Flash News

Thursday, May 28, 2009

யாருக்கும் வெட்கமில்லை !


நன்றி. துக்ளக்

ஒரு வழியாக கருணாநிதி நடத்திய உள்ளே வெளியே நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. தமிழினத் தலைவராய் இருப்பதைக் காட்டிலும், குடும்பத் தலைவராய் இருப்பதுதான் பிரதான பணி என அப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார். காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தி, கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதை, முதலில் வீராவேசம் காட்டி எதிர்த்த கருணாநிதி, பின்பு அமைதியாக ஏற்றுக் கொண்டார். மொத்தம் திமுகவுக்கு கிடைத்த மூன்று கேபினேட் அமைச்சர் பதவிகளில், இரண்டை குடும்பத்துக்கும், மூன்றாவதை குடும்பத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் வாரி வழங்கிய ராசாவுக்கும் வழங்கியுள்ளார் கருணாநிதி. இதற்காக இவர் டெல்லி சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து பேரம் பேசி தோல்வியுடன் திரும்பியதை, இந்தியாவே பரிதாபமாக பார்த்தது.


முதல் முறை எம்.பி யான தன் மகன் அழகிரிக்கு கேபினெட் அமைச்சர் பதவி கொடுப்பதற்காக, கட்சியின் மூத்த உறுப்பினரும், ஏற்கனவே கேபினெட் அமைச்சராக பல முறை இருந்துள்ள டி.ஆர்.பாலு காவு கொடுக்கப் பட்டுள்ளார். ஜெயலலிதா அரசாங்கத்தால் நள்ளிரவில் கைது செய்யப் பட்டு, சி.பி.சிஐடி அலுவலகத்தில் கருணாநிதி வைக்கப் பட்டிருந்தபோது, அங்கே வந்து பொதுமக்களுடன் அந்த நள்ளிரவு நேரத்திலும், போராட்டம் நடத்தியது டி.ஆர்.பாலு என்பதை கருணாநிதி வசதியாக மறந்து விட்டார்.





1996ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் அழகிரியைவிட பன்மடங்கு தகுதி பெற்ற திருச்சி சிவா, இணை அமைச்சராகக் கூட பரிசீலிக்கப் படவில்லை.

கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருந்தும், வெளிப்படையாக வெட்கமில்லாமல் தன் குடும்பத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் கருணாநிதிக்கு தன் மறைவுக்கு பின்னால், திராவிட முன்னேற்ற கழகம், பல துண்டுகளாக உடையும் அபாயம் உள்ளது என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறார் என்று புரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், தன் குடும்ப சொத்து என்பதை, ஆற்காடு வீராசாமியிடமிருந்து, பல ஆண்டுகளாக அவரிடம் இருந்த பொருளாளர் பதவியை பறித்ததன் மூலமும், அழகிரிக்கு கட்சிப் பதவி அளித்து, தற்போது கேபினெட் அமைச்சராக ஆக்கியிருப்பதன் மூலமும், திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெளிவாகி உள்ளது.



மாறன் சகோதரர்கள் பிரிந்து இருக்கையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களில் வண்ண விளம்பரங்கள் வெளியிட்டதையும், ஸ்பெக்ட்ரம் ஊழலை தினமும் விரிவான செய்தியாக தமிழகம் முழுவதும் பரவச் செய்ததில் சன் டிவியின் பங்கு மறக்க முடியாதது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணம் முந்தைய அமைச்சர் தயாநிதி எடுத்த முடிவுகள்தான் என ராஜாவும், நான் அமைச்சராக இருக்கையில் ஊழலே நடைபெறவில்லை என்று தயாநிதியும், மாறி மாறி பேட்டி கொடுத்தையும் இந்த தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

