Flash News

Friday, July 31, 2009

லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா ? வளர்க்கிறதா ?



தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என ஒரு துறை செயல்பட்டு வருகிறது என்பது “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது, லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது, லஞ்சம் வாங்கிய காவலர் கைது“ என்று வரும் செய்திகளை வைத்து ஓரளவு தெரிந்து கொள்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில், விஏஓ, உதவியாளர் போன்ற அரசின் கடைநிலை ஊழியர்கள் மட்டும்தான் லஞ்சம் வாங்குகிறார்களா ? வேறு உயர் அதிகாரிகள் யாருமே லஞ்சம் வாங்குவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. உயர் அதிகாரிகளும் வாங்குகிறார்கள், ஆனால், அவர்கள் “உயர் அதிகாரிகள்“ என்பதனால், அவர்களைப் பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறை பம்முகிறது.


லஞ்ச ஒழிப்புத்துறையின் இணையத் தளத்தில் உள்ள பட்டியலின்படி 2004-2005ல் 534, 2005-2006ல் 750, 2006-2007ல் 488 மற்றும் 2007-2008ல் 683 வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவற்றில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் எவ்வளவு தெரியுமா ? 2004-2005ல் 7, 2005-2006ல் 6, 2006-2007ல் 19 மற்றும் 2007-2008ல் 15. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிராக இவ்வளவு குறைவாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டதன் காரணம், அதிகாரிகள் அவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பதா ? இல்லை. அதிகாரிகள் தங்களுக்கெதிராக எந்த ஒரு விசாரணையும் நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


ஐநூறும் ஆயிரமும் லஞ்சமாக வாங்குவதும் சட்டப் படி குற்றம்தான் என்றாலும், லட்சத்திலும் கோடியிலும் லஞ்சம் வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும், அரசியல்வாதிகளும் மகிழ்ச்சியாக திளைத்துக் கொண்டிருக்கையில், கடைகோடி ஊழியர்களை மட்டும் குறி வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை பிடிப்பது எந்த வகையில் நியாயம் ?


இன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் என்ற எம்.எல்.ஏ, கடந்த வாரம் அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். நீக்கப் பட்டதை தொடர்ந்து கருணாநிதியையும், ஸ்டாலினையும் வியாழன் அன்று இரவு சந்தித்து, திமுக வில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியைப் பற்றித்தான் அச்செய்தி விரிவாக விளக்குகிறது. கடந்த செப்டம்பர் 2006ல் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவ்வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே, அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் சேரப்போவதாக தகவல் வந்துள்ளது. இச்செய்தியை உறுதி செய்யும் வகையில், ஒன்றாக வழக்கு பதிவு செய்யப் பட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை புதன் அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


இது தவிர மேலும், இதுபோல் ஜெனிபர் சந்திரன், கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன், ஆலடி அருணா, இந்திரா குமாரி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளும், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல், லஞ்ச ஒழிப்புத் துறையால் ஓரங்கட்டப் பட்டன என்றும் தகவல் அப்பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.


நேர்மையான நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். உபாத்யாய் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், தனக்கு பணி தொடர்பாக தொடர்ந்து நெருக்கடிகள் வந்ததால், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்து வைத்தார். அவ்வாறு பதிவுசெய்து வைத்த உரையாடலில் ஒன்று பத்திரிக்கையில் வெளியானது. அவ்வுரையாடலில், தலைமைச் செயலாளர் திரிபாதி ஜெயலலிதா மீது, எப்படியாவது வழக்கு பதியச் சொல்லி உபாத்யாவை வற்புறுத்துகிறார். இவ்வுரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, உபாத்யாய் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார். திரிபாதி மீது நடவடிக்கை இல்லை.


இச்செய்திகளையெல்லாம் பார்க்கையில், நேர்மையாக, மனசாட்சிக்குப் பயந்து, விதிகளின்படி நடக்கும் அதிகாரிகள் அறுகி விட்டார்கள் என்பதும், நேர்மையாக இருந்தால் கடுந்துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதும்தான் விளங்குகிறது.


லஞ்ச ஒழிப்புத் துறையும், சுதந்திரமாக செயல்படாமல், எதிரிகளை பழிவாங்க ஆட்சியாளர்கள் கையில் கிடைத்த ஒரு ஆயுதமாகத்தான் செயல்பட்டு வருகிறது.

