியரசர் சி.டி.செல்வம் தான் அது. சவுக்கு வாசகர்களின் நினைவுக்காக அந்த நீதியரசரின் படத்தை சவுக்கு மீண்டும் ஒரு முறை வழங்குகிறது.



வெறும் பேச்சோடு நிற்பது சவுக்குக்கு பிடிக்காது. செயலிலும் இறங்க வேண்டும் அல்லவா ? அதனால், தமிழக மக்கள் உரிமைச் கழகம் சார்பாக, மத்திய புலனாய்வுத் துறைக்கு விரிவான புகார் ஒன்று அனுப்பப் பட இருக்கிறது.

சவுக்கு

Friday, September 3, 2010

ஜோசப் ஃபெலிக்ஸுக்கு ஒரு கடிதம்



சவுக்கு இன்று மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டுள்ளது. சவுக்கை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும், சவுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது. திட்டினாலும், அநானியாக வந்து அவதூறு பேசினாலும் அவர்களும் சவுக்கு வாசகர்கள் தானே ? அந்த வாசகர்களின் ஆதரவு இல்லாமல் சவுக்கு ஏது ?

நிற்க. 21 ஏப்ரல் 2009ல் தொடங்கிய சவுக்கு, அவ்வளவாக பிரபலமில்லாமல் தான் இருந்தது. காவல்துறையினரைப் பற்றிய சில பிரத்யேக செய்திகள் வந்தவுடன், காவல்துறையினரால் கவனிக்கப் பட்டது. மெள்ள மெள்ள சவுக்கு வாசகர் வட்டம் விரிவடைந்து கொண்டே இருந்த நிலையில் தான், அருமை நண்பர், ஜாபர் சேட், பல கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத விளம்பரத்தை சவுக்குக்கு தேடிக் கொடுத்தார். ஒரு பொய் வழக்கு சவுக்கை பல ஆயிரம் வாசகர்களிடம் ஒரே நாளில் சேர்த்தது. பல ஆயிரம் வாசகர்கள் சேர்ந்தாலும், சவுக்குக்கு பெரும் மகிழ்ச்சி, காவல்துறையில், கீழ் நிலையில் உள்ள காவலர்களும், தலைமைக் காவலர்களும், தங்கள் உயர் அதிகாரிகளைப் பற்றி வரும் செய்திகளை படித்து மகிழ்வது தான். தங்களால் செய்ய முடியாததை யாரோ ஒரு முகம் தெரியாதவன் செய்கிறான் என்ற மகிழ்ச்சியை, உளவுத் துறையிலேயே பணியாற்றும், காவலர்கள், மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களிடம் காண முடிந்தது. என்னவெல்லாம் சொல்லி என்னைத் திட்டியிருப்பாய். இப்போது பார், உன்னை ஒருவன் கிழி கிழியென்று கிழிக்கிறான் என்று அவர்கள் மகிழும் போது, சவுக்குக்கு இதை விட பெரும் மகிழ்ச்சி வேறு என்ன கிடைக்க முடியும் ?

மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு உதவி செய்த ஜாபர் சேட்டைப் பற்றி எழுதாவிட்டால், பொருத்தமாக இருக்குமா ? அதற்காகத் தான் இந்தப் பதிவு.



ஜோசப் ஃபெலிக்ஸ் என்றதும், யாரது புதிய கேரக்டராக இருக்கிறதே என்று சவுக்கு வாசகர்கள் வியக்கக் கூடும். இவர் நமக்கு புதிய கேரக்டர் தான். ஆனால் ஜாபர் சேட்டுக்கு ரொம்ப பழைய கேரக்டர். அவர்தான் ஜாபர் சேட்டின் பள்ளி ஆசிரியர். அந்த ஆசிரியர் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரிதான் தெரிகிறார். ஆனால் இப்படி ஒரு தறுதலை மாணவரை எப்படி அவர் உருவாக்கினார் என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம். சவுக்கு உட்பட. அதனால் அவருக்கே ஒரு மனந்திறந்த மடல் எழுதி கேட்டு விடலாம் என்று சவுக்கு முடிவெடுத்துள்ளது.




அன்புள்ள அய்யா ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களுக்கு,

சவுக்கு எழுதிக் கொள்வது. தாங்கள் நலமாக இருக்கிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால், தமிழக மக்களும், சவுக்கும் நலமாக இல்லை. இந்த நலமின்மைக்கு காரணம், நீங்கள் உருவாக்கிய தறுதலை மாணவர் ஜாபர் சேட் என்ற சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

நீங்கள் சவுக்கை தொடர்ந்து படித்து வந்திருப்பீர்களேயானால், உங்கள் மாணவன் யார் என்பதும், அவரது வண்டவாளங்கள் என்ன என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் சவுக்கு படிப்பதில்லை என்றுதான், உங்கள் நண்பர்கள் சொல்கிறார்கள். சவுக்கை படிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னால், உங்களுக்கு இணையம் பரிச்சயம் இல்லை என்று சொல்கிறார்கள் உங்கள் பழைய மாணவர்கள். இந்த மனந்திறந்த மடல் உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையிலேயே சவுக்கு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறது.

நீங்கள், நல்லதையே உருவாக்கியிருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையில் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷ விருட்சத்தை வளர்த்து உள்ளீர்கள் என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

சமீபத்தில் திண்டுக்கல்லில் உங்கள் பள்ளியில் நடந்த விழாவில் பவ்யமாக உங்களை வகுப்பு எடுக்கச் சொல்லி விட்டு, “ரெக்கார்ட் டான்ஸை” வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்திருக்கிறாரே…. ?



அந்த ஜாபர் சேட், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நமது அழைப்பை ஏற்று உடனடியாக பள்ளி விழாவுக்கு வருகை தந்துள்ளாரே என்று நீங்கள் பெருமை பட்டிருக்கக் கூடும். அவர் வந்தது பள்ளி விழாவுக்கா, திண்டுக்கல் ”மோட்டலில்” பஞ்சணையில் பள்ளி கொள்ளவா என்பதை உங்கள் மாணவரிடமே கேளுங்கள். அவரிடம் பதில் இருக்காது.



ஊருக்கெல்லாம், ரமலான் நோன்பிருக்கும் ஒரு நல்ல அதிகாரி போல வேஷம் போட்டுக் கொண்டு, திண்டுக்கல் மோட்டலில் என்ன செய்தார் என்பதை கேளுங்கள் உங்கள் மாணவரிடம். ஆனால், ”அதற்கும்” ரகசிய நிதியைப் பயன்படுத்தினார் என்பது எவ்வளவு கேவலமான விஷயம் ? அவர் எத்தனை மணிக்கு மோட்டலுக்குள் சென்றார், எத்தனை மணிக்கு வெளியில் வந்தார், மோட்டல் அறைக்குள் என்ன செய்தார், என்ன பேசினார் என்பது உட்பட சவுக்குக்குத் தெரியும் என்றாலும், அதையெல்லாம் சவுக்கு எழுத விரும்பவில்லை.

இவர் மாநில உளவுப் பிரிவு தலைவராக இருக்கலாம். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டன்றோ ?

அய்யா ஆசிரியரே….. என்னதான் கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?

ஆசிரியர்கள் என்பவர்கள் இந்த தேசத்தை கட்டுபவர்கள் என்பது சவுக்கின் கருத்து. சவுக்கு, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு படிக்கும் போது, கேஎன்டி என்று அழைக்கப் படும், கே.என்.தேசிக்காச்சாரி அவரது ஒரு பயண அனுபவத்தைச் சொன்னார். அது இன்று வரை சவுக்கின் வாழ்வை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அவர், திருச்சிக்கு அவசர வேலையாக செல்ல வேண்டியிருந்தது. அப்போது ரயிலில் அவ்வளவாக கூட்டம் இல்லையென்றாலும், முன் பதிவு செய்ய அவருக்கு அவகாசம் இல்லை. அதனால், முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு, ரயிலில் ஏறுகிறார். ரயிலில் பல பெர்த்துகள் காலியாக இருந்தாலும், டிக்கட் பரிசோதகருக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெர்த் கிடைக்கும் என்ற நிலை.

