Flash News

Wednesday, November 4, 2009

நீதிபதி தினகரன் நல்லவரா கெட்டவரா ?



"நீ யாரென்று கேட்டால் சாதியைக் கூறாமல் நான் தமிழன் என்றோ அல்லது நான் மனிதன் என்றோ கூறும் நிலை வர வேண்டும்' என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 3 அன்று கரூரில் நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார்.



கடந்த வாரம், திமுகவின் நாளேடான முரசொலியில் கருத்துப் படம் வந்திருந்தது. அதன் தலைப்பு “இரு நீதி சம நீதியா ?“ ஒரு பக்கத்தில் ஜெயலலிதா கொடநாட்டில் விதிமுறைகளை மீறி கட்டியுள்ள பங்களாவும், மறு பக்கத்தில் நீதிபதி தினகரன் திருவள்ளுர் மாவட்டத்தில் ஆக்ரமித்துள்ள நிலங்களைப் போட்டும் அதன் கீழே பாரதியார் கவிதை.


“சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்“


என்ற கவிதை போடப்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா பார்ப்பனராம். தினகரன் தலித்தாம். இருவருக்கும் வேறு வேறு அளவுகோல்கள் வைக்கப் படுகின்றனவாம். இதைப் பற்றி பிறகு பார்ப்போம்.




முதலில், நீதிபதி தினகரன் மீது அப்படி என்னதான் குற்றச் சாட்டு என்று பார்ப்போம்.


1) திருவள்ளுர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், தினகரன் 440 ஏக்கர் நிலம் தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் வைத்துள்ளார்.

2) இந்த 440 ஏக்கரில் 310.33 ஏக்கர் தினகரன் மற்றும் அவரது மனைவி விநோதினி, மகள்கள் அமுதா பொற்கொடி மற்றும் அமிர்தா பொற்பொடி பெயரில் உள்ளது.


காவேரிராஜபுரத்தில் நீதியரசர் (????) தினகரன் சாலை


3) 41.27 ஏக்கர் நிலம் அரசால் “ஏரி புறம்போக்கு“ என்று வகைப்படுத்தப்பட்டு, தினகரனால் ஆக்ரமிக்கப் பட்டுள்ள நிலம்.

4) 88.33 ஏக்கர் நிலம் “அனாதி நிலம்“ என்று அரசால் வகைப்படுத்தப்பட்ட நிலம். அனாதி நிலம் என்றால், நிலமற்ற ஏழைகளுக்காக அரசு வழங்க ஒதுக்கப் பட்ட நிலம். இந்த 88.33 நிலமும் தினகரன் ஆக்ரமித்துள்ளார்.

5) இந்த நிலங்களில், பழத் தோட்டம் போட்டுள்ளார் தினகரன். இத்தோட்டத்துக்கு, ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ள நிலத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் பாய்ச்சப் படுவதால், கிராம மக்கள் இந்நீர்நிலைகளை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.

6) கும்மிடிப்பூண்டி தாலுகா பூவாலை கிராமத்தில் 50 ஏக்கர் பழத்தோட்டம் வைத்திருக்கிறார்.

7) தினகரன் பயன்படுத்தும் காரின் நம்பர் பிளேட் சிகப்பு பின்னணியில் தங்க நிறத்தில் பொறிக்கப் பட்டுள்ளன. சட்டப் படி, இது போல ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மட்டுமே இது போல நம்பர் பிளேட்டுகள் வைக்க முடியும்.

8) சென்னை ஷெனாய் நகரில் 5 மாடி வணிக வளாகம். சிஎம்டிஏ இவ்வளாகம் கட்ட கொடுத்த அனுமதியில் 4 மாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தினகரன் 5 மாடிகள் விதிகளை மீறி கட்டியுள்ளார். இதன் மதிப்பு இரண்டரை கோடி.

9) தினகரன் மற்றும் அவரது மனைவி பெயரில் சென்னை அண்ணா நகரில் 90 லட்சத்திற்கு 4800 சதுர அடி வீட்டு மனை. இம்மனையில், தற்போது வீடு கட்டப் பட்டு வருகிறது.

10) தலா 3800 சதுர அடிக்கு சோளிங்கநல்லூரில் தனது மாமியார் பரிபூர்ணம் பெயரில் மூன்று மனைகள். மாமியார் பெயரில் வாங்கப்பட்ட நிலங்கள் உடனடியாக இரு நாட்களுக்குள் மகள் பெயருக்கு (தினகரன் மனைவி விநோதினி) மாற்றப் படுகிறது.

11) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அண்ணா நகர் கிளையில் தினகரன் மனைவி விநோதினி 2007ம் ஆண்டு 62 லட்சமும் 2008 ம் ஆண்டு 35 லட்சமும் கடன் பெற்றுள்ளார். தினகரன் பாங்க் ஆப் பரோடாவில் 56 லட்சம் கடன் பெற்றுள்ளார். இது போக தினகரன் சேமநல நிதியிலும் அரசு கடனாக 6 லட்சமும் பெற்றுள்ளார். ஒரு மாதத்துக்கு கட்ட வேண்டிய கடன் தொகை ஏறக்குறைய 3 லட்சம். எனக்குத் தெரிந்து இந்தியாவில் எந்த நீதிபதிக்கும் மாதம் 3 லட்சம் சம்பளம் கொடுக்கப் படவில்லை.

12) தனது மாமனார், மாமியார், சகோதரி, மைத்துனர் ஆகியோரை பங்குதாரராகக் கொண்ட டியர் லேண்ட்ஸ், அமுதம் கார்டன்ஸ், அமிர்தம் கார்டன்ஸ் மற்றும் கேனான் கார்டன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

13) 4261 சதுர அடி நிலங்கள் இரண்டு தனது மனைவி பெயரில், சென்னை, சோளிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டின் கீழ் பெற்றுள்ளார்.

14) ஊட்டியில் மாமியார் பரிபூர்ணம் பெயரில் 4.5 ஏக்கர் நிலம். இதன் மதிப்பு 9 கோடி. அரசு நிர்ணயித்துள்ள மதிப்பு 3 கோடி. ஆனால் இதன் மதிப்பு 33 லட்சம் என்று பத்திரப் பதிவு செய்யப் பட்டுள்ளது.




எப்பேர்பட்ட
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏழை
தலித் பார்த்தீர்களா ?


இது போகவும், தினகரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருக்கும் பொழுது செய்த ஊழல்களின் பட்டியல் பெரியது. இடுகை மிகவும் பெரியதாக ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
இப்போது முதல் பத்திக்கு வருவோம்.

ஸ்டாலின் சாதியை சொல்லாதீர், தமிழன் என்று சொல்லுங்கள் என்று கூறுகிறார். அவர்களின் கழக நாளேடு, பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரருக்கு ஒரு நீதி என்று ஒரு கடைந்தெடுத்த ஊழல் பேர்விழிக்கு வக்காலத்து வாங்குகிறது. சாத்தான் வேதம் ஓதுவது போலில்லை ?


ஜெயலலிதாவின் ஊழல் ஊரறிந்தது.

ஆனால் ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டியவரையும், ஒரு அரசியல்வாதியையும் ஒப்பீடு செய்வது சரியா ?

திமுக, தினகரன் ஊழல் செய்து, ஊரார் நிலத்தை அபகரித்தது உண்மை என்று ஒப்புக் கொள்கிறதா ?

அப்படி ஒப்புக் கொண்டும், தினகரன் தலித் என்பதால், ஊழல் புரிந்தாலும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக வேண்டுமா ?

என்னாங்கடா உங்க நியாயம் ?

ஊழல் வாதிகளுக்கு சாதி ஏது, மதம் ஏது ?




ஏழை தலித் நிலங்களையும், அரசு புறம்போக்கையும்
ஆக்ரமிக்கும் ஒரு நபரை அந்த நிலத்தின்
பெயராலேயே அழைப்பதுதானே முறை ?


திமுக வை விடுங்கள். ஆவணங்கள், பிரமாண வாக்குமூலங்கள், புகைப்படங்கள், போனில் மிரட்டிய ஒலி நாடாக்கள் என இத்தனை ஆதாரங்கள் இருந்தும், இன்னும் முடிவெடுக்காமல் தினகரன் அரசு நிலங்களை ஆக்ரமித்துள்ளாரா இல்லையா என்று இந்திய சர்வேயர் ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் உச்ச நீதிமன்றத்தை என்னவென்று சொல்வது ?

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்



ஒப்பாரி

4 comments:

கலையரசன் said...

---நெஞ்சு பொறுக்கு திலையே////

satheshpandian said...

எல்லாத்துக்கும் சாதியை சொல்லி தப்பிப்பது இந்த நாட்டின் சாபகேடு

சவுக்கு said...

கருத்துக்கு நன்றி கலையரசன், சத்தீஷ்பாண்டியன்

Anonymous said...

Mr.Karunanidhi always curse hindu's, & particularly brahmins, but his party win the election with hindu's votes.

Post a Comment