/ஒப்பாரி/


Thursday, July 30, 2009

பெரியார் திடல் எனும் சங்கர மடம்



தந்தை பெரியார் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காகவே அளித்தவர். இம்மக்களை மூடத்தனத்திலிருந்து விடுவித்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்க்கையை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அர்ப்பணித்தவர். அந்தப் பெரியாரின் கொள்கைகளை இவ்வுலகமெல்லாம் பரப்புவதே பகுத்தறிவு உள்ள ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால், பெரியாரின் சிந்தனைகள் யாரையும் சென்றடையக் கூடாது என்ற எண்ணத்தில் “குடியரசு“ இதழ் தொகுப்பை வெளியிடத் தடை கோரி பெரியார் திடலை சங்கர மடமாக மாற்றி வைத்திருக்கும் கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில், திங்களன்று நீதியரசர் சந்துரு தீர்ப்பளித்தார்.

நீதியரசர் சந்துரு


வழக்கு விபரங்களுக்குச் செல்லும் முன், பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்படுத்தப் பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் தலைவர் வீரமணியின் செயல்பாடுகள் குறித்து காண்பது அவசியம். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, யார் ஆட்சியில் இருந்தாலும், பெரியாரின் பெயரைச் சொல்லி, அவர்களுக்கு துதிபாடுவதில் வீரமணிக்குச் சளைத்தவர்கள் யாரும் கிடையாது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், “தடா“ என்ற ஒரு கொடிய ஆள்தூக்கிச் சட்டத்தில் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இக்கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ஜெயலலிதாவை தஞ்சைக்கு அழைத்து “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டமளித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பியவர்தான் இந்த வீரமணி.



பெரியார் திடலை தன் சொந்த சொத்தாக பாவித்து யாருக்கும் அதில் உரிமை கிடையாது என்பது போல் வீரமணி நடந்து கொண்டிருக்கிறார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் வரும் வருமானம் எவ்வளவு, அவ்வருமானம் எவ்வாறு செலவழிக்கப் படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.
இந்நிலையில், வீரமணியின் போக்கு பிடிக்காமல், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் “பெரியார் திராவிடர் கழகம்“ என்ற அமைப்பை துவக்கி, பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து உழைத்துக் கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக பெரியாரின் உழைப்பில் வெளிவந்த “குடியரசு“ இதழை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தொகுப்பை மலிவு விலையில் வெளியிட முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான் பெரியாரின் பேரனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சி செய்யும் கி.வீரமணி, இவ்வாறு “குடியரசு“, இதழ் தொகுத்து வெளியிடும் முயற்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவராயிருக்கும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் வெளியிடக் கூடாது என்றும், வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப் பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009ம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது. நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் எண்ணங்கள் உதிக்கட்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்“ என்று கூறியுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்திருந்தாலும், இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றுள்ளார் என்பது, வருத்தமளிக்கும் செய்தி.
பெரியார் கொள்கைகளை வளர்ப்பதை விட, அவற்றை முடக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.


/ஒப்பாரி/

Tuesday, July 28, 2009

சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்




கடந்த டிசம்பர் மாதம், வேலூர் பெண்கள் சிறையில் சாரதா என்ற பெண்மணி சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப் பட்டு, நளினி அந்தச் செய்தியை தன் வழக்கறிஞர் புகழேந்தியிடம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தாக்கப் பட்ட சாரதாவுக்கு ரூ.50,000 இழப்பீடும், தாக்குதல் சம்பவம் நடக்கையில் மெத்தனமாக இருந்த சிறைத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.


இத்தீர்ப்பைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும் நளினிக்கு மன ரீதியாக கடுமையான உளைச்சல் தரப்படுவதாக அவரை திங்களன்று சந்தித்து வந்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கிறார்.


தீர்ப்பு பற்றிய செய்திகள் வந்த நாள் முதல், நளினிக்கு கடும் நெருக்கடிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது. நளினி அறைக்கு அருகில் இருந்த மற்ற கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியது சிறை நிர்வாகம். ஏறக்குறைய நளினி தனிமைச் சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார். நளினி அறையில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அறையில் இருந்த உப்பு ஊறுகாய் முதல், பிஸ்கட், பழங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களும் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. சிறை வார்டர்கள், நளினியை அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நளினி தெரிவித்துள்ளார். சிறை உணவைப் போன்ற கொடுமையான உணவு எங்கேயும் கிடையாது. அத்தகைய உணவை உட்கொள்ள சிறையாளிகள் எப்போதும் ஊறுகாயை நம்பித்தான் இருப்பார்கள். அந்த ஊறுகாயைக் கூட சிறை நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது, சிறை நிர்வாகத்தின் கடுமையான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. நளினியுடன் உரையாடும் மற்ற கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவர் என்று அச்சுறுத்தப் படுகிறார்கள். இவை அனைத்தும் சிறைத் துறையின் உயர் அதிகாரிகள் துணையோடுதான் நடக்கிறது என்று நளினி கூறுகிறார்.