மாறன் சகோதரர்களை ஒழித்துக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மதுரையில் அழகிரி ராயல் கேபிள் விஷன் தொடங்கியதும், சென்னையில் ஹாத்வே நிறுவனத்துடன் இணைந்து சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க அழகிரி எடுத்த முயற்சிகளும், சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் மதுரையை ஒட்டிய பகுதிகளில் திரையிட விடாமல், அழகிரியின் கூட்டம் செய்த அராஜகத்தையும், அந்த அராஜகத்தை சன் டிவியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய தயாநிதியும் நடத்திய கேலிக்கூத்துக்களையும் இத்தமிழகம் கண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக, சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க வேண்டும் என்று கருணாநிதியே முன்னின்று நடத்திய நாடகம் தான், அரசு கேபிள் கார்ப்பரேஷன். அரசுப் பணத்தில் பல கிலோமீட்டர்களுக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் போடப்பட்டு, பிறகு அவை மாறன் சகோதரர்களின் ஏற்பாட்டால் பல இடங்களில் அறுத்து எறியப்பட்டதும், அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், உமா சங்கர், மனம் வெறுத்து, சுமங்கலி கேபிள் நிறுவனத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததையும், அதன் மறுநாள் அவர் மாற்றப் பட்டதையும், ஏதோ ஒரு வெற்றுக் காரணத்தை வைத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டதையும்தான் இத் தமிழகம் பார்த்திருக்கிறது.

இத்தனை அநியாயங்கள் நடந்தும், சிறு சலனமும் இல்லாமல் தமிழக மக்கள் அமைதியாக இருப்பது ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தத் தான் என்று சிலர் எண்ணக் கூடும்.

எந்த மாற்றமும் இல்லை. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்ததைவிட அதிகமான தொகையை கொடுக்கக் கூடிய வல்லமை படைத்தது திமுகவா அதிமுகவா என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்.

சரி தேர்தல் வரும் வரை என்ன செய்வது ?

அதையெல்லாம் மறந்து சிரிக்கத்தானே இருக்கிறது, ஆதித்யாவும் சிரிப்பொலியும்.....


அதுவும் போர் அடித்தால் "மானான மயிலாட" பார்த்தால் மனது மகிழாதா என்ன ?

யாருக்கும் வெட்கமில்லை.... ... .... ... !



//ஒப்பாரி//

Tuesday, May 26, 2009

உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.



நன்றி தினமணி


ஒரு வழியாய் கருணாநிதியின் "உள்ளே வெளியே" ஓரங்க நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த ஒரு வாரமாய் தேசிய ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும், இந்நாடகம் குறித்த செய்திகள் புளித்துப் போகும் அளவுக்கு வந்தன.

2004 பாராளுமன்ற தேர்தலில் 145 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி இன்று 206 இடங்களைப் பெற்றுள்ளது என்பதை கருணாநிதி மறந்து, மீண்டும் 2004ல் உள்ளது போல் பிரதமர் பதவி தவிர அத்தனை பதவிகளையும் கேட்டுப் பெற்று விடமுடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டே டெல்லி சென்றார். தன்னுடன் அவரது "பெரிய" குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், அதிகாரிகளையும், அமைச்சர் பெருமக்களையும் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வாங்கி அதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தார். ஆனால், 206 இடங்களைப் பெற்ற காங்கிரசின் இறுமாப்பு எப்படி இருக்கும் என்பதை கண்கூடாகப் பார்த்தார். 272 எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் மெஜாரிட்டி என்ற நிலையில், போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவிக்க கட்சிகள் வரிசையில் நிற்கும் நிலையில் 322 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்து தெனாவெட்டாய் இருந்தது காங்கிரஸ் கட்சி. தன் பழைய செல்வாக்கை இழந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் பதவி தேவைகளை நிறைவேற்ற இயலாமல், டி.ஆர்.பாலுவை விட்டு, "வெளியில் இருந்து ஆதரவு" என்று அறிவிக்க சொல்லிவிட்டு, படை பரிவாரங்களோடு, டெல்லியிலிருந்து கிளம்பினார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறைய வருவாய் வரக்கூடிய இலாக்காக்களை காங்கிரஸ் ஒதுக்க மறுத்ததுதான் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தன்னுடைய பாச்சா பலிக்காது என்று நன்கு புரிந்தவுடன், காங்கிரஸ் கொடுத்த மந்திரி பதவிகளை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தற்போது ஏற்றுக் கொண்டு குடும்ப மந்திரிகளை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.




தன்னுடைய முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வீல் சேரில் டெல்லி சென்று சோனியாவையும் மன்மோகனையும் சந்தித்து இரண்டு நாட்கள் தங்கி பேரம் நடத்தத் தெரிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கையில் என்ன செய்தார் என்று ஞாபகம் இருக்கிறதா ?