அந்த தேசிக்காச்சாரி என்ன செய்தார் தெரியுமா ? கையில் வைத்திருந்த இந்து நாளிதழை (இந்து நாளிதழுக்கான சரியான பயன்பாடு) தரையில் விரித்து, ஒரு ஜெப்ரி ஆர்ச்சர் நாவலை படித்துக் கொண்டே பயணத்தை முடித்து விட்டதாக கூறினார். சவுக்கு அவரிடம் ”ஏன் சார் டிடிஆருக்கு லஞ்சம் கொடுத்து பெர்த் வாங்கவில்லை (அப்பவும் இதே அதிகப் பிரசங்கித் தனம்) என்று கேட்ட போது அவருக்கு நான் கொடுக்கும் லஞ்சத்தை நான் நியாயப் படுத்தினால், உங்களுக்கு ட்யூஷன் வைத்து லஞ்சம் வாங்குவதும் எனக்கு நியாயமாகப் படும், இது என்னைத் தொடர்ந்து பல ஊழல்களைப் புரிவதற்கு தயார் படுத்தும் என்று கூறினார்.

அது இவ்வளவு தெளிவாக அப்போது புரியாவிட்டாலும், லஞ்சம் கொடுப்பதும் தவறு என்பதை ஏறக்குறைய சவுக்குக்கு அப்போது புரிய வைத்தவர் கே.என்.தேசிக்காச்சாரி. பின்னர் ஒரு நாள் பள்ளிக்கு அவரைக் காண சென்ற போது அவர் இறந்து விட்டார் என்று செய்தி கிடைத்தது.

ஆனால் ஃபெலிக்ஸ் அய்யா, நீங்கள் ஒரு மிக மிக மோசமான ஒரு அயோக்கியனை மாணவனாக உருவாக்கி, இந்த தேசத்தில் நடமாட விட்டிருக்கிறீர்கள் என்றே சவுக்கு கருதுகிறது.

இவ்வளவு திறமையாக ஒட்டுக் கேட்பை செய்யும் இந்த நபர் தனது ஒட்டுக் கேட்கும் கலையை பள்ளிப் பருவத்திலேயே தொடங்கியிருப்பார் என்றே சவுக்கு கருதுகிறது.

அவர் வகுப்பில் படிக்கும் போதே இது போல ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டாரா என்பதை நீங்கள்தான் அய்யா தெளிவு படுத்த வேண்டும்.

கக்கூஸை புதுப்பிக்க ரகசிய நிதி, வாஸ்து மீன் வாங்க ரகசிய நிதி, சோபா செட் வாங்க ரகசிய நிதி, மளிகை சாமான் வாங்க ரகசிய நிதி, ஒட்டுக் கேட்க ரகசிய நிதி, சொத்து வாங்கிப் போட ரகசிய நிதி என்று ரகசிய நிதியை தனது நிதியாக, கருணாநிதி போல செலவு செய்ய நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

அய்யா நீங்கள் ஒரு கிறித்துவர். ஏசுபிரான், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொல்லியிருக்கிறார். உங்களில் எவன் பாவஞ் செய்யாதவனோ, அவன் இவள் மீது முதல் கல்லேறியட்டும் என்று ஒரு விலைமகளை பாதுகாத்திருக்கிறார். அப்படிப்பட்ட கிறித்துவ மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆசிரியரான நீங்கள் உருவாக்கிய மாணவனா 30க்கும் மேற்பட்ட உயிர்களை போலி என்கவுண்டரில் பறித்தது ? என்ன அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?

தனக்கு தொழில் பங்குதாரராக இருந்தால் பல காரியங்கள் நடக்கும் என்று தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, அவரோடு நட்பு பாராட்டி, அவரால் பல காரியங்களை சாதித்து விட்டு, ஆளுநர் மாளிகை இடைத்தரகர் நஜிமுத்தீன், கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் மனைவியோடு சேர்ந்து கொண்டு சென்னையில் 30க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலையங்களை திறக்கப் போகிறார் என்று இவர் கீழ்ப்பாக்கத்தில் ஓசியில் உடற்பயிற்சி செய்யும் ஜிம் முதலாளியிடம் சொல்லவில்லை ? இதுதான் இவரை நம்பிப் பழகி வரும் நஜிமுத்தீனுக்கும், இவரை நம்பிக் கொண்டிருக்கும் ஷகீல் அக்தருக்கும் இவர் காட்டும் நன்றியா ?

இப்படிப் பட்ட நன்றி கெட்டத் தனத்தையா சொல்லிக் கொடுத்தீர்கள் அய்யா ?

எந்நன்றி கொன்றாலும், உய்வுண்டு, செய்நன்றி கொன்றால் உய்வே இல்லை என்கிறானே வள்ளுவன். செய்நன்றியை மறந்து அவர்கள் முதுகில் குத்தவா கற்றுக் கொடுத்தீர்கள் ஃபெலிக்ஸ் அய்யா ?

தன்னோடு நெருங்கிப் பழகி, உண்டு உறவாடி, தொழில் பங்குதாரராக இருக்கும் குருமாராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் அளவுக்கு, கீழ்த்தரமாக தரங்கெட்டவராகவா உருவாக்கினீர்கள் உங்கள் மாணவரை ?

தன்னை விட மூத்த அதிகாரியாக இருந்தாலும், தனது காலில் வந்து மண்டியிட வேண்டும் என்ற அதிகார வெறி எப்படி அய்யா வந்தது ஜாபருக்கு ? தன்னை விட மூத்த அதிகாரிகளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கருணாநிதியிடம் அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பேன் என்று மிரட்டுவதற்கு நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் கழித்து வகுப்பு எடுக்கும் போது, அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரே … ….. இந்த வகுப்பில் இவரைப் போலவே இன்னும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்களேயானால், இது போல அமைதியாக இந்த ஜாபர் சேட் உட்கார்ந்திருப்பாரென்றா நினைக்கிறீர்கள் ?

ஐபிஎஸ் படித்து முடித்து நல்ல அதிகாரியாக உருவாகி, மக்களுக்கு நற்பணி ஆற்றுவார் என்று எதிர்பார்த்தால், ஊர் முழுக்க சொத்து வாங்கிப் போடவும், ஊழல் செய்யவும், அதிகார வெறி தலைக்கு ஏறி ஆணவம் பிடித்து ஆடவும் நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

உளவுத் துறைக்கு கூடுதல் டிஜிபியாக யாரை நியமித்தாலும், தனது அதிகாரம் குறையும் என்பதால், இவ்வாறு நியமிக்கப் பட்ட ஒவ்வொரு கூடுதல் டிஜிபியையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மாற்றி விட்டு உளவுத் துறைக்கு தான்தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற ஆணவத்தை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

நாட்டின் பாதுகாப்புக்காக சிலரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கலாம். ஆனால் தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக, நண்பன், விரோதி என்று பார்க்காமல், ஒருவரையும் விட்டு வைக்காமல், பத்திரிக்கையாளர்கள் முதற்கொண்டு அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்டு, அவர்களது ரகசியங்களையும் அந்தரங்கங்களையும் அறிந்து கொண்டு, இதை ஆளும் வர்க்கத்திடம் சொல்லும் இந்த கேவலத்தை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

ஒருவனின் உரையாடலை ஒட்டுக் கேட்பது என்பது அடுத்தவனின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதாகாதா ? என்ன கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?



குருமாராஜோடும், போலிப் பாதிரியோடும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஒரு இடம் பாக்கி இல்லாமல், வசூல் வேட்டையில் இறங்க நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

ஆளும் வர்க்கத்திற்கு வசூல் செய்து தரும் ஏஜென்ட்டாக செயல்படும் கலையை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

ஜாபர் சேட்டை உங்கள் கல்வி பண்படுத்தவில்லை. அவரது மதம் பண்படுத்தவில்லை. ஐபிஎஸ் பயிற்சி பண்படுத்தவில்லை. இப்படி எதுவுமே பண்படுத்த இயலாத ஒரு ஜந்துவை எப்படி அய்யா நீங்கள் உருவாக்கினீர்கள் ?