இந்த அராஜகத்தைக் கண்டித்து, கடந்த வெள்ளி காலை முதல் நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வழக்கறிஞர் புகழேந்தியிடம், சிறைக் கண்காணிப்பாளர், நளினியை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால், நளினி தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார்.


இச்செய்தி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, நளினி உண்ணாவிரதம் இருக்கவேயில்லை, புகழேந்தி வதந்தியைப் பரப்புகிறார் என்று கூறியுள்ளனர். சாரதா தாக்கப் பட்ட நேர்விலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, சாரதா மனநிலை பாதிக்கப் பட்டவர் என்ற அபாண்டமான பொய்யை வேலூர் சிறை நிர்வாகம் கூறியபோது, உயர்நீதிமன்றம் அதை திட்டவட்டமாக மறுத்ததை இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.


நளினியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில், சிறை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தாலும், நளினி உறுதியுடன் இருப்பதாக புகழேந்தி கூறுகிறார். நளினி அவரிடம், “அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்பினால் இப்படித்தான் நடக்கும். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். சாரதா விஷயத்தில் நாம் தலையிட்டது சரிதான் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க எனக்கு எவ்வித அச்சமும் இல்லை“ என்று கூறியுள்ளார்.


சிறையில் நடந்த ஒரு கொடூர தாக்குதலை எதிர்த்து குரல் கொடுத்ததால் நளினிக்கு இத்தகைய கொடுமையைச் செய்யும் சிறை நிர்வாகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீதிமன்றத்தால் சூடு பட்டும் வேலூர் சிறை நிர்வாகம் தன் போக்கை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாத்திரங்கள் பிணம் தின்னும் காட்சியே இது.


ஒப்பாரி

Sunday, July 19, 2009

சிறையில் நடந்த சித்திரவதை ! சீறிய உயர்நீதிமன்றம் !



கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சாரதா என்ற 55 வயது பெண்மணி, ரயில்வே போலீசாரால் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப் பட்டு வேலூர் பெண்களுக்கான சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அடைக்கப்படுகையில் ரூ.5000/- பணத்தை மறைத்து தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் சாரதா. சிறை அதிகாரிகள் பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்தால் கடும் தண்டனை என்று அவருடன் இருந்த சக கைதி அறிவுறுத்தியதன் படி, தன்னிடம் இருந்த பணத்தை அக்கைதியிடம் ஒப்படைத்துள்ளார் சாரதா.


இரண்டு நாட்கள் கழித்து, சாரதா அப்பணத்தை திருப்பி கேட்கையில், அக்கைதி கொடுக்க மறுக்கவே, உடனடியாக ஜெயிலரிடம் புகார் செய்யப் போகிறேன் என்று சொல்லி புறப்பட்ட சாரதாவை, கஸ்தூரி, தனம் மற்றும் முனீஸ்வரி ஆகிய கான்விக்ட் வார்டர்கள் மற்றும் சிறை அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று அச்சிறையில் இருந்த நளினி, இத்தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார். அவரின் முயற்சியையும் மீறி, அனைவராலும் சூழப்பட்டு, சாரதா கடுந்தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார். நிர்வாணப்படுத்தப் பட்டு, தரதரவென இழுத்துச் செல்லப் பட்டு தலைமுடியை சிறைக்கதவில் கட்டி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானார். அன்று இரவு முழுவதும், அவருக்கு ஆடை வழங்கப் படாமல் கதறியபடி இருந்துள்ளார்.



மனித மனதை பதறச் செய்யும் இந்த கொடுமையான சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 4 நாட்கள் சாரதா மீதான இந்தத் தாக்குதல் தொடர்ந்தபடி இருந்தது.



நளினி


4 நாட்கள் கழித்து, தன் கட்சிக்காரரான நளினியைப் பார்க்க வழக்கறிஞர் புகழேந்தி சென்றார். அப்போது, அவரிடம் நளினி நடந்த விபரங்களைத் தெரிவிக்க, புகழேந்தி துரிதமாக நடந்த கொடுமைகள் குறித்து, உள்துறைச் செயலர் மற்றும் சிறை டிஜிபிக்கும் தந்தி அடித்தார். மறுநாளே, சாரதா மீது நடந்த தாக்குதலை விரிவாக விளக்கி, சாரதாவிற்கு மருத்துவ சிகிச்சை, சிறை அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சாரதாவிற்கு இழப்பீடு கேட்டு ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு, ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. உடனடியாக நீதிமன்றம், தாக்குதலுக்கு உள்ளான சாரதாவிற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறும், சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.


மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்தபொழுது, அரசு தாக்கல் செய்த மனுவில் திருப்தி அடையாத நீதிமன்றம், வேலூர் மாவட்ட நீதிபதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. பாதிக்கப் பட்ட சாரதாவை நேரில் அழைத்து, நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எலிப்பி தர்மாராவ் ஆகியோர் நடந்தவைகளை விசாரித்தனர். அப்போது சாரதா, நளினி மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், தான் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விபரத்தையும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம், கடந்த 17.07.2009 அன்று சிறப்பான தீர்ப்பை வழங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த தீர்ப்பின் சாராம்சம் பின் வருமாறு.


“நன்பகல் 2 மணிக்கு வெளிச்சத்தில் சிறை வளாகத்துக்குள் இப்படி ஒரு கொடுந்தாக்குதல் நடந்த சமயத்தில் சிறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இந்நீதிமன்றம் கவலை கொள்கிறது. சிறை அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட கன்விக்ட் வார்டர்களால் இத்தாக்குதல் நடந்திருப்பதால் கன்விக்ட் வார்டர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், இச்சம்பவம் நடந்திருப்பது தங்களுக்கு தெரியாது என்று சிறை அதிகாரிகள் கைகழுவி விட முடியாது. ஏனெனில், பாதிக்கப் பட்டவரின் அலறல் அவர்களுக்கு கட்டாயம் கேட்டிருக்கும். பாதிக்கப் பட்ட நபர், மேலும் தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சி புகார் கொடுக்காமல் இருந்தாலும் கூட, சிறை அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


அரசு தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் சாரதா மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு நபர் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அதே பதில் மனுவில், சாரதா சிறைக்குள் அனுமதிக்கப் படுகையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிகளுக்கேற்ப சிறையின் மருத்துவ அலுவலர் சாரதாவை பரிசோதித்து சாரதா மனநலம் பாதிக்கப் பட்டவர் என்று எவ்வித அறிக்கையும் தரவில்லை. இந்நிலையில், இந்நீதிமன்றத்தின் முன் இவ்வழக்கு வந்த உடன், ஒரு நபர் எப்படி மனநிலை பாதிக்கப் பட்டவராக மாறுவார் என்று தெரியவில்லை.


சிஎம்சி மருத்துவர் அறிக்கையிலும், சிறையின் மருத்துவ அலுவலரின் அறிக்கையிலும், சாரதாவின் மனநிலையில் எந்தவிதமான பாதிப்பும் இருப்பதாக எந்தக் குறிப்பும் காணப்படாத நிலையில், எதிர் மனுதாரரின் (சிறைக் கண்காணிப்பாளர்) வாதத்தை, இந்நீதிமன்றம், உறுதியாக தள்ளுபடி செய்கிறது.


இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்கையில், சாரதா மிகவும் கொடுமையான முறையில், கன்விக்ட் வார்டர்களால் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், இச்சம்பவத்தை மூடி மறைக்க சிறைக் கண்காணிப்பாளர் முயற்சி எடுத்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.


சிறை விதிகளின் படி, கன்விக்ட் வார்டர்கள் என்பவர்கள் பொது ஊழியர்கள் ஆவர் என்பதால், அவர்களால் நடந்த இத்தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப் பட்ட நபர் அடைந்த கடுந்துன்பங்களுக்கும், உளைச்சல்களுக்கம் நட்ட ஈடாக, ரூ.50,000/- இழப்பீடாக வழங்க இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.


படிப்பறிவில்லாத ஏழை கைதிகளுக்கும், ஏழைகளுக்கும் பாடுபடும் மனுதாரர் (வழக்கறிஞர் புகழேந்தி) இக்கொடுமையை இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக பாராட்டுகிறோம்.

நடந்த சம்பவங்களைப் பார்க்கையில், ஒரு அபலைப் பெண் கைதி, சிறைக்குள்ளேயே கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலைகளைப் பார்க்கையில், வேலூர் சிறையில் பணியாற்றும் அதிகாரிகள், கடமை தவறியவர்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. இந்தக் கொடுமை நிகழ்ந்த அன்று, அச்சிறையின் தலைமை பொறுப்பில் எந்தெந்த அதிகாரிகள் இருந்தார்களோ அவர்களுக்கெதிராக உள்துறை செயலாளரும், சிறைத்துறை டிஜிபியும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.




நளினி


அடக்குமுறைக்கு அஞ்சாமல், அநீதியை எதிர்த்து துணிச்சலாக குரல் எழுப்பிய போராளி நளினியை மனதாரப் பாராட்டுகிறோம்.


வழக்கறிஞர் புகழேந்தி


சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து மக்களுக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் புகழேந்தியை மனதார பாராட்டுகிறோம்.


வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்


இவ்வழக்கில், மிகச் சிறப்பாக வாதாடி, ஒரு நல்ல தீர்ப்பு வர பெரும் காரணமாக இருந்த, மூத்த வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துரைகள்.



/ஒப்பாரி/

Sunday, July 5, 2009

நீதி எனும் மாயை !


நீதிபதி ரகுபதி


திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கிருபா ஸ்ரீதர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். அதில் கண் மருத்துவம் தொடர்பான ஒரு பாடத்தில் இரண்டு முறை பெயிலான கிருபா, மூன்றாவது முறையும் பெயில் மார்க்கையே வாங்கி-யிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மூன்று முறை முயன்றும் பாஸ் ஆகா-விட்டால் எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்தே மொத்தமாக அவரை நீக்க மருத்துவத் துறை-யில் விதி இருக்கிறது

அதனால் உஷாரான கிருபா தரப்பு, பிடிக்க வேண்டிவர்-களைப் பிடித்து பாஸ் மார்க் போட வைத்த-தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் இது சி.பி.ஐ.யின் கவனத்திற்குப் போக, அவர்கள் விசாரணை வளையத்தைச் சுருக்கி டாக்டர் கிருஷ்ண-மூர்த்தி-யையும் அவரது மகன் கிருபாவையும் கைது செய்யும் ஸ்டேஜுக்கு வந்து-விட்டார்கள். இதனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்கள் இருவரும்.

முதல் முறை இவர்களது மனு தள்ளுபடி ஆனது. இரண்டாவது முறை ஜூன் 29 அன்று வழக்கு விசாரணை தொடங்கும் முன்பாக ஒரு வக்கீலின் மொபைலில் பேசிய மத்திய அமைச்சர் ஒருவர், அன்றைய நிலையில் வழக்கின் தன்மையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்படியே இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ரகுபதியிடமும் பேசி, இந்த வழக்கில் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கும்படி மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.

நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கையிலேயே, இவ்வாறு நீதிபதி தனக்கு தொலைபேசியில் முன் ஜாமீன் வழங்குமாறு ப்ரெஷ்ஷர் வந்தது என்று சொல்லியிருப்பது இந்தியாவெங்கும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதித் துறையில் அரசியல் தலையீடு ஒன்றும் புதிதல்ல. நீதிபதியாக இருப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற மரபையெல்லாம் நீதிபதிகள் காற்றில் பறக்கவிட்டு பல நாட்கள் ஆகின்றன. நீதிபதி ரகுபதி வெளிப்படையாக இவ்விஷயத்தை சொன்னதால் இது பரபரப்பு ஆகியிருக்கிறது. இது போன்ற தலையீட்டை சொல்லாமல் மறைத்த நீதிபதிகள் எத்தனையோ ? அரசியல் தலையீட்டால் வந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த நீதிபதிகள் எத்தனையோ ? அவைகள் என்றும் வெளிச்சத்துக்கு வரப்போவதில்லை.

அரசியல் ஆதரவு இல்லையென்றால் உயர்நீதிமன்றத்திலோ, அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நீதிபதியாக நியமிக்கப் படுவது கனவிலும் நடக்காது என்று நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை உடைய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெரியும்.


சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்ற 11 நீதிபதிகளில் திரு.எஸ்.கே.கிருஷ்ணன், திரு.சி.டி.செல்வம் மற்றும், திரு.ராஜா சங்கர் ஆகிய நீதியரசர்கள், நியமன ஆணை வந்த மறுநாள், கருணாநிதியை சந்தித்து தங்கள் நன்றி விசுவாசத்தை தெரிவித்தார்கள்.




இவ்வாறு இவர்கள் சந்தித்ததை தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டு பறைசாற்றிக் கொண்டது.


உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப் பட்டவர்கள் இப்படி வெளிப்படையாக கருணாநிதியை சந்தித்து தங்கள் அரசியல் சார்பை வெளிப்படுத்தினால் சாமான்ய மக்கள், இந்த நீதிபதிகள் தங்களுக்கு நீதி வழங்குவார்கள் என்று எப்படி நம்புவார்கள் ? இந்த நீதிபதிகள் அரசுக்கு எதிரான வழக்கை விசாரிக்கையில், அரசியல் தலையீடு வந்தால் மறுக்கப் போகிறார்களா அல்லது நீதிபதி ரகுபதி போல் இதை வெளியில் சொல்வார்களா ? இந்த ரகுபதி நீதிபதியே, தனக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வரும் வாய்ப்பு இருந்திருந்தால் இதை வெளியே சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே !


திமுக வினர் இதுபோல் நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் தலையிடுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, வழக்கில் சிக்கிய தன் உறவினரை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாவிடம் அமைச்சர் பூங்கோதை பேசிய விவகாரம் வெளியே வந்து அதனால் அவர் அமைச்சர் பதவி பறிபோனது. மக்கள் அதை மறந்ததும், மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதும் நாம் கண்டதே.




தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கையில் டாடா ஸ்கை டிடி.எச் வசதிகள் தொடங்க அனுமதி தராமல் இழுத்தடித்தைதையும், பிறகு மன்மோகன் சிங் தலையிட்டு அனுமதி கொடுத்ததையும் நாம் கண்டோம். இதுபோல், திமுகவினருக்கு இது ஒன்றும் புதிதல்ல.

ஆனால், நீதித்துறை தன்னுடைய மாண்பையும் அதிகாரத்தையும் அரசியல்வாதிகள் காலடியில் அடகு வைத்துள்ள நிலைதான் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் புகுந்து அங்கிருந்த நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியது கருணாநிதியின் காவல்துறை. அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது இந்த வெட்கங்கெட்ட சென்னை உயர்நீதிமன்றம். இன்று வரை அச்சம்பவம் தொடர்பாக ஒரு காவலர் கூட இடை நீக்கம் செய்யப் படவில்லை என்றால், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் அதிகாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.





அந்த சம்பவம் நடந்த அன்று இரவே, தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும், கமிஷனரையும், டிஜிபியையும், இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தால், முன்ஜாமீன் வழங்கச் சொல்லி மிரட்டல் விடும் தைரியம் மத்திய அமைச்சருக்கு வந்திருக்குமா ?
இவ்வளவு நடந்தும் கூட, அந்த மத்திய அமைச்சரின் பெயரை அந்த நீதிபதி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது தான் வெட்கக் கேடு. வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாத நீதிபதி, மிரட்டினார் என்று மட்டும் ஏன் சொல்ல வேண்டும் ?


எதிர்க்கட்சித் தலைவர் செல்வி.ஜெயலலிதா, வெளிப்டையாக, நீதிபதியை மிரட்டியது அமைச்சர் ஆ.ராசா தான், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் பினாமி, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் என்று அறிக்கை விட்ட பின்பு கூட, மன்மோகன் சிங் அமைதி காக்கிறார் என்றால், நீதித்துறையை மிரட்டும் ஆ.ராசாவின் செயலுக்கு மன்மோகன் சிங்கும் உடந்தை என்றே பொருள்.

நீதிபதிகளும், வானத்திலிருந்து உதித்த ஒழுக்க சீலர்கள் அல்ல. “வாழும் உரிமை“ கூட ஒரு மனிதனுக்கு இல்லை என்று நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, தீர்ப்பளித்தவர்கள்தானே இந்த நீதிமான்கள் ! இவர்களிடம், நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.


அரசியல்வாதிகளிடம் சலுகைகளை எதிர்ப்பார்த்து, இந்த நீதியரசர்கள் (!!!???) கையேந்தி நிற்கும் வரை, நீதித்துறையில் அரசியல் தலையீடு இருந்தே தீரும்.


அது வரை நீதி என்பது ஒரு மாயைதான் !
/ஒப்பாரி/