Flash News

Monday, May 10, 2010

நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்க சிபிஐ சதி ?


நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுப்பதற்கு மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ முயற்சி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் எழுந்துள்ளன.


இந்தியா போன்ற, வளர்ந்து வரும் நாடுகளில், கல்வி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. மேலும், அடிப்படை மருத்துவ வசதிகள் மிக மிக குறைவாக உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு, மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர்.
சரிவர மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தாலேயே, பலர் இறக்க நேரிடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


இது போன்ற அவல நிலையை தடுப்பதற்காகவே, இந்தியாவின் மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த, கேதன் தேசாய் என்பவர், இந்தியாவின் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்காக அரும்பாடுபட்டு வந்திருக்கிறார்.


கேத்தன் தேசாய்



இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்து, பல பாடங்களில் பெயிலாகி, டாக்டராக முடியாமல் அவஸ்தைப் படுபவர்கள், தங்களின் பண பலத்தால், ரஷ்யா சென்று படித்து டாக்டராகி வருகின்றனர். இவ்வாறு பலர் ரஷ்யா செல்வதால், இந்தியாவின் பணம், ரஷ்ய நாட்டுக்கு செல்கிறது. இதையும் தடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், அருமை மருத்துவர் கேத்தன் தேசாய், பல்வேறு திட்டங்களை வகுத்து, இந்தியாவில் மருத்துவக் கல்வி மிகச் சிறப்பாக வளர, இவர் மேற்கொண்ட திட்டங்களை, மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ, தீய உள்நோக்கத்துடன் தடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேத்தன் தேசாய் மேற்கொண்ட அற்புதமான திட்டங்களில் சில.
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிப்பில், அறிவியல் பாடங்களையே படிக்காத, த்ரேசியா கோக்கட்டு என்பவரை, மருத்துவராக பதிவு செய்திருக்கிறார்.

வெறும் ஹோம் சைன்ஸ் பாடத்தை படித்த, மரீனா ஃப்ரான்சிஸ் என்பவரை மருத்துவராக பதிவு செய்திருக்கிறார். ஏப்ரல் 2003ல், உச்ச நீதிமன்றம், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கையில், அறிவியல் படிப்புகளான, உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய படிப்பை படிக்காதவர்கள், மருத்துவர்களாக ஆக இயலாது என்று வழங்கிய தீர்ப்புக்குப் பிறகும், இவ்வாறு, கேத்தன் தேசாய், அனைவரையும், மருத்துவர்களாக பதிவு செய்ய அனுமதி அளித்திருப்பதன் மூலம் எத்தனை பெரிய சேவையை ஆற்றியிருக்கிறார் தேசாய் ?

பொறுக்குமா இந்த சிபிஐக்கு ?

இது மட்டுமல்ல. ப்ளஸ் டூ படிக்கையில் தியரி பாடங்களில் பெயில் ஆனவர்களை கூட, டாக்டர்.தேசாய், மருத்துவர்களாக பதிவு செய்ய அனுமதித்திருக்கிறார்.


மருத்துவ பட்டப் படிப்புக்கான விதிமுறைகளின் படி, முதலாண்டு, படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர், நான்கு வாய்ப்புகளுக்குள், தன்னை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, முதல் ஆண்டு எம்பிபிஎஸ் ல் பெயில் ஆனால், நான்கு முறைகளுக்குள், பாஸ் செய்யலாம் என்பது விதி.

அதற்காக, நான்கு முறை பெயில் ஆன ஒரு மாணவர் டாக்டராகவே ஆக முடியாது என்பது எப்படிப் பட்ட ஒரு சமூக அநீதி ? அதனால்தான், டாக்டர்.தேசாய், நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரி, என்கேபி.சால்வே மருத்துவக் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பயின்ற மாணவர்களை ஏழாவது, எட்டாவது முறை கூட, தேர்வு எழுத அனுமதித்து உள்ளார்.

இது என்ன இப்படிப்பட்ட ஒரு விதி அநியாயமாக உள்ளதே என்று உணர்ந்த டாக்டர் தேசாய், 2003ம் ஆண்டு, வெறும் நாலே நாலு அட்டெம்ப்டுகள்தான் என்று இருந்த இந்த விதியையே எடுத்து விட்டார்.


இவ்வாறு, இந்தியாவில் உள்ள அனைவரையுமே (பணம் உள்ளவர்கள்) மருத்துவர்களாக ஆக்க வேண்டும், இந்தியாவின் கல்வித் தரத்தை ரஷ்யாவுக்கு இணையாக உயர்த்த வேண்டும், இந்தியாவின் மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்ட டாக்டர் தேசாய் மீது அநியாயமாக வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளது இந்த சிபிஐ.

இந்த தேசாய் மீது அப்படி என்னதான் குற்றச் சாட்டு ? ஒன்றும் பெரிய குற்றச் சாட்டு இல்லை. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாகாணத்தில், மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இந்த கல்லூரியை ஆய்வு செய்த, மருத்துவக் கவுன்சிலின் ஆய்வுக் குழு, ஆய்வுக்குப் பின் இந்தக் கல்லூரியில், அனுமதி அளிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால், அனுமதி வழங்க இயலாது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.

அந்த மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர், நம் கேத்தன் தேசாயிடம் உங்களுக்கு லஞ்சம் தருகிறேன், கல்லூரிக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தேசாயும், மிக மிக குறைந்த அளவு லஞ்சத் தொகையாக வெறும் இரண்டு கோடியை கேட்டுள்ளார். இந்த இரண்டு கோடி தொகையானது, டெல்லியைச் சேர்ந்த ஒரு இடைத் தரகரிடம், தேசாய்க்கு கொடுக்கும் படி, கொடுத்தனுப்பப் பட்டுள்ளது.

இது பொறுக்கவில்லை சார் சிபிஐக்கு… !
யாருமே புகார் கொடுக்காமல், இடைத் தரகர், மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர், கேத்தன் தேசாய் அப்புறம் அந்தக் கல்லூரியின் இன்னொரு அலுவலர் ஆகிய நால்வரையும், கைது செய்து விட்டது சார்…

என்ன அநியாயம் பாருங்கள் ?
ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி விட்டு, மீண்டும், தொலைத் தொடர்புத் துறைக்கே அமைச்சராக வந்து உட்கார்ந்திருக்கிறார் நமது “தலித்“ ராஜா. வெறும் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் என்று, இந்தியாவை மருத்துவக் கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காகவே உழைத்த, ஒரு மகானைப் போய் கைது செய்திருக்கிறது

பாருங்கள் சிபிஐ ?


என்ன கொடுமை சரவணன் இது ?

சவுக்கு


1 comment:

ஆட்டையாம்பட்டி அம்பி said...

ராசா வாங்குனார் என்று குற்றம். வாங்கியிருக்கலாம்.

அனால் அவாள் தேசாய் தங்கம் பணத்தோட நானா மாடிண்டுண்டார்.
.
அவாள் தேசாய் அமுக்குனது 1500 கிலோ தங்கம் 1800 கோடி லஞ்ச கறுப்புப் பணம்

அவாள் தேசாய் செய்தியை அமுக்க தான் ராசா செய்தி இப்போ அவாள் அகர்வால் மூலமா வந்துடுத்து..

எல்லா திருட்டுப் பசங்க தான்

Post a Comment