Flash News

Saturday, November 14, 2009

அனானிகளை என்ன செய்யலாம் ?



அரசையும், கருணாநிதியையும் எதிர்த்து பதிவுகள் எழுதினால் அனானிகளின் படையெடுப்பு கடுமையானதாக இருக்கிறது. பல நாட்களாக சவுக்கு comment moderation இல்லாமலே இருந்தது. ஆனால் சில அனானிகள் மோசமான சொற்பிரயோகங்களோடு, பிறர் படித்தால் முகம் சுளிக்கும் அளவுக்கு எழுதுகின்றனர். இதனால் வேறு வழியின்றி comment moderation போட வேண்டிய நெருக்கடிக்கு சவுக்கு தள்ளப் பட்டது.

“சவுக்கும்“, சவுக்கின் கருத்துக்களும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. எந்த கருத்துக்குமே எதிர் கருத்தும், அதற்கு பதில் கருத்தும் வரவேற்கத் தக்கவையே. இத்தகைய ஆரோக்கியமான கருத்துக்கள் தான் நல்ல விவாதங்களை தோற்றுவித்து, இந்த இணைய ஊடக வடிவத்தை மேலும் செழுமைப் படுத்தும்.

ஆரோக்கியமான மொழியில், எதிர் கருத்துக்களை சவுக்கு எப்போதும் வரவேற்றே வந்திருக்கிறது. அதற்கு மறுமொழி கூறவும் தவறுவதில்லை. ஆனால், இவ்வாறு அவதூறான மொழியில், அனானிகளாய் வந்து கருத்து எழுதுபவர்களுக்கு உளவியல் சிக்கல் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.



அனானிகளில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை, log in பண்ணுவதற்கு சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு, உடனடியாக கருத்து பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வரி அல்லது இரண்டு வரியிலோ, அல்லது பதிவிலிருந்தோ copy, paste செய்தோ போட்டு விடுபவர்கள் ஒரு வகை.



இரண்டாவது வகைதான் உளவியல் சிக்கலுக்கு ஆட்பட்டவர்கள். நமக்கு பிடிக்காத ஒரு பதிவை, உங்கள் பதிவில் இருந்து “இப்படி“ நான் முரண்படுகிறேன். தங்களது கருத்து “இவ்வாறு“ தவறு என்று எழுத அஞ்சியோ, அல்லது எழுதத் தெரியாமலோ, அல்லது தங்களது வன்மத்தை வெளிப்படுத்தவோ, அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி, எதையாவது எழுதி விட்டுப் போய்விடுவார்கள். மேலும், எழுதியிருக்கும் பதிவு, சரியாக இருக்கிறதே, இதற்கு மறுப்பு சொல்ல ஒன்றுமே இல்லை என்பதும் ஒரு காரணம். இதை கருத்து ரீதியாக எதிர் கொள்ளத் தெரியாதவர்கள்தான் இவ்வாறான அவதூறு சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு உளவியல் ரீதியான சிக்கல் இல்லாமல் வேறு என்ன காரணத்தைச் சொல்ல முடியும்.



பொதுக் கழிப்பிடங்களின் சுவற்றில் பல இடங்களில், கெட்ட வார்த்தைகளை எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவ்வாறு, அனானிகளாக வந்து கெட்ட வார்த்தையை எழுதி விட்டு செல்பவர்களுக்கும், பொதுக் கழிப்பிடங்களில் கெட்ட வார்த்தை எழுதுபவர்களுக்கும், பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

இவ்வாறு “அனானி“ களாக வந்து கெட்ட வார்த்தை எழுதுபவர்கள் உடனடியாக ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்ப்பதுதான் நல்லது.




இவர்கள் விரைவில் நலம் பெற “சவுக்கு“ வாழ்த்துகிறது.

இது போகவும், அனானிகளுக்கு ஏதாவது ஆலோசனை இருந்தால் வரவேற்கப் படுகிறது.

சவுக்கு

7 comments:

Sundararajan P said...

சூப்பர் பதிவு. இந்த பிரசினைகள் சீரியசான விவகாரங்களை பற்றி பதிவு எழுதும் அனைவருக்கும் இருக்கிறது.

சவுக்கு said...

நன்றி நண்பர் சுந்தர்ராஜன் அவர்களே. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தாங்கள் கூறுவது உண்மைதான் நண்பா

Anonymous said...

இன்னும் கொஞசம் ஆழமாக சிந்தித்திருக்கலாம்.

பெயரை வெளிப்படுத்த விரும்பாதவர்களின் ஆபாசப்பின்னூட்டங்கள் கழிப்பறைச்சுவரில் எழுதப்படும் ஆபாசச்சொற்களுக்கு ஈடானவை என்று சொல்லி, அன்னாரை மனநல மருத்துவரின் ஆலோசனைக்குச் செல்க என அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள்.