1) மன்மோகன் சிங்குக்கு கடிதம்
2) சட்டசபையில் தீர்மானம்
3) மனிதச் சங்கிலி
4) எம்.பி. பதவி ராஜினாமா என்ற நாடகம்
5) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை
6) டெல்லிக்குத் தந்தி
7) சோனியாவுக்கு கடிதம்
8) ஒரு நாள் பொது வேலைநிறுத்தம்
9) மீண்டும் சட்டசபையில் தீர்மானம்
10) மீண்டும் டெல்லிக்கு தந்தி
11) குடும்பத்துடன் நான்கு மணி நேர உண்ணாவிரதம்


ஆனால், குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவிக்கான பேரம் என்றதும், விரைவாக டெல்லி சென்று பேரம் நடத்திவிட்டு, பேரம் படியவில்லை என்றதும், பதவியேற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்து விட்டு கடும் கோபத்துடன் திரும்பி வந்தார். இப்போது மந்திரி பதவி கேட்டு தந்தி அடிப்பது தானே ? தந்தி அடித்தாலோ கடிதம் அனுப்பினாலோ பதவி கிடைக்காது என்று தெரிந்துதான், நேரில் டெல்லி சென்றார்.


இதே முயற்சியை கருணாநிதி இலங்கை தமிழர் விஷயத்தில் எடுத்திருந்தாரேயானால், எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் ? எத்தனை பேர் உடல் ஊனமாகாமல் இருந்திருப்பர் ?

குற்றுயிரும் குலை உயிருமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் மருத்துவ வசதி இல்லாமல் ஈழத்திலே அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், பதவி பேரம் நடத்தும் இந்தக் கருணாநிதியை என்ன சொல்வது ?

... ச்சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு

/ஒப்பாரி/

Saturday, May 23, 2009

இதையும் பாருங்கள் !





தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப் பட்டதும், தமிழகமே துயரத்தில் ஆழ்ந்து, ஏதாவதொரு மூலையில் இருந்து அவர் இறக்கவில்லை என்ற நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தோடு, அலைந்து கொண்டிருந்தனர்.


இந்த ஏக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் சில பத்திரிக்கைகள் இதிலும் லாபம் சம்பாதிப்பது எப்படி என்று அட்டைப் படத்தில், பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசிங்கத்துடன் எடுத்திருந்த புகைப்படத்தை இப்போது எடுத்தது போல் அட்டைப் படத்தில் போட்டு கொள்ளை லாபம் பார்த்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இத்தகைய மலிவான உத்திகளை கையாளும் பத்திரிக்கைகளை புறக்கணிப்பது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமை.


இலங்கை அரசு கையாண்ட உத்திகளை நாமும் கையாள முடியும் என்பதற்கான உதாரணம் இதோ


Friday, May 22, 2009

வடக்கு வழங்கவில்லை குடும்பம் செழிக்கவில்லை


உடன்பிறப்பே,

பம்பரமாய்ச் சுற்றி, நாடாளுமன்ற தேர்தலில் நீ ஈட்டித்தந்த வெற்றி தெவிட்டாத தெள்ளமுதாய்ச் நாவில் சுவைக்கும் இவ்வேளையில், அச்சுவையிலே வேம்பைக் கலந்தது போல் கழகக் கண்மணிகளாம் அழகிரி, தயாநிதி, கனிமொழி, பாலு, ராசா ஆகியோருக்கு கேட்ட துறைகளில் அமைச்சர் பதவி அளிக்காமல், வடக்கு வஞ்சகம் செய்துள்ளதை நீ அறிவாயா ?

கப்பல் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே ஆகிய துறைகளைக் கேட்டால், சிறுதொழில், ரசாயனம், ஜவுளி ஆகிய துறைகளை அளிப்போம் என்று ஒரு காலத்திலே எனக்கு சொக்கத் தங்கமாய்த் தெரிந்த அம்மையார் கூறுகிறார்.

சிறுதொழிலையும், ஜவுளியையும், வைத்துக் கொண்டு, பனகல் பூங்காவில் தெருமுனைக் கூட்டம் நடத்தும் செலவுக்குக் கூடத் தேறாது என்பது நான் அறியாததா ?

அறிஞர் அண்ணா அன்றே கூறினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று. வடநாட்டார், தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

கண்ணீரிலும் செந்நீரிலும் தோய்த்தெடுத்த கரணைகளை இணைத் திட்டதும் வனப்பும் வலிவும் மிகுந்ததுமான திராவிட இயக்கமெனும் இந்த அணிகலனைத் தான் அய்யா பெரியாரும், அறிஞர் பெருமான் அண்ணாவும் நம்மிடத்திலே ஒப்படைத்து; நன்கு காத்திடுவோம் என்ற நம்பிக்கையுடன் நம்மை வாழ்த்திச் சென்றுள்ளார்கள்.

அந்த கழகத்தை கட்டிக் காத்திட, அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு மந்திரி பதவி வழங்க வேண்டாமா ?

கலங்கரை விளக்காம், நாடார் குலச் செல்வி கண்மணி கனிமொழிக்கு மந்திரி பதவி வழங்க வேண்டாமா ?

பரம ஏழை பத்தரை மாற்றுத் தங்கம் தயாநிதிக்கு பதவி வேண்டாமா ?

சேதுக் கால்வாய்த் திட்டத்தில், பல கோடிகளை அள்ளித் தந்த தேவரினச் சிங்கம் பாலுவுக்கு பதவி வேண்டாமா ?

என் உயிராய் இருந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கும் கோடானு கோடி தலித் மக்களின் ஒரே பிரதிநிதி, இந்தியாவின் மிகப் பெரிய ஊழலுக்குச் சொந்தக்காரன், அலைக்கற்றை ஆ.ராசாவுக்கு பதவி வேண்டாமா ?

என் செய்வது? உயிருக்கே மிக மிக ஆபத்து என்ற இரண்டு கண்டங்களில் இருந்து; நான் பிழைத்து எழுந்திருப்பதே ஓயாது உழைத்து உழைத்து - ஒரு பெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ள உன் போன்ற - உடன்பிறப்புகளின் - உற்ற தோழமைக் கட்சி முன்னோடிகளின் - திருக்கரங்கள் பற்றி; ""நன்றி! நன்றி!’’ என நாளெல்லாம் - என் நாத் தழுதழுக்க நன்றிகளைக் குவிக்கத்தானே!

என் குடும்பத்தின் வளத்தை பெருக்கத் தானே ?

" உறவுக்குக் கை கொடுப்போம்; பதவி கொடுப்போம்,

பதவி வேண்டுமென்ற அந்த உரிமைக்குக் குரல் கொடுப்போம்"

என்பது நாம் மறந்து விடாமல் எப்போதும் இருக்கின்ற இலட்சிய முழக்கமன்றோ!

நமது லட்சியத்துக்கு எதிராக உறவுகளுக்கு கேட்கும் பதவி இல்லை என்ற எத்தர்களின் எக்காளத்தைப் பார்த்து, நீ மனம் கொதிப்பாய் என்பதை நான் அறியாமல் இல்லை.

அந்த அம்மையாரைப் பார்த்து, நான் புகழாத புகழ்ச்சியா ? அம்மா......... தாயே........... என்று கெஞ்சவில்லையா ?

அல்லது நான் அந்த அம்மையாருக்கு அடிமை என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லையா ?



இதை விட இன்னும் நான் என்னதான் செய்வது ?

கொஞ்சமாக இருந்த முதுகெலும்பு அடிமையாக இருப்பதற்கு இடையூறாக இருந்ததால், மருத்துவர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை மூலம் அதையும் அகற்றி விட்டு முழு நேர அடிமையாக மாறிய பின்னும் அமைச்சர் பதவி அளிக்கவில்லை என்றால் காங்கிரசும் சோனியாவும் அரக்க இதயம் படைத்தவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகவில்லையா ?

மீண்டும் வலியுறுத்திக் கேட்டால், மாநிலத்தில் ஆதரவை வாபஸ் வாங்கி என்னை நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள். பதவி போனால், அறிக்கை அரசியும் சொக்கத் தங்கமும் இணைந்து விடுவார்கள் என்பதும், இணைந்தால் இதயம் கனக்கும், கண்கள் வலிக்கும் என்பதை பல முறை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

இன்று செயற்குழு கூடுகிறது. இச்செயற்குழுவில், வரலாறு காணாத முக்கிய முடிவு ஒன்றைத் தீர்மானமாக வடித்தெடுக்க வேண்டும்.