ஜாபருக்கு அளித்த கல்வியில் தான் நீங்கள் தோற்று விட்டீர்கள். உங்களால் முடிந்த தொகையை அவருக்கு மணி ஆர்டராக அனுப்பினாலாவது, திருவான்மியூரில் அவர் வீடு கட்டும் பணி, தொடர்ந்து நடக்கும். இந்த தளத்திலேயே இருக்கும் முகவரிக்கு உங்களால் முடிந்த ஒரு தொகையை உடனடியாக அனுப்பி அவர் வீடு கட்டும் பணி நிறைவடைய உதவுங்கள் அய்யா.

அன்புடன் சவுக்கு

Wednesday, September 1, 2010

கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம்


தினமணியில் ஒரு தவ்ளூண்டு கார்ட்டூன் வந்ததுக்கே கருணாநிதி குய்யோ முறையோன்னு அலறி, கூப்பாடு போட்டு, என் பொண்டாட்டி என்ன மலடியான்னு கேட்டு, சினிமாக்காரங்களுக்கும் எனக்கும் இருக்கற ஒறவ யாராலயும் பிரிக்க முடியாதுன்னு பொலம்பனாரு.



இந்தியா டுடே வார இதழில், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி வளைத்துக் கட்டி எழுதியும் கூட, இது வரை காதறுந்த ஊசியும் எழுதவில்லை. கருணாநிதியும் எழுதவில்லை.

இப்படி அமைதியாகவே இருந்தால் நமக்கெல்லாம் போர் அடிக்காதா ?

அதனால், இந்தியா டுடே வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக சவுக்கே மறுப்பு எழுதுகிறது.

உடன்பிறப்பே,



முதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், மனம் வெதும்பி ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுக்க ஒதுங்கும் சூழலில், இப்படி ஒரு கடிதத்தை உனக்கு எழுதுவதற்கு காரணம் என்னவென்று நீ அறிய மாட்டாய் நான் அறிவேன்.



குறுக்கே நூல் அணிந்த ஒரு குறுக்குப் புத்திக் காரர்களின் கூட்டம், குடும்பத்திற்கு, கழக குடும்பத்திற்கு எதிராக கிளம்பியிருப்பதை நீ அறிந்திருப்பாயா இல்லையா என்பதை நான் அறியேன்.

அந்தக் குறுநரிக் கூட்டம் என்னவெல்லாம் எழுதி விட்டது. கு’பேர’ குடும்பமாம். என்ன ஒரு ஆணவம் ? ஒரு குசேலக் குடும்பத்தை குபேரக் குடும்பம் என்று சொல்ல என்ன துணிச்சல் ?





‘அண்ணாசாலை ஆரியக் கூட்டத்தின்‘ கொட்டத்தை சாந்துப் பொட்டை வைத்து அடக்கிய ஒரு சில நாட்களுக்குள் ‘ராதாகிருஷ்ணன் சாலை ராட்சசர்கள்‘ புதிதாக கிளம்பியிருக்கிறார்கள்.

திருக்குவளையிலிருந்து, திருட்டு ரயிலேறி, தகரப் பெட்டியோடு சென்னை வந்து, தீயசக்தியாக உருமாறி, ஏழை உழைப்பாளி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னையா குபேரக் குடும்பம் என்கிறார்கள் ?

பெயரிலே ஆங்கிலம். உணர்விலே பார்ப்பனீயம். உள்ளத்திலே நஞ்சு. இதுதான் இந்தியா டுடே.





இந்தியா டுடே இதழை விட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை அதிபர்களான கோயங்கா குடும்பத்தினர், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களை தமிழக அரசின் செய்தி ஏடுகளாக மாற்றி விட்டு, பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி சத்தமில்லாமல் வேறு தொழிலுக்கு போக வில்லையா ?

மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று என்னால் அன்போடு அழைக்கப் பட்ட இந்து நாளேடு, இன்று கருணாநிதியின் சொம்பு நாளேடாக மாறவில்லையா ?

ஒரே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டையும், பகவான் சிங்கையும், மண்டியிட வைக்க வில்லையா ?

அரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை கோபாலபுரம் டைம்ஸாக மாற்றவில்லையா ?

இன்று தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையாவது உண்மையை எழுத என்னை மீறி முடியமா ? அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா ? ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ? ஆனால், அறிஞர் அண்ணா எனக்கு அறவழியைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.



தமிழுக்காகவும், திராவிட இனத்துக்காகவும் பாடுபட்டதைத் தவிர, என்ன குற்றத்தை செய்து விட்டான் இந்தக் கருணநிதி ? இந்தக் கருணாநிதி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றுதானே, இவ்வாறு பொய்யையும், புரட்டையும், புனைசுருட்டையும், உண்மை என்று சில ஏடுகளிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ?

குபேரக் குடும்பம் என்று எழுதுகிறார்களே …… நாங்கள் மட்டுமா குபேரக் குடும்பம். வட இந்தியாவிலே, திருபாய் அம்பானி என்ற ஒருவர் இருந்தார். என்னைப் போலவே, பிற்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒரு சாதாரண பெட்ரோல் பங்க்கிலே வேலை பார்த்து, இன்று இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளாரே …. அந்தக் குடும்பம் குபேரக் குடும்பமாக தெரியவில்லையா ?





அவர் மறைவுக்குப் பின், அவரது இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு, அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இன்று அவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனித் தனி சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள வில்லையா ?

அது போலத்தானே நமது கழகமும் ? திருபாய் அம்பானிக்கு ஒரு மனைவி இரு மகன்கள், ஒரு மகள். எனக்கு மூன்று மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களின் கணக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை. அதனால், மூன்று பேருக்காக ஒரு லட்சம் கோடிகளை சேர்க்கும் போது, ஒரு முன்னூறு பேருக்காக ஒரு மூன்று லட்சம் கோடிகளை சேர்த்தால் அது பொறுக்கவில்லையே இந்த விபீடணர் கூட்டத்திற்கு.

வட இந்தியாவிலே ஜம்ஷெட்ஜி டாடா என்று ஒருவர் இருந்தார். அவர் மும்பாயிலே காட்டன் மில்லைத் தொடங்கினார். அவருக்குப் பின் வந்த அவர் வாரிசுகளெல்லாம், வரிசையாக தொழிலை விரிவு படுத்தி, இன்று டாடா குழுமம் என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் குபேரக் குடும்பமா, அல்லது நான் குபேரக் குடும்பமா ?

இந்தியாவிலே முதன் முறையாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஊழல், தியாகத் திருவிளக்கின் கணவர் அருமை நண்பர் ராஜீவ் செயல்படுத்திய போபர்ஸ் ஊழல். அந்த ஊழலின் மொத்த மதிப்பே 66 கோடி ரூபாய்தான்.

ஆனால், இந்தியாவே வியக்கும் அளவுக்கு, வாயில் விரல் வைக்கும் அளவுக்கு, எண்ணி மகிழும் அளவுக்கு, பூரிப்பால் இதயம் விம்மும் அளவுக்கு, தமிழ் கூறு நல்லுலகு பெருமை கொள்ளும் அளவுக்கு, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை புரிந்திருப்பது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழன் என்பதால்தானே இந்த பொச்சரிப்பு ? வக்கரிப்பு ? மனக்கரிப்பு ? குவியும் வெறுப்பு ? என்னை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு ?

ஆனால், இது போன்ற தாக்குதல்களெல்லாம், கண்ணப்ப நாயினார் சிவபெருமானை கல்லால் வழிபட்டபோது, மலர்களாக மாறி அவருக்கு மரியாதை செய்தது போல எனக்கும் மரியாதை செய்கின்றன.

அய்யகோ…. இந்தியா டுடே வார இதழில் உண்மையை எழுதி விட்டார்களே…. ஊழலை அம்பலப்படுத்தி விட்டார்களே…. என்று உடனடியாக பதவி விலகி நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு நான் என்ன சூடு சொரணை உள்ளவனா ? காண்டாமிருகத்தை விட தடித்த தோலுண்டு. பதிலளிக்க எழுதுகோளுண்டு. கழக கண்மணிகளிடம் வீர வாளுண்டு.

குபேரக் குடும்பம் என்று என்னை அழைக்கிறார்களே, நானும் என் குடும்பத்தாரும் அப்படி என்ன பேராசைக்காரர்களா ? வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் ? தமிழகத்தையும் பாண்டிச்சேரியையும் அபகரித்து விட்டு திருப்தியோடு இருக்கவில்லை ?

பெங்களுருவில் இப்போதுதான் கால் பதித்திருக்கிறோம். கேரளாவுக்கு, குமுளி வழியாக இப்போதுதான் புறப்படத் தொடங்கியிருக்கிறோம். சந்திரபாபு நாயுடுவிடம் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்குள்ளாக என்ன அவசரம் ?

பேராசைக் காரனைப் போல என்னை சித்தரித்திருக்கிறார்களே ? கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி ? இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கவில்லை ? கேரளாவுக்கு முல்லைப் பெரியாறை வழங்க வில்லை ? ஆந்திரத்துக்கு பாலாற்றை வழங்கவில்லை ? கர்நாடகத்துக்கு காவிரியை வழங்கவில்லை ? சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக எனது மானம் மரியாதையெல்லாம் வாரி வழங்கவில்லை ? என்னைப் போய் பேராசைக்காரன் போல எழுதியிருக்கிறார்களே ?

எஜமான் படத்திலே தம்பி நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார். கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடு என்றால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்று. அந்த வசனத்தை நான் எழுதவில்லையே தவிர, அந்த வசனத்தின் படிதானே நான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறேன்.





திருக்குவளையிலிருந்து வந்த ஒரு தமிழன் வந்தான். வென்றான் என்று மட்டும் இல்லாமல், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் போலவோ, பில் கேட்ஸ் போலவோ, வாரன் பஃபெட் போலவோ முகேஷ் அம்பானி போலவோ, லட்சுமி மிட்டல் போலவோ, உலக பணக்காரர்களில் ஒருவன் இந்தக் கருணாநிதி. அவன் மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தினர் அனைவரையும் உலக பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி விட்டான் என்று வரலாற்றில் எழுதி விடப் போகிறார்களே என்று அஞ்சியல்லவா இன்று இந்தியா டுடே என்ற ஏடு எழுதி கிழித்திருக்கிறது ?

இது போன்று இந்தியா டுடே என்ற நாளேடு அன்றே எழுதும் என்று அறிந்துதான் அண்ணா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னார். நிரந்தரமாக பாம்புக்கும் பல்லிக்கும் நடுவே வைத்து விடுவார்களோ, என்று எண்ணி இன்பத் திராவிடத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் விளைவுதானே இது போன்ற இந்தியா டுடே என்ற ஏடுகள் ஆட்டம் போடுகின்றன ?


இன்பத் திராவிடம் அமைந்திருந்தால் இந்தியா டுடே ஏடு இருந்திருக்குமா ? திராவிடா டுடே என்றுதானே ஒரு ஏடு இருந்திருக்கும். அதையும் என்னுடைய ரைசிங் சன் யாராவது ஒருவர் தானே நடத்திக் கொண்டிருப்பார்கள் ?

ஆனந்தத் தாண்டவம் போடும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டாமா ? கொட்டத்தை அடக்க வேண்டாமா ? என்று எண்ணி எனது அன்பு உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பது எனக்கு தெரிகிறது. ஒரு புறம் பழக்கடை அன்பழகனும், மறுபுறம் விஎஸ் பாபுவும், மற்றொரு புரம் உசேனும், தெற்கே ஸ்டிக்கர் பொட்டும் கிளம்புகிறது என்றால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து, நோன்பை துறந்து, கழக உடன்பிறப்பாக மாறி அந்த அலுவலகத்தை துவம்சம் செய்ய புலியென புறப்பட்டு வருகிறார்.

இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்தக் கருணாநிதி ? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை ?

இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்.

வன்முறையிலே என்றுமே நம்பிக்கை இல்லாதவன் இந்தக் கருணாநிதி. அறிஞர் அண்ணா என்னை கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடுதான் வளர்த்திருக்கிறார். அதனால், இந்தப் புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நானும் எனது குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்பது தானே வள்ளுவன் வாக்கு ?

ஊரையடித்து உலையில் போட்டு; குடும்பத்தோடு
நிம்ம தியாக வாழ்

என்றுதானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான் ? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?.

அன்புடன்

மு.க

நன்றி இந்தியா டுடே வார இதழ்
சவுக்கு

Monday, August 30, 2010

ஆண்டியும் அரசனும்…… … ….


என்னடா சவுக்கு ஏதோ பழங்காலத்துக் கதை சொல்லப் போகுதோன்னு ஆச்சர்யப் பட வேண்டம்.

சவுக்கு சொல்லப் போகும், ஆண்டியும், அரசனும், சமகாலத்தில் உள்ளவர்கள் தான். அரசர், சவுக்கு வாசகர்கள் நன்கு அறிந்தவர். ஆண்டியைப் பற்றி இப்போதுதான் சவுக்கு வாசகர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

இந்த ஆண்டி வேறு யாருமல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருக்கும் துக்கையாண்டிதான் அந்த ஆண்டி. அரசர் யார் தெரியுமா கருமம் பிடித்த வீரரான காமராஜ்தான். (காமராஜ் சார், உங்க பேரை கமாராஜ், புல்ஸ்டாப் ராஜ் அல்லது காமாராஜ், சோமாராஜ், மாமாராஜ் வசூல்ராஜ் என்று ஏதாவது மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். கர்மவீரர் காமராஜ் எப்படிப் பட்டவர் என்று அவரின் உதவியாளர் வைரவன் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். அப்படிப் பட்ட மனிதரின் பெயரை வைத்துக் கொண்டு, நீங்கள் செய்யும் காரியம், யாருக்கும் அடுக்காது) சரி, இந்த கமாராஜுக்கும், துக்கையாண்டிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?



இருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கமாராஜ் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் சென்று, ஆண்டியை சந்தித்து அவரோடு மதிய உணவு உண்டு ஏறக்குறைய மூன்று மணி நேரம் விவாதித்து வந்தார். என்ன விவாதம், எதைப் பற்றி விவாதம் ? எல்லாம் சவுக்கு பற்றித் தான்.

கமாராஜைப் பற்றி நாம் பல முறை விவாதித்து முடித்தாலும், இப்போது மீண்டும் விவாதிக்கும் முன், இந்த ஆண்டியைப் பற்றி பார்ப்போம்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்தான் இந்த துக்கையாண்டி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, 1986ல் ஐபிஎஸ்க்கு நியமிக்கப் பட்டவர்.



இவரை தலித் சாதி வெறி பிடித்தவர் என்று சொன்னால் மிகையாகாது. மற்ற சாதியினர், தங்கள் சாதி மீது வெறி பிடித்து இருக்கும் போது, ஒரு தலித் அதிகாரி, தனது சாதியினர் மீது பிடிப்போடு இருப்பது என்ன தவறா என்று கேட்கக் கூடும்.

சாதீய வெறி என்பது, அது பார்ப்பன சாதி வெறியாக இருந்தாலும் சரி, கவுண்டர் சாதி வெறியாக இருந்தாலும் சரி, தலித் சாதி வெறியாக இருந்தாலும் சரி. கண்டிக்கப் பட வேண்டியதே. தலித்தின் சாதி வெறி எப்படி இருக்கிறது என்பதை உத்தரப் பிரதேசத்தில் கண்டிருப்பீர்கள். இவ்வாறு வளர்த்து விடப் படும் சாதி வெறிதான், மதவெறியாகவும், மொழி வெறியாகவும், பல்வேறு வகுப்புவாத வடிவங்களை எடுத்து, மனிதத்தை அழித்து வருகிறது.

ஆகையால், சவுக்கை தலித் இன விரோதி என்று முத்திரை குத்தினாலும், சாதீய வெறி எந்த வகையில் இருந்தாலும் சவுக்கு கண்டிக்கவே செய்யும்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு புலனாய்வுக் குழு 1 மற்றும் 2 என்று இரு பிரிவுகள், 1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கென்று பிரத்யேகமாக ஏற்படுத்தப் பட்டது.

1996 முதல் 2001 வரை, இந்த இரண்டு பிரிவுகளும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டன. ஏகப்பட்ட வழக்குகள் இந்த இரண்டு பிரிவுகளிலும் பதியப் பட்டு விசாரிக்கப் பட்டன.

2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், ஏற்கனவே பதியப் பட்ட வழக்குகளை மூடும் பணியும், புதிதாக திமுக மந்திரிகள் மற்றும் கருணாநிதி மேல் வழக்கு போடும் பணியும் முடுக்கி விடப் பட்டாலும், அப்போது இயக்குநராக இருந்த திலகவதி, பிறகு வந்த நாஞ்சில் குமரன், ஐஜியாக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர், திமுக வினரோடு கள்ள உறவு வைத்து, வழக்கு விபரங்களை வெளியிட்டு வந்து, நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை உடைக்க ஏராளமான உதவிகளை செய்ததால், திமுக மீண்டும் 2006ல் ஆட்சிக்கு வந்ததும், ஏறக்குறைய அனைத்து வழக்குகளுமே ஊத்தி மூடப்பட்டன.

சரி அனைத்து வழக்குகளும் ஊத்தி மூடப்பட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு என்ன வேலை ? அதற்க ஐஜியாக உள்ள துக்கையாண்டிக்கு என்ன வேலை ?

என்ன வேலை என்று சொல்கிறேன். துக்கையாண்டி சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஐஜியான நியமிக்கப் பட்டதும், குற்றப் பிரிவு சிஐடி ஐஜி பிரிவையும் கூடுதலாக கவனிப்பார் என்ற வினோதமான உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அந்த நேரத்தில் தான், சிபி.சிஐடியின் புலனாய்வுக்கு, தங்க நாணய மோசடி விசாரணைக்கு வந்தது.

அதில் எவ்வளவு பணம் புழங்கியது என்பதும், ஒரு சாதாரண ஆய்வாளர் ஒரே பேரத்தில் 50 லட்ச ரூபாய் வாங்கியதும் அறிந்திருப்பீர்கள்.

அப்போது துக்கையாண்டி சிபி.சிஐடி ஐஜியாக பொறுப்பு வகித்தார் என்பது சிறப்பு.

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தவுடன் துக்கையாண்டி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?

லஞ்ச ஒழிப்புத் துறையின் 27வது கட்டிடத்திற்கு பின்னால் ஒரு பேட்மின்டன் கோர்ட்டும், ஃப்ளட் லைட்டும் போட்டதுதான். இதில் என்ன தவறு, ஒரு ஐஜி விளையாட்டு ஆர்வலராக இருக்கக் கூடாதா என்று கேட்பீர்கள். இருப்பது தவறில்லைதான். இந்த பேட்மின்டன் கோர்ட்டும், ஒளி விளக்குகளும், அரசின் ரகசிய நிதியிலிருந்து வாங்கப் பட்டது என்பதுதானே வேதனை.

மாலை நாலரை மணிக்கெல்லாம், ஆய்வாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர்களோடு, பேட்மின்டன் விளையாட்டு தொடங்கும். லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, ஏறக்குறைய சீட்டாட்டக் கிளப் போல, ஓய்வெடுக்கும் மடமாக மாறி விட்டது.

இரவு ட்யூட்டி இல்லை. பந்தோபஸ்து இல்லை. சனி ஞாயிறு விடுமுறை. மாதந்தோறும் 20 சதவிகிதம் பொய் பயணப் பட்டியலை அரசே வழங்குகிறது. இது போக, மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும், ரகசிய நிதியிலிருந்து ஒரு பங்கு. மொபைல் பில் கட்ட மாதந்தோறும் 1000 ரூபாய். லஞ்ச வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கூறும் ஒரு அரசு. திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இருக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் பெயரைச் சொல்லி மாமூல் வாங்கும் ஒரு உளவுத் துறை ஐஜி என்று நாடு போய்க் கொண்டிருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சீட்டாட்டக் கிளப்பாக மாறியதில் ஆச்சர்யம் என்ன ?

கடந்த ஐந்து வருடமாக தலைமையக டிஎஸ்பியாகவும், இப்போது கூடுதல் எஸ்பியாகவும் இருக்கும் கிருஷ்ணா ராவ் என்ற நபர், இந்த ஐந்து வருடங்களாக ஒரு வழக்கை கூட விசாரித்ததில்லை என்பது தெரியுமா ? எப்போது பார்த்தாலும் கதவை அடைத்துக் கொண்டு போன் பேசுவதும், இயக்குநர் வந்தால், அவர் கார் கதவை திறந்து விடுவதையும் தவிர, இந்த நபர் வேறு எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால், வாரம் முழுவதும், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், வேப்பம்பட்டு, திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி போன்ற இடங்களுக்கு வழக்கு புலனாய்வு நிமித்தம் சென்று வந்ததாக பொய் டி.ஏ தவறாமல் போட்டு வருகிறார். இப்படி உழைக்காமல் உடம்பை வளர்க்கும் இந்த மனிதருக்கு தின்னும் சோறு எப்படி செரிக்கிறது என்பதுதான் ஆச்சர்யம்.

துக்கையாண்டிக்கு வாரம் முழுவதும் வேலை என்ன தெரியுமா ? காலை 11 மணிக்கு அலுவலகம் வருவது. ஒன்றிரண்டு கோப்புகளை பார்ப்பது. அந்த கோப்புகளில் சம்பந்தப் பட்ட தலித் அதிகாரிகள் இருந்தால் அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது. 11.30 மணிக்கு இவரைப் போலவே மற்றொரு சீட்டாட்டக் கிளப் தலைவர் நல்லமா நாயுடு இவர் அறைக்கு வருவார். திமுக மீண்டும் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் விவாதிப்பார்கள். இந்த ஜெயலலிதாவை ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்பார்கள்.

12..30 மணி முதல் தேவேந்திரக் குல வேளாளர் சங்கம் என்று சொல்லிக் கொண்டு ஜாதி சங்கத்தினர் வரிசையாக, மாநாடு, காதுகுத்து, தீமிதித்தல் என்று வரிசையாக வருவார்கள். அனைவரிடமும் உட்கார்ந்து மணிக் கணக்கில் பேசுவார்.

மதியம் கருமம் பிடித்த கமாராஜ் போன்ற நபர்கள் வந்தால் அவர்களோடு மதிய உணவு. மதிய உணவு முடிந்ததும், போட்டா கோர்ட்டின் வழக்கறிஞர் வெங்கடகிருஷ்ணன் என்பவர் வருவார். அவரோடு மற்றொரு நபர் வருவார். இவர்கள் மூவரும் இணைந்து இரண்டு மணி நேரம் வெட்டி அரட்டை அடிப்பார்கள்.

நாலு மணிக்கு துக்கையாண்டி அய்யா கிளம்பி, ஜிம்கானா கிளப்புக்கோ, காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கோ அல்லது டென்னிஸ் விளையாடவோ சென்று விடுவார். மாலை நாலு மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்.

இவரது வீடு பனையூரில் உள்ளது. இவரது மனைவிக்கு வேலையே பனையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுதான். முதலில் ஒரு நிலத்தை விலைக்கு வாங்குவது. பிறகு அந்த நிலத்தின் அருகாமையில் உள்ள நிலத்தை லேசாக ஆக்ரமிப்பு செய்வது. அருகாமையில் உள்ள நிலத்துக் காரர் ஏதாவது பேசினால், காவல்துறையை விட்டு மிரட்டுவது. அந்த ஆக்ரமிப்போடு சேர்த்து, அதிக விலைக்கு விற்பது. இதுதான் திருமதி.துக்கையாண்டியின் முழு நேர பணி. இதற்கு உதவி செய்வது மணி. Money அல்ல Mani.

துக்கையாண்டி அலுவலகத்தில் மணி என்ற ஒரு காவலர் இருக்கிறார். இவர் எண்ணூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர். ஆனால் அங்கே ஓ.டி என்கிற அயல்பணி என்ற கணக்கு காண்பித்து விட்டு, முழு நேரமும், துக்கையாண்டி மற்றும் திருமதி.துக்கையாண்டியின் ரியல் எஸ்டேட் பணிகளை மட்டுமே கவனிப்பது இவரது பணி.

இந்த மணி துக்கையாண்டி வந்தவுடன், அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை பற்றிய விபரங்களை சம்பந்தப் பட்ட விசாரணை அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தை ஒரு அதிகாரி பார்த்து விட்டு, துக்கையாண்டியிடம் புகார் சொல்லுகிறார். இதற்க துக்கையாண்டியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ? “அப்படியா ? “ என்பதுதான்.

துக்கையாண்டி பல்வேறு வழக்குகளில் தலையிட்டு அதன் முடிவுகளை மாற்றுமாறு வற்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மகாகவி பாரதி நகரில் ஒரு காவல் ஆய்வாளர் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூல் செய்யும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கில் புலனாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கை புலனாய்வு செய்யும் அதிகாரியை அழைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பதிலாக துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறு துக்கையாண்டி வற்புறுத்தியதாகவும், அந்த புலனாய்வு அதிகாரி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு பெண், 600 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தப் பெண்ணின் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைந்து, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்த நிலையில், இவர் தன்னை பணி இடைநீக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார். இந்தக் கோப்பு துக்கையாண்டியை வந்தடையும் போது, பணி நீக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடாது என்ற உத்தரவிடுகிறார்.

மற்றொரு தலித் அதிகாரி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்னும் தொடங்கப் படாத நிலையிலேயே அந்த அதிகாரி பணி இடைநீக்கத்தில் இருந்து விடுவிக்கப் பட வேண்டும் என்று கோரிய போது, துக்கையாண்டி, அவரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப் பட்ட துறைக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று பொறி வைத்துப் பிடிப்பது போன்ற புகார்கள் வந்தால், முதலில் பிடிக்கப் பட வேண்டிய நபர் எந்த ஜாதி என்பதை கேட்டறிந்து, அந்த அதிகாரி தலித் சாதியாக இருந்தால், நடவடிக்கை எடுக்க துக்கையாண்டி அனுமதி மறுப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து பல்வேறு தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியாவதாக அத்துறையின் சில ஊழியர்களை இடமாற்றம் செய்ததும், ஒரு ஊழியரை பணி இடை நீக்கம் செய்ததும் நடந்திருக்கும் சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியே, ஒரு பத்திரிக்கை ஆசிரியரிடம், அதுவும் ஒரு மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்கு விடை தர வேண்டிய போலா நாத், துக்கையாண்டியின் அரசியல் செல்வாக்கை பார்த்து அஞ்சி நடுங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த துக்கையாண்டி, பகுதி நேரமாக ஐஜியாக இருந்து கொண்டு, முழு நேரமாக ஸ்ரீராம் சிட் பண்ட்ஸில் பங்குதாரராக இருக்கிறார் என்பது உபரித் தகவல் (துக்கையாண்டி சார், சவுக்குக்கு லோன் வாங்கித் தர்றீங்களா ? பணத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு)

இப்போது நம்ப கமாராஜ் விஷயத்துக்கு வருவோம். கமாராஜ் பேரு அவ்ளவா நல்லா இல்லை. குருமாராஜ்னு வச்சுருவோமா ? சவுக்குக்கு பிடிச்சுருக்கு. சவுக்கு வாசகர்கள் தான் இந்த பேருக்கு ஒப்புதல் தரணும்.



இந்த குருமாராஜ் தன்னோட மனைவி பேர்ல, சென்னை திருவான்மியூர்ல இரண்டு க்ரவுண்ட் நிலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து, “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் வாங்கியிருப்பது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.



இந்த நிலத்துக்கான மொத்த தொகை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து எண்ணூறு மட்டும். இந்தத் தொகையை மொத்தமாக செலுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் ஒதுக்கீடு பெரும் முன், வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கீடு பெரும் நபர் தர வேண்டிய உறுதி மொழி, பின் வருமாறு.

“எனக்கோ / எங்களுக்கோ / எங்களைச் சார்ந்திருக்கின்ற 21 வயது நிரம்பாத (Minor) குழந்தைகள் பெயரிலோ சொந்த வீட்டு மனையோ/வீடோ/அடுக்குமாடி குடியிருப்போ, இந்தியாவில் உள்ள மாநகராட்சி, முதல் நிலை சிறப்பு நிலை (நகராட்சி) நகராட்சிகளில் / இல்லை என்று உறுதி கூறுகிறோம். “

என்ற கணவன் மனைவி இரண்டு பேரும் கையொப்பம் போட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



ஆனால், 10 ஜனவரி 2005ல் 1424 சதுர அடி உள்ள ஈஸ்வரி அபார்ட்மென்ட்ஸ், முதல் தளம், பீச் ஹோம் அவென்யூ இரண்டாவது தெரு, பெசன்ட் நகர் என்ற முகவரியில், 22,50,000 ரூபாய்க்கு வாங்கி, அதில்தான் இப்போது காமராஜ் குடும்பத்தோடு குடியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.









இவ்வாறு பொய்யான சான்றிதழ் கொடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தையும், அரசையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டிருப்பதன் மூலம், குருமாராஜும் அவர் மனைவி ஜெயசுதாவும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, கண்ணாயிரத்துக்கு விரைவில் ஒரு புகார் அனுப்பப் பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆண்டிக்கும் அரசனுக்கும் என்ன தொடர்பு என்று இப்போது புரிகிறதா சவுக்கு வாசகர்களே ?
சவுக்கு

Saturday, August 28, 2010

முதியோர் இல்லமாகும், மாநில தகவல் ஆணையம்.


தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதியை நியமிக்கப் படப் போவதாக எழுந்த செய்திகளும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகளும், எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா இக்கூட்டம் தொடர்பான விபரங்கள் வழங்கப் படவில்லை என்பதால் அதில் பங்கேற்க மறுத்ததும் அறிந்திருப்பீர்கள்.

இந்த விவகாரங்களுக்குள் செல்லும் முன்பாக, இந்த சட்டம் குறித்து சற்று பார்ப்போம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிக மோசமான வீழ்ச்சி அணு சக்தி ஒப்பந்தம் என்றால், வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

குடியரசு, மக்களுக்கான மக்களின் அரசாங்கம் என்பதெல்லாம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருந்து வந்தது. ஒரு சாதாரண ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த ஒரு குடி மகனுக்கு, அவனது விண்ணப்பம் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளக் கூட உரிமை இல்லாதிருந்தால் அது என்ன மக்கள் ஆட்சி ?

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், இந்த மக்களை நடத்தும் விதம் என்ன என்பது பரவலாக அனைவருக்குமே தெரியும்.

அந்த மக்களுக்கு தங்களுக்கு உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறது, இந்த அரசு ஊழியர்களை கேள்வி கேட்கலாம். இவர்களை accountable ஆக்கலாம் என்ற அதிகாரத்தை வழங்கியது இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இந்தியாவின் ஒரு பெரும் மாற்றத்தை இந்தச் சட்டம் வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

இந்தச் சட்டத்தின் பலனையும், இந்தச் சட்டம் என்ன செய்யும் என்பதையும், 2007ல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக விளக்கினால் சுவையாக இருக்கும்.

அண்ணா பல்கலைகழகத்தில் அரசு கோட்டா என்று ஒரு கோட்டாவை வைத்துக் கொண்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு, பொறியியல் இடங்கள் வழங்கப் பட்டு வந்தன. செல்வி ஜெயலலிதாவின் மீதான வழக்குகளை கவனித்து, அந்த வழக்குகளை மூடிய ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் என்ற இருவரின் பிள்ளைகள் இது போல சீட் வாங்கிய விவகாரம் தொடர்பான விவரங்களை கேட்டு, மாதவரம் பால் பண்ணையைச் சேர்ந்த சேகர் என்பவர் அண்ணா பல்கலைகழகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்கிறார்.

இரண்டு நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு தேடி வந்த ஒருவர் தன்னை அண்ணா பல்கலைகழகத்தின் ஊழியர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, அவருக்கோ, அவர் கூறும் நபர்களுக்கோ, அண்ணா பல்கலைகழகத்தில் இடம் வழங்கப் படும் என்றும், அந்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோருகிறார். அந்த விண்ணப்பத்தை அனுப்பியவர் சவுக்கு நண்பர் அல்லவா. முடியாது என்கிறார்.



தகவல்கள் எதுவும் வழங்கப் படவில்லை. ஆனால், சேகருக்கு, காவல்துறையினர் மூலமாக மிரட்டல் தொடர்கிறது. தினமும் ஒரு காவலர் சேகர் வீட்டுக்கோ, அவர் கடைக்கோ வந்து, எதற்காக இவ்வாறு விண்ணப்பிக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறோம் என்றும் வந்து கொண்டே இருந்தார்கள்.

காவல்துறையினரால் மிரட்டப் படும் ஆர்டிஐ விண்ணப்பதாரார் என்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய செய்தி வந்தது.

ஆனால் இதற்குப் பிறகும், இந்த மிரட்டல் நிற்கவில்லை. ராதாகிருஷ்ணனின் அல்லக்கையாக அன்றும், இன்றும் இருக்கும் கஜபதி என்ற ஆய்வாளர், இந்த சேகரை மிரட்டுவதற்காகவே மாதவரம் காவல்நிலையத்தில் நியமிக்கப் படுகிறார்.

அண்ணா பல்கலைகழகமும் தகவல்கள் தருவதாக இல்லை. கடிதப் போக்குவரத்து தொடர்கிறது. இந்நிலையில் மிரட்டல் தொடர்ந்ததும், சேகர், சவுக்கிடம், இனி தன்னால் விண்ணப்பங்கள் அனுப்ப இயலாது என்று தெரிவிக்கிறார்.

இப்போதுதான், யாஹுவின் க்ரூப்புகளிள் ஒன்றாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காகவே இருக்கும், ஹம் ஜானேங்கே என்று க்ரூப் உதவிக்கு வந்தது. இது போல சேகர் மிரட்டப் படும் விபரங்களை அந்த க்ரூப்பில் பதிவு செய்தவுடன், இந்தியா முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் வந்தது.

அந்த விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் அனுப்புகிறோம். எங்களை யார் மிரட்டுகிறார்கள் என்று பார்ப்போம் என்று இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு குரல் வந்தது. இதையடுத்து, ஒரே வாரத்தில் அண்ணா பல்கலைகழகத்துக்கு, ராதாகிருஷ்ணன், நரேந்திர பால் சிங் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் கேட்டு, 150 விண்ணப்பங்கள் வந்தவுடன், ராதாகிருஷ்ணன் பின் வாங்கினார்.

இப்படி, அதிகாரத்தின் உயர் பீடங்களில் உள்ளவர்களை ஆட்டிப் படைக்க வல்லது இது போல பல வெற்றிக் கதைகள் இந்தியா முழுவதும் உண்டு.

ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? ஓய்வு பெற்றவர்களின் மடமாக தகவல் ஆணையம் இருந்து வருகிறது. தமிழக தகவல் ஆணையம், ஓய்வு பெற்றவர்களின் மடமாக, கருணாநிதியின் கைப்பாவைகளாக இருந்து அரசிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் புகலிடமாக இந்த ஆணையத்தை மாற்றி வைத்திருக்கிறார் கருணாநிதி.

தமிழக தகவல் ஆணையம் உருவான போது, மூன்று தகவல் ஆணையர்களும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தான். எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.ரத்தினசாமி ஆகியோர்.

இதில் தலைமை தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகுந்த முனைப்பாக இருக்கிறார் என்றும், பரவலாக சிறந்த ஆணைகளை வழங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அண்ணா பல்கலைகழகத்தில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு, பதில் அளிக்க மறுத்த நிலையில் நடந்த விசாரணையின் போது, எஸ்.ராமகிருஷ்ணன் பல்கலைகழகத்தில் இருந்து வந்த அதிகாரிகளிடம் கேட்ட கேள்வி. “நீங்கள் பிசிக்ஸ் ப்ராபசர் தானே ? தண்ணீரின் உறை நிலை என்ன ? “ அந்த அதிகாரி 0 டிகிரி என்றார். ராமகிருஷ்ணன், இதற்கு வேறு பதில் இருக்க முடியுமா ? என்று கேட்டார். அந்த அதிகாரி இல்லை என்று மறுத்ததும், அதே போல மனுதாரர் கேட்ட கேள்விக்கு வேறு பதில்கள் இருக்க முடியாது. ஆகையால், உடனடியாக தகவல்களை வழங்குங்கள் என்று கூறினார்.

2008ல், மூன்று தகவல் ஆணையர்களைத் தவிரவும், மேலும் மூன்று தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டி அரசுக்கு கருத்துரு அனுப்பப் பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது.

இந்த காலகட்டத்தில் தகவல் ஆணையர்கள் ஓய்வு பெற்றால், தங்களை அந்த பதவிக்கு பரிசீலிக்கும் படி, 8 நபர்கள் அரசிடம் விண்ணப்பம் அளித்து, அந்த விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன.

31 மார்ச் 2008ல் நான்கு ஆணையர்களை நியமிக்கும் பணி தொடர்பாக கோப்பு தொடங்கப் படுகிறது. இந்தக் கோப்பு முதல்வரின் செயலாளராக இருந்த டி.ஆர் ராமசாமிக்கு வருகிறது. டி.ஆர்.ராமசாமி, 30.04.2008ல் ஓய்வு பெற உள்ளார்.

நான்கு பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பங்களை அனுப்புகின்றனர். ஒருவர் சாரதா நம்பி ஆரூரான். இவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழறிஞராக இருந்ததைத் தவிர, இவருக்கு சட்டத்தைப் பற்றியோ, மக்களின் கஷ்டத்தைப் பற்றியோ எந்த அறிவும் இல்லை.



அடுத்தவர் ட்டி.சீனிவாசன். இவர் புள்ளியியல் துறையில் இணை இயக்குநர். ஆனால் இவர் விண்ணப்பித்ததற்கான முதல் காரணம், பேராசிரியர் அன்பழகனின் உதவியாளராக இவர் இருந்ததுதான்.



அடுத்த நபர் ஆர்.பெருமாள்சாமி. இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த பெருமாள்சாமியைப் போன்ற, சட்ட அறிவு துளியும் இல்லாத நபரை சவுக்கு பார்த்ததே இல்லை. ஒரு வழக்குக்காக இவரிடம் வாதாட சென்ற போது, சட்டம் குறித்த இவரது அறிவீனம் வெளிப்படையாக தெரிந்தது.



அடுத்து இப்பதவிக்கு விண்ணப்பித்த நபர்தான் நமது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவர்தான் டி.ஆர்.ராமசாமி. அரசுப் பணியில் இருந்து கொண்டே, ஓய்வு பெற்றவுடன், தன்னை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் விண்ணப்பபிக்கிறார். இதை கருணாநிதியும் ஏற்று, இவரை தகவல் ஆணையராக நியமிக்கிறார். 30.04.2008ல் பணியில் இருந்து ஓய்வு பெறும், டி.ஆர்.ராமசாமி, 01.05.2008அன்று தகவல் ஆணையராக நியமிக்கப் படுகிறார்.



எப்படி இருக்கிறது ? இது போல தகவல் ஆணையாளர்களாக நியமிக்கப் படுபவர்கள், கருணாநிதியின் கைப்பாவைகளாக இருப்பார்களா, அல்லது தகவல் வழங்குவார்களா ?

இந்த டி.ஆர்.ராமசாமி, 26-2001ல் கருணாநிதியின் செயலாளராக இருந்த போது, ஜெயலலிதா மீது லண்டன் ஓட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யச் சொல்லி, கருணாநிதி சார்பாக, ஒரு நாளைக்கு ஐந்து முறை, விசாரணை அதிகாரியை போனில் மிரட்டியவர்தான் இந்த ராமசாமி.

இப்போது, இந்த ராமசாமி, தலைமை தகவல் ஆணையராக வேண்டுமென்று முயற்சி செய்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.

சமீபத்தில் இந்த ராமசாமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவும், இந்த ஆளின் சிகிச்சைக்கு அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து 12.54 லட்சம் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

பிச்சைக்காரனா இந்த ராமசாமி ? சம்பளம் வாங்கவில்லை ? அரசுப் பொது மருத்துவமனைக்கு சென்றிருக்கிறானா இந்த ஆள் ? அங்கே நடைபாதையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களின் முகங்களை பார்த்திருக்கிறானா இந்த ராமசாமி ?

மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட இது போன்ற பன்றிகளை தகவல் ஆணையராக வைத்திருந்தால், மக்களுக்கு தகவல் எப்படி வரும் ? ஊருக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ராமசாமிக்கு மட்டும் 13 லட்சத்திற்கு சிறப்புத் திட்டமா ? (மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் மன்னிக்க வேண்டும். ஆத்திரத்தை அடக்க முடியவில்லை )

தற்போது இந்த தகவல் ஆணையம் எப்படி செயல்பட்டு வருகிறது. தகவல் ஆணையத்தை இரண்டாக உடைத்து விட்டார் இந்த ராமசாமி. இப்போது ராமசாமி தலைமையிலான நான்கு பேர் ஒரு குழு. எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேர் இன்னொரு குழு.

இப்போது தகவல் ஆணையத்தின் முன்பு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. இன்று அனுப்பும் அப்பீல், விசாரணைக்கு வருவதற்கு, 8 மாதம் முதல் ஒரு வருடம் ஆகிறது.

அண்ணாமலை பல்கலைகழகத்திடம் ஒரு தகவல் கேட்கப் படுகிறது. அந்தத் தகவல பல்கலைகழகம் வழங்கவில்லை. தகவல் ஆணையம் 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. 12 வாரங்கள் ஆகின்றன. அப்போதும் தகவல் வழங்கப் படவில்லை. மீண்டும் தகவல் ஆணையத்திற்கு அப்பீல் வருகிறது. அப்போது, இந்த டி.ஆர்.ராமசாமி என்ன உத்தரவிட்டார் தெரியுமா ? “சீக்கிரம் தகவலை கொடுங்கள்“ என்பதுதான் அது.

டி.ஆர்.ராமசாமி தலைமையிலான குழு, தொடர்ந்து அரசுக்கு ஆதரவான உத்தரவுகளை மட்டுமே பிறப்பிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சட்டநாதன் என்ற ஊரகவளர்ச்சித் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரியை தகவல் ஆணைய பதிவாளராக நியமிக்க வேண்டும் என்று தற்போதைய தலைமை ஆணையர் பரிந்துரைக்கிறார். இதற்கான கருத்துரு, ஊரக வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் ஒப்புதல் பெறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அசோக் வரதன் செட்டியிடம் இந்தக் கோப்பு செல்லும் போது, இதை ராமசாமியிடம் சொல்லி விடுகிறார் செட்டி. கோப்பு, துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம் செல்லும் போது, ராமாசாமி, ஆற்காட்டை சந்தித்து, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். அதன் படியே, ஆற்காடு ஒப்புதல் அளிக்க மறுத்து விடுகிறார்.

ஒரு லட்சம் விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்கும் தகவல் ஆணையத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை தெரியுமா ? ஆணையத்தின் செயலாளர் முதல், பெருக்குபவர் சேர்த்து மொத்தம் ஐம்பதுக்கும் குறைவு. இதற்கான பணியிடங்களை கூடுதலாக கேட்டுப் பெற வேண்டிய தகவல் ஆணையர் ராமசாமி அரசிடம் அனுப்பிய கருத்துரு என்ன தெரியுமா ?

ஆணைய கட்டிடத்தை முழுமையாக குளிர்பதன வசதி செய்வது. அனைத்து ஆணையர்களுக்கும் புதிய கார் வேண்டுமென கேட்டுள்ளார் ராமசாமி. இந்த ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டாம் ?

இது போன்ற மக்கள் விரோதிகளைத் தான் கருணாநிதி தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.

அடுத்த தலைமை தகவல் ஆணையாளராக நியமிக்கப் படுவதாக பரவலாக பேசப்படும் ஸ்ரீபதி எப்படிப் பட்ட நபர் ?



லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் காவல்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங்கிடம் புகார் ஒன்று வந்து, அது குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது, உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசிய ஸ்ரீபதி, இது குறித்து விசாரிக்காதீர்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இது போல விசாரணை நடத்தக் கூடாது என்று மிரட்டுகிறார். நீங்கள் என்னை வந்து சந்தித்து விட்டு அதற்குப் பிறகு விசாரணை நடத்துங்கள் என்று உபாத்யாய்க்கு உத்தரவிடுகிறார்.



இந்த கேடுகெட்டவனுக்கு, தலைமை தகவல் ஆணையர் பதவி ஒரு கேடா ? 60 வயது வரை அரசுப் பதவி சுகங்களை அனுபவித்தது போதாதா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பரவலான சமூக விஷயங்களில் தலையிடும் மாதவிடம் சவுக்கு பேசியபோது, முதலில் இந்த நியமனங்கள் வெளிப்படைத் தன்மையாக செய்யப் பட வேண்டும் என்றார். எந்த அடிப்படையில் தகவல் ஆணையர்கள் நியமிக்கப் படுகிறார்கள் என்று ரகசியமாக வைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார். அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை இவ்வாறு நியமிப்பதால், முக்கிய வழக்குகளில் எளிதாக அரசு செல்வாக்கு செலுத்தி தகவல் அளிக்காமல் செய்து விடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

மற்றோரு சமூக ஆர்வலரான நித்யானந் ஜெயராமன் சவுக்கிடம் பேசும் போது, மகாத்மா காந்தியை தகவல் ஆணையராக நியமித்தால் கூட, வெளிப்படையான தன்மையோடு இருக்க வேண்டும் என்றார். இப்போது அரசால் நாமினேட் செய்யப் பட்டிருக்கும் நபர்கள் தான் சரியான நபர்கள் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அரசு வெளியிடாத நிலையில், இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் நித்யானந்.



தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பதவி அந்தப் பதவிக்கு ஒரு நபரை நியமனம் செய்கையில் மிகுந்த கவனத்தோடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை தகவல் ஆணையர்களாக நியமனம் செய்வதால் அவர்களுக்கு பொதுமக்களின் கஷ்டத்தை விட, அரசு ஊழியர்களின் கஷ்டத்தின் மேல்தான் அதிக அக்கறை இருக்கிறது. அதனால் அவர்கள், அரசு ஊழியர்களுக்கு சாதகமாகவே பல நேர்வுகளில் முடிவெடுக்கிறார்கள் என்று கூறுகிறார்.

மேலும் அரசு அதிகாரிகளுக்குத் தான் நிர்வாகத்தைப் பற்றி நன்கு தெரியும் என்ற மாயை ஒன்று இருக்கிறது. இது தவறு. அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகம் நன்கு தெரியும் என்பது உண்மையானால், இந்தியா எங்கேயோ சென்றிருக்கும். அது ஒரு மாயை. அந்த மாயையை உடைக்க, அரசு அதிகாரிகள் அல்லாத ஒருவரை தலைமை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கூறினார் நித்யானந்த்.

எத்தனை சட்டங்கள் போட்டாலும், இந்த அரசு அதிகாரிகள் நினைத்தால், அந்த சட்டத்தை வலுவிழக்கச் செய்து விட முடியும் என்பதற்கு தமிழகம் ஒரு நல்ல உதாரணம்.

டெல்லியில் இருப்பது போன்று, தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான ஒரு நெட்வொர்க் இல்லாதது ஒரு மிகப் பெரும் குறை.

நித்யானந்த் மற்றும் மாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள், இதற்கான முன் முயற்சி எடுப்பார்களேயானால், சவுக்கு அவர்களுக்கு துணை நிற்கும்.

(ஜாபர் சேட் சார். உங்களுக்கு சவுக்கு இன்னைக்கு லீவ் விட்ருச்சு. நாளைக்கு உங்களைப் பத்தி எழுதும் என்ன… கோவிச்சுக்காதீங்க. சரி மணி ஆர்டர் வந்துச்சா ? பணம் இது வரைக்கும் எவ்ளோ கலெக்ட் ஆயிருக்கு ? அந்த பணத்துக்காவது ஒழுங்கா கணக்கு வையுங்க. ரகசிய நிதி மாதிரி இஷ்டத்துக்கு இருக்காதீங்க. இது சவுக்கு வாசகர்களோட பணம். ஒவ்வொரு பைசாவும் உழைப்பால வந்தது. ரத்த அழுத்தம் ரொம்ப அதிகமாயிடுச்சாமே ? சவுக்க படிக்காதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ? உடம்ப பாத்துக்குங்க. அடுத்த வாரமும் நெறய்ய மணி ஆர்டர் வரும் என்ன ?)

சவுக்கு