என் பார்வை வேறு.

மனநல நிபுணர்கள் சொல்வது யாதெனில், இப்படிப்பட்ட எழுத்துகள் (கழிப்பறைச் சுவரில் எவருமறியாமல் எழுதுவது) காம இச்சைக் கனவுகளை எழுத்துவடிவில் தாங்கிவரும் மஞ்சள் பத்திரிக்கைகளைப் படிப்பதற்கு ஈடாகும்.

இப்பத்திரிக்கைகள் பங்கு ஒரு வடிகாலே. சிவப்பு விளக்குப் பெண்களை நாடுவதும் ஒரு வடிகாலே - என்பது மன நலமருத்துவத்தின் தேர்ந்த முடிபாகும். இவை மக்களுக்குத் தேவை.

என் பொதுவான கருத்து என்னவென்றால்,

பெ.சொ. விரும்பா பின்னூட்டக்காரர்கள் தங்கள் மனத்தில் தோன்றியதைச் சொல்ல விரும்புகிறார்கள். பெ.சொ.விரும்பாமைக்கு பலபல காரணிகள் இருக்கும். நீங்கள் சொல்லும் மனக்கோளாறு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். எனக்கு பொருந்துமா?

நான், ஏன் பெ.சொ.விரும்பா பின்னூட்டம் இடுகிறேன். காரணம்: என் பெயரைத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் என் பின்னூட்டம் மாறாது. இல்லையா? நான் என்ன சொல்ல்வருகிறேன் என்று தெரிவது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்குப் பதிலாக, என் அடையாளம் என்ன என்று ஆராய்வது அதிகப்பிரசிங்கத்தனம் மட்டுமல்ல; அஃது உண்மையில் ஒரு மனனோயே. மேலும், அஃது உங்கள் எண்ணம் என் கருத்தின் மேலே இல்லாமல், வேறு எதையோ தேடுவது போலிருக்கிறது. ஒரு ஆண் பெண்கள் டென்னிஸ் விளையாட்டைப்பார்க்கபோகிறேன் என்று சொல்லி, அவர்களின் ஆடைவிலகலைப்பார்க்கும் நோக்கத்துடன் சொல்வதாகும்.

எப்படி உங்களுக்கு இணையதளம் உரிமையோ, அப்படி, எங்களுக்கும் உரிமை. இணைய்தளத்தின் சிறப்பே, அவ்வுரிமைய்தான் நண்பரே.

பள்ளி மாணவன் ஆசிரியரை நேருக்குனேர் கேட்க முடியாது. எனவே அவரைப்பற்றி சுவரில் எழுதுவான். மனநல மருத்துவர்கள் அவனை மனனோயாளி என்று அழைக்கமாட்டார்கள்.

பின்னூட்டக்காரர்கள் ஆபாசசொற்களை வீசிச்சென்றால், அவர்களை தடுத்துவிடலாம் உங்கள் பதிவில். எப்படி, உங்களுக்குப் பிடிக்காத காட்சிகளைப் பார்க்கவிரும்பாமல் தொலைக்காட்சிபெட்டியை மூடிவிடலாமே அதைப்போல.

அதைச்செய்து விட்டு அமைதி காப்பதே நலம்.

(நான் எழுதியது ஆபாசமா?)

சவுக்கு said...

உறுதியாக தாங்கள் எழுதியது ஆபாசம் அல்ல நண்பரே. இது நாள் வரையில் அனானிகள் பெயர் குறிப்பிடாமல் சாதமாகவும், பாதகமாகவும் எழுதியிருந்த கருத்துக்களை சவுக்கு பிரசுரித்தே வந்துள்ளது. ஆனால், கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பது, கோழைத் தனம் மட்டுமல்ல, மனநோயும் கூட என்பது தான் என் கருத்து. பின்னூட்டக் காரர்கள் ஆபாசச் சொற்கள் வீசிச் சென்றால் அதை தடுத்து விடலாம் தான். ஆனால், அப்படி தடுப்பதற்கு கூட அவசியம் இல்லாமல், எல்லோரும் தங்கள் கருத்துக்களை நல்ல முறையில் அனானியாகவோ, பெயரோடோ பதிவு செய்ய வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். இன்னும் சொல்லப் போனால், comment moderation என்பதே இருக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.

மாடல மறையோன் said...

நன்றி.

என் பெயர் ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ.

உங்களுக்காக மெனக்கெட்டு பெயரில்லா பின்னூட்டமிட்டேன்.

சவுக்கு said...

பெயரில்லாவிட்டாலும் பின்னூட்டம் அருமை. சிறப்பாக இருந்தது நண்பரே. அருமை.

Post a Comment