பதவி தொடர்பாக முடிவெடுப்பதற்கு எனக்கு மட்டுமே அதிகாரம் என்ற சிறப்பு வாய்ந்த தீர்மானமே அது ! அத்தீர்மானம் நிறைவேறிய உடனே மீண்டும் திருவோடு ஏந்தி டெல்லி சென்று தமிழகத்தின் (குடும்பத்தின்) உரிமையை நிறைவேற்றாமல் இருந்தால் எனக்கு ஓய்வேது ? அண்ணாவின் தம்பி என்ற பெயரேது ?

அன்புடன்

மு.க

/ஒப்பாரி/

மந்திரி பதவி கொடுங்கள் தாயே !




மூன்று எழுத்து...மூன்று எழுத்து...

கூட்டு மூன்று எழுத்து

ஓட்டு மூன்று எழுத்து

கட்சி மூன்று எழுத்து

ஆட்சி மூன்று எழுத்து

தில்லி மூன்று எழுத்து

சோனியா மூன்று எழுத்து

ராகுல் மூன்று எழுத்து

திமுக மூன்று எழுத்து

பதவி மூன்று எழுத்து

இல்லை மூன்று எழுத்து

அல்வா மூன்று எழுத்து

மூக்கு மூன்று எழுத்து

ஆப்பு மூன்று எழுத்து

முடிவு மூன்று எழுத்து

வெளியே மூன்று எழுத்து...

நன்றி www.chennaicutchery.blogspot.com

Sunday, May 17, 2009

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்

நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்

ஈழத்தில் படுகொலையை நிறுத்த தன்னையே மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் போராட்டத்தை கருணாநிதி தன் கூலிப்படையாக செயல்படும் காவல்துறையை ஏவி விட்டு ஒடுக்கிய நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி வழக்கறிஞர்கள் மட்டும் தொய்வடையாமல், காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராட்டங்களை எடுத்துச் சென்றனர். பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்புப் பேரவை அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்தின் அன்று சாலைமறியலில் ஈடுபட்டு நு£ற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கைதானார்கள். கைதான வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினரை மட்டும் சிறையில் அடைக்க காவல்துறை முடிவெடுத்து இரவு 10 மணிக்கு சைதாப்பேட்டை நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்த 200க்கும் மேற்பட்ட காவலர்களோடும், கமாண்டோ வீரர்களோடும், அதிரடிப்படை காவலர்களோடும் கைதான வழக்கறிஞர்களை அழைத்து வந்தது. கைதுசெய்யப்பட்ட சக வழக்கறிஞர்களுக்கு பிணை வேண்டி மூத்த வழக்கறிஞர் துரைசாமி மற்றும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் நீதிபதி இல்லத்திற்கு சென்று நீதிபதி இல்லத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவரை உள்ளே நுழையவிடாமல் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அப்போது அங்கே பணியில் இருந்த இணை ஆணையர் ராமசுப்ரமணியன் உத்தரவின்படி புகழேந்தி மீது தாக்குதல் நடத்தப் பட்டு மண்டை உடைக்கப் பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். காவல்துறை அதிகாரிகள் ராமசுப்ரமணியம், பிரேம் ஆனந்த் சின்கா, மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதி முன்பு அளிக்கப் பட்ட புகாரின் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 17ந் தேதி நீதிமன்றத்துக்கு வந்த சுப்ரமணியன் சுவாமி மீது சிலர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என சில வழக்கறிஞர்கள் மீது கொலைமுயற்சி (!) வழக்கு பதிவு செய்து 20 வழக்கறிஞர்களை கைது செய்ய முயற்சி எடுத்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 19ந்தேதி உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த தாக்குதலைத் தொடர்ந்து எத்தனை போராட்டங்கள் ? எத்தனை வழக்குகள் ? ஒரு மாதம் தொடர்ந்த போராட்டங்களுக்கு பின் நீதிமன்றத்தில் மார்ச் 17ம் தேதி ஒரு தீர்ப்பு கிடைத்தது.
சென்னை உயர்நீதிமன்றம், கலவரத்திற்கான சூழ்நிலைகளை ஆராய்கையில், வழக்கறிஞர் மீதான இந்த தாக்குதலுக்கு கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்ரமணியம் ஆகியோர் காரணமானவர்கள் என்ற பூர்வாங்க முடிவுக்கு இந்நீதிமன்றம் வருகிறது. அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவர்கள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்யவேண்டும் எனவும் இந்நீதிமன்றம் கருதுகிறது எனத் தீர்ப்பளிக்கப் பட்டிருந்தது.
மார்ச் 19 அன்று இத்தீர்ப்பை கொண்டாடி வெற்றிப் பேரணி நடத்தினோம். தீர்ப்பு வந்த மறுநாள் கருணாநிதி நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன் ஆனால் பாதிக்கப் பட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகத் தடையேதும் இல்லை என்று ஆலோசனையும் வழங்கனார். இரண்டு மாதங்கள் முழுமையாக கடந்து விட்டபின்னரும் இன்று வரை இந்த இரு காவல்துறை அதிகாரிகளும் இடைக்கால பணிநீக்கம் செய்யப் படவில்லை.

சென்னை உயர்நீதின்றத்துக்கு ஏப்ரல் 30 முதல் கோடைக்கால விடுமுறை விடப்பட்டிருந்தது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

கடந்த 10ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தந்த சோனியா காந்திக்கு கருப்புக் கொடி காட்டுவதென முடிவுசெய்து, முறையாக அனுமதி வாங்கி பழ.நெடுமாறன் தலைமையில் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தால் மாலை விடுதலை செய்வதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்து இரவு 10 மணி ஆன பின்னரும் கூட விடுதலை செய்யப் வில்லை.
திடீரென இரவு 11மணிக்கு நீதிபதி திருமண மண்டபத்துக்கே போல¦சாரால் அழைத்து வரப்பட்டார். நீதிபதி கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது, கைது செய்யப்பட்டவர்கள்தான் நீதிபதியிடம் கொண்டு செல்லப்படவேண்டும்,
மேலும், அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதானால் அனுமதி அளித்த காவல்துறை ஆணையர் எழுத்துபூர்வமான புகார் அளிக்கவேண்டும், இந்நேர்வில் காவல்துறை ஆணையரின் புகார் இல்லை, மேலும் கைது செய்யப்பட்டவர்கள் உறவினர் அல்லது நண்பருக்கு கைது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி வாதிட்ட பின்னரும், நீதிபதி அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

11.05.2009 அன்றே கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்கி 9வது பெருநகர நீதிபதி ஆணையிட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் 12.05.2009 அன்று விடுவிக்கப்பட்டனர். ஆனால் மேலும் வழக்கறிஞர்கள் இருவரும், புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்றும் உத்தரவிட்டார். இதற்கு நடுவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம், அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அன்றே விடுவிக்கப் பட்டனர். ஆனால் வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் மட்டும் விடுவிக்கப் படாமல் 2004 முதல் காவல்துறை இவர்கள் இருவர் மீதும் புனைந்து வைத்திருந்த பொய் வழக்குகளில் கைது செய்ய பி.டி வாரண்ட் தயார் செய்து 7வது பெருநகர நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த காலை 11 மணிக்கு அழைத்து வந்தனர். எந்த வழக்கில் கைது செய்யப்பட்டனரோ அந்த வழக்கில் ஏற்கனவே பிணை வழங்கப் பட்டுள்ளதால், இவர்கள் இருவரும் தற்பொழுது கைதிகள் அல்ல, ஆகையால் இவர்களை பி.டி வாரண்ட்டில் ரிமாண்ட் செய்ய முடியாது என்ற வாதத்தை ஏற்ற நீதிபதி காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று வழக்கறிஞர்கள் இருவரையும், ரிமாண்ட் செய்ய மறுத்தார். மேலும் வழக்கறிஞர்கள் இருவரும், புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்றும் உத்தரவிட்டார். இதற்கு
நடுவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம், அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

சிறையிலிருந்து வழக்கறிஞர்கள் இருவரும் பிற்பகல் 2.50 மணிக்கு சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். உதவி ஆணையர் காதர் மொய்தீன் மற்றும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அடங்கிய காவல்துறையினர் சிறை வாசலிலேயே புகழேந்தி மற்றும் ரஜினிகாந்தை கைது செய்தது. இருவரையும் சென்னை துறைமுக காவல் நிலையத்தில் 5 மணிநேரம், யாருக்கும் தகவல் சொல்லாமல் அடைத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து விடுதலை ஆகி வருவார்கள் என்று காத்திருந்த இவர்களின் நண்பர்கள் இவர்களை காணாமால் யாரைக் கேட்பது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு 2008ல் பதியப்பட்ட ஒரு வழக்கிலும், 2009ல் ஈழத்தமிழருக்கான போராட்டம் நடத்தியது தொடர்பான ஒரு வழக்கிலும் இவர்கள் இருவரையும் கைது செய்திருப்பதாக சொல்லி 7வது பெருநகர நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.
எங்கள் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவில்லை என்றும் உடனடியாக தகவல் தெரிவிக்கப் படவேண்டும் என்றும் நீதிபதி முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின் நீதிபதி உடனடியாக காவல்துறையினருக்கு கைது குறித்து புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்க ஆணையிட்டார். அதற்குப் பின் வழக்கறிஞர்கள் முன்னிலையில், இருவரும் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்தப் பட்டனர். ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாகவும், போல¦ஸ் அராஜகத்துக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி காவல்துறையின் வண்டியில் ஏறிச் சென்றனர்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இவர்கள் இருவரும் கைது செய்யப் பட்ட விதத்தை ஆராய்கையில், காவல்துறை இவர்கள் இருவரையும் நீண்ட நாட்கள் சிறையில் வைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே கைது செய்திருப்பதாகவும், இவர்கள் இருவரும் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் என்பதாலும், வழக்கு பதிவுசெய்து 4 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இப்போது கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்து, இருவரையும் பிணையில் விடுவித்து ஆணையிட்டார். அன்று இரவு 7.30 மணிக்கு புழல் சிறையில் பிணை ஆணை வழங்கப்பட்டது. இருவரும் விடுதலை செய்யப் படுவார்கள் என்று எதிர்பார்த்து சிறைக்கு வெளியே காத்திருந்த இவர்களது நண்பர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி மறுநாள் காலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மறுநாள் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.

மறுநாள் காவல்துறை இன்னொரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியது. ஏற்கனவே 7வது பெருநகர நீதிபதி ரிமாண்ட் செய்ய மறுத்து ஆணையிட்ட அதே பிடி வாரண்ட்டுகளில் ஆஜர் செய்யப்போகிறோம் என்று கூறி மீண்டும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது. ஏறக்குறைய 120க்கும் மேற்பட்ட காவல்துறையினரோடு, கூடுதல் உதவி ஆணையர் ஜி.ராமர் தலைமையில், உதவி ஆணையர் காதர்மொய்தீன் உட்பட, பல காவல்துறை அதிகாரிகள் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை கொண்டு வருவது போல், மக்களுக்காக போராடும் இந்த இரு வழக்கறிஞர்களையும், நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு கைதுசெய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி, இவர்களை ரிமாண்ட் செய்வது தவறு என்று மீண்டும் வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இவர்களை ரிமாண்ட் செய்ய இயலாது என்று ஆணையிட்டு, ஆணையை நீதிமன்றத்தில் படிக்க எத்தனித்தபோது, காவல்துறை மீண்டும், கடைசி முயற்சியாக ஒரு தந்திரத்தை கையாண்டது. புழல் சிறையில் இருந்து இவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டதால், இவர்கள் சிறையிலிருந்துதான் விடுதலை செய்யப் படவேண்டும் என்றும், நீதிமன்றத்தில் இருந்து விடுதலை செய்யப் படக் கூடாது என்றும் நீதிபதியிடம் தகவல் தெரிவித்தனர். கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகையில், சிறை அதிகாரிகள் காவல்துறையிடம் எழுதிக் கொடுக்கும் நோட்டுப் புத்தகத்தில், இந்த இருவர் மீதும், வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் அளித்த சான்று நீதிபதியிடம் சுட்டிக் காட்டப் பட்டது. மீண்டும், காவல்துறையினர், இருவரையும், சிறையிலிