Flash News

Wednesday, September 17, 2014

சி.டி.செல்வம் என்ற மொள்ளமாறி - பாகம் இரண்டு.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோர்கள், நீதிபதிகளின் மீது நடவடிக்கையே எடுக்க இயலாத அளவுக்கு, மிக மிக சிக்கலான ஒரு பாதுகாப்பை உருவாக்கி வைத்துள்ளார்கள்.   இது எதற்காக என்றால், நீதிபதிகள் தவறான குற்றச் சாட்டுகள் காரணமாக, தங்களின் பணியை நேர்மையாக செய்வதிலிருந்து விலகக் கூடாது. எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, அவ்ரகள் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகவே அப்படிப்பட்ட பாதுகாப்பு.

இந்தியாவின் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வருபவர்கள், கிருஷ்ணய்யர்களாகவும், எச்.ஆர்.கண்ணாக்களும், எம்.சீனிவாசன்களும், அகமாதிகளாகவும் இருப்பார்கள் என்று நம்பினார்கள். 

கர்ணன்களும், கே.ஜி.பாலகிருஷ்ணன்களும், பி.டி.தினகரன்களும், சதாசிவங்களும், சி.டி.செல்வங்களும், அருணா ஜெகதீசன்களும் பின்னாளில் இந்திய நீதித்துறைக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை, நமது முன்னோர்கள் சற்றும் உணரவில்லை. இந்த பாதுகாப்பின் காரணமாகவே, வைகுண்டராஜனிடம் பணம் வாங்கிக் கொண்டு கர்ணனால், அப்பட்டமாக 29 வழக்குகளில் ஒரே நாளில் தீர்ப்பு வழங்க முடிகிறது.   இதனால்தான், நீதிபதி சி.டி.செல்வத்தால், ஊழலை அம்பலப்படுத்த இணையதளம் நடத்தும் ஒருவனை, ஆறு மாதமாக தலைமறைவு வாழ்க்கை வாழ வைத்து, அவன் இணையதளத்தை முடக்க, வாரம் நான்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடிகிறது. அருணா ஜெகதீசனால், சிபிஐ விசாரணையிலிருந்து 4 மருத்துவக் கல்லூரிகளை காப்பாற்ற முடிகிறது.

நீதிபதி சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை தடை செய்ய முயற்சித்த காரணம், என்னவென்பது, முந்தைய கட்டுரையிலேயே விளக்கப்பட்டிருந்தது. இணைப்பு 

நீதிபதி ஆர்.கே.அகர்வால்
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராகேஷ் குமார் அகர்வால், தனது பிரிவு உபச்சார விழாவில், மிகுந்த மனவேதனையோடு பேசினார்.  நீதிபதி அகர்வால்   "சென்னை உயர் நீதிமன்றத்தில், பணியில் இணைந்த போது, அனைவரும் திறந்த மனதோடு வரவேற்றீர்கள்; ஆதரவை தெரிவித்தீர்கள். இந்த நீதிமன்றத்தில், ஒரு அங்கம் என்ற நிலையில் பணியாற்றினேன். திடீரென ஒரு நாள், என்னை வேற்று நபராக, வழக்கறிஞர்களில் ஒரு பகுதியினர் கருதியதில், நான் மனதளவில் காயமடைந்தேன். என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம், 150 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. அதன் பெருமையை குறைக்கும் வகையில், எதையும் செய்யக்கூடாது. நம் நடத்தையில், செயல்களில் கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், ஆபத்து வெளியில் இல்லை; உள்ளுக்குள் தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள், உயர் நீதிமன்றத்தின் புகழில், வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 37 ஆண்டுகளாக, நீதித் துறையில் இருக்கும் என்னிடம், நீதிமன்ற நடவடிக்கையின் போது, யாரும் உரத்த குரலில் பேசியதில்லை. ஆனால், இங்கு, சக நீதிபதி ஒருவர், என் மீது வசைமாரி பொழிந்தார். என்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்து, நான் கவலைப்பட்டதில்லை. ஆனால், உயர் நீதிமன்றம் குறித்த விமர்சனம், என்னை வருத்தப்படச் செய்தது.

சக நீதிபதிகள் பலரும், வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றலாகி செல்ல விரும்புவதாக, என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர். மற்ற உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள், இந்த நீதிமன்றத்துக்கு வர, தயக்கம் காட்டுகின்றனர். உடன்படாத விஷயங்களை, உள்ளுக்குள் தீர்த்துக் கொள்ளலாம்; வெளியில் கொண்டு செல்வதன் மூலம், விமர்சனத்துக்கு ஆளாகும். "கிளையில் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்ட வேண்டாம்' என, எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன். நாம் பணியாற்றும் இந்த பெரிய நிறுவனத்தால் தான் நமக்கு மரியாதை, புகழ் கிடைத்துள்ளது என்பதை, ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்இணைப்பு.

இவருக்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த இக்பாலும், கர்ணன் மீது அறிக்கை அனுப்பினார்.  நீதிபதி அகர்வாலும் அனுப்பினார். ஆனால், எந்த அறிக்கையும் கர்ணன் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  மாறாக, நீதிபதி கர்ணன், இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆனந்தமாக அமர்ந்து, அட்டகாசமாக தனது வசூலை நடத்திக் கொண்டு வருகிறார்.   இதுதான் யதார்த்தம்.

savukku.net, savukku.in, newsavukku.com, newsavukku.org, ctselvam.com, ctselvam.org, newsavukku.in, savukku.blogspot.in, newsavukku.blogspot.in  இந்த தளங்கள், சி.டி.செல்வத்தின் உத்தரவால் தடை செய்யப்பட்டுள்ளவை.   ஒரு தளத்தை தடை செய்ய, கூகிளோ, அல்லது மற்ற நிறுவனங்களோ வைத்திருக்கும் அளவுகோள், ஒரே அளவுகோள்.   18 வயதுக்கு கீழானவர்களை வைத்து எடுக்கப்படும் நீலப்படங்கள், மற்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் விவகாரங்கள்.  இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே ஒரு தளம் தடை செய்யப்படும். 

ஆனால் சவுக்கு, இந்த இரண்டு பிரிவுகளிலும் அடங்காது என்பது, அனைவருக்கும் தெரியும்.   அப்படியென்ன குற்றத்தை செய்து விட்டது சவுக்கு..... ?  இணைய முகவரிகளுக்கு தடை விதித்ததோடு அல்லாமல், முகநூலுக்கு தடை, ட்விட்டருக்கு தடை.  விக்கிபீடியா பக்கத்தைக் கூட விட்டு வைக்கவில்லை.  

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.   கோர்ட் நடத்துறியா... கோமாளித்தனம் பண்றியா ?

என்னய்யா தப்பு பண்ணான் என் கட்சிக்காரன் ?  என்ன பண்ணான் ? ஏதோ ஒரு வெப்சைட் நடத்துறான்.... அதுல ஊழலை பத்தி எழுதறான்.  எழுதுனா படிச்சிட்டு போக வேண்டியதுதானே ? அதானேயா உலக வழக்கம்.... ? அத விட்டுட்டு, தெனம் தெனம் ஆர்டர் போட்டு, கட்சிக் காரனை ஓட விட்ருக்கீங்க...

அட வெப்சைட்டை தடை பண்ணாலும் பரவாயில்லைய்யா.... போற வர்ற வக்கீலையெல்லாம் விட்டு, புகார் கொடுக்க வச்சிருக்கீங்க.... புது புது கேசா போட்றீங்க.   ஏதோ எனர்ஜி இருக்கறதுனால தப்பிச்சிருக்கான்யா...... ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தா இந்த வெப்சைட்டை யாரு காப்பாத்தறது....    ஊழலை எப்படி   ஒழிக்கறது ? 

இப்படி வடிவேலு ஸ்டைலில்தான் செல்வத்தைப் பார்த்துக் கேட்க வேண்டும்.   ஆனால், செல்வம் செய்த காரியம் இப்படி நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல.  அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

National Cyber Safety and Security Standards என்ற தனியார் அமைப்பை தேர்ந்தெடுத்து, அதன் தென் மண்டல தலைவரான காளிராஜ்  என்பவரின் பெயரை தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, அவரை சவுக்கு தளத்தை தடை செய்ய நியமிக்கிறார்.    ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகளை நியமிக்காமல், எப்படி ஒரு தனியார் அமைப்பை சேர்ந்தவரை ஒரு வழக்கை புலனாய்வு செய்ய நியமிக்கிறார் என்பது புரியாத புதிராக இருந்தது. 
காளிராஜ் பெயரைப்போட்டு, சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு

இந்த உரையாடல்களைக் கேளுங்கள்.  எப்படி என்பது உங்களுக்கே விளங்கும்.


இந்த இரண்டு உரையாடல்களிலும், பேசுவது, காளிராஜ்.  சைபர் செக்யூரிட்டி அமைப்பின் தென் மண்டல இயக்குநராம்.  (எவன்டா குடுத்தது உங்களுக்கு இந்த டைட்டிலையெல்லாம்)

உரையாடலில் காளிராஜ் குறிப்பிடும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி.  வலது ஓரத்தில் இருப்பவர்தான் காளிராஜ்.  அவருக்கு அருகே இருப்பதுதான் மூத்த புலனாய்வு அதிகாரி அமர் பிரசாத் ரெட்டி
இந்த National Cyber Safety and Security Standards இருப்பது பலருக்குத் தெரியாது.  இது ஒரு தனியார் அமைப்பு என்பதும் யாருக்கும் தெரியாது.  இந்த அமைப்பு நமது கவனத்துக்கு வந்ததே, சி.டி.செல்வம் இந்த அமைப்பை சவுக்கு தளத்தை தடை செய்ய தேர்வு செய்தபோதுதான். இந்த அமைப்பைப் பற்றி விசாரிக்க வேண்டிய தேவை வந்தது.  

விசாரித்தால் தோண்ட தோண்ட பூதங்கள் வருகின்றன. இந்த அமைப்பு முழுக்க முழுக்க ஒரு தனியார் அமைப்பு.  தங்களை ஒரு அரசு அமைப்பு போல தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, பல்வேறு அரசு அதிகாரிகளை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்ற விபரமே இப்போதுதான் தெரிய வருகிறது. 

சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் கூட, இந்த அமர் பிரசாத் ரெட்டியிடம் ஏமாந்துள்ளார் என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. சவுக்கு தளத்தை தடை செய்ய இந்த அமைப்பை தேர்ந்தெடுத்து, செல்வம் உத்தரவிட்டதும், இதன் அடிஷனல் டைரக்டர் ஜெனரல் (வௌக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் என்பது, இதற்கு முழுமையாக பொருந்தும்) அமர் பிரசாத் ரெட்டி, ஜார்ஜை சந்தித்து தனது விசிட்டிங் கார்டை அளித்திருக்கிறார்.   அதைப் பார்த்த ஜார்ஜ், இந்த நபர், உண்மையிலேயே மத்திய அரசின் அடிஷனல் டைரக்டர் ஜெனரல் என்று நினைத்து, சைபர் கிரைம் பிரிவினரை அழைத்து, இவருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.  இதையடுத்து, சைபர் கிரைம் அதிகாரிகள், கமிஷனரே சொல்லி விட்டார் நாம் என்ன செய்ய முடியும் என்று இந்த அமர் பிரசாத் ரெட்டி நினைத்ததையெல்லாம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள். 

போத்தி காளிமுத்து கைதான அன்று காலை 9 மணிக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு வந்த அமர் பிரசாத் ரெட்டி, போத்தியை விசாரிக்க தொடங்குகிறார்.  வந்ததும், போத்தியின் கைபேசியை கைப்பற்றுகிறார் அமர்.  அது வரை, காவல்துறை அதிகாரிகள் கூட, போத்தியின் தொலைபேசியை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சங்கரை நேரில் பார்த்திருக்கிறாயா.... சங்கரோடு போனில் பேசியிருக்கிறாயா...  பேஸ்புக்கை தவிர்த்து, சங்கரை வேறு எப்படி தொடர்பு கொள்வாய்.  சங்கர் உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார். நீயும் சங்கரும் சேர்ந்து, எத்தனை பேரை ப்ளாக் மெயில் செய்து, எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்கள்.  சங்கரோடு உரையாடுகையில் ப்ரோ என்று சொல்லுகிறான்..... அவன் உனக்கு என்ன சகோதரனா ?  நீ என்ன அவனை சார் சார் என்று அழைக்கிறாய்... அவன் என்ன அவ்வளவு  பெரிய .................... ?  அவன் என்ன சொன்னாலும் செய்து விடுவாயா ?  நீ என்ன அவனுக்கு அடிமையா ?

பல இடங்களில் உன்னுடைய உண்மையான முகவரியை அளிக்காமல் மறைத்திருக்கிறாய்.  (இணைய தளங்களில் பதிவு செய்கையில்) சட்டவிரோதமாக என்ன காரியத்தை செய்து வருகிறாய் நீ ? எதற்காக உன்னுடைய அடையாளத்தை மறைக்கிறாய்.

நீ கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால்தான் உன் அடையாளத்தை மறைக்கிறாய்.... சவுக்கு தளத்தின் பேக்அப் எங்கே உள்ளது...   உன்னிடம் இருக்கும் அத்தனை ஈமெயில்களின் பாஸ்வேர்டை கொடு.  பேஸ்புக் பாஸ்வேர்டை கொடு.    மொத்தம் எத்தனை பேக்கப் வைத்திருக்கிறாய்.   பிறகு போத்தியின் போனை வாங்கி அதில் உள்ள எஸ்எம்எஸ்களை பார்த்து, எத்தனை பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறாய் என்று பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.   

பேஸ்புக்கில் சங்கரோடு, சேட் செய்ய வைத்து, அணு சக்தி ரகசியங்கள் வேண்டுமா என்று கேள்....  ஜெயலலிதாவை திட்டி எழுதச் சொல்.  ஜெயலலிதா பேரில் இணைய தளம் தொடங்கலாமா என்று கேள் என்று போத்தியை கடுமையாக மிரட்டியுள்ளார். 

காவல்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டால் நாம் பதில் சொல்லலாம்.   ஆனால், ஒரு பொறுக்கி, நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு, காவல்துறையினரின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, ஒரு இந்தியக் குடிமகனை கைது செய்து விசாரிப்பது எப்படிப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல் தெரியுமா ? 

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை காப்பாற்றுவதே, நீதிமன்றங்களின் பணி.  அதற்காகத்தான் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருக்கின்றன.   ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளை பாதுகாத்து, அவன் உரிமைகள் மீறப்படுகையில் அதற்கெதிரான உத்தரவுகளை பிறப்பித்து, அவன் உரிமைகளை காப்பாற்றுவது, ஒவ்வொரு உயர்நீதின்ற நீதிபதியின் கடமை.

ஆனால், இப்படி செய்ய வேண்டிய சி.டி.செல்வம், ஒரு தனி நபர் மூலமாக, ஒரு இந்தியக் குடிமகனின் உரிமைகளை பறித்து, அவனை அநியாயமாக 45 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிடுகிறார் என்றால் இதைப் பிறப்பித்த சி.டி.செல்வத்தை என்ன செய்யலாம் ? 

தன் சொந்த தம்பியோடு இருக்கும் சொத்துத் தகராறை நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தம்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்ய கைது வாரண்ட் பிறப்பித்ததை விட, கேடு கெட்ட செயல் இருக்கவே முடியாது.  ஆனால், இப்படிப்பட்ட கேடுகெட்ட செயலை செய்த சி.டி.செல்வத்தை, தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றமும், இன்னமும் அனுமதித்துக் கொண்டு இருக்கிறது.

சொந்த தம்பியுடனான சொத்துத் தகராறை தீர்த்துக் கொள்ள, நீதிமன்ற அதிகாரத்தை எப்படி சி.டி.செல்வம் பயன்படுத்துகிறாரோ, அதே வகையில்தான், சவுக்கு தளத்தை முடக்குவதற்கும், தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். 

இப்படிப்பட்ட நபரை மொள்ளமாறி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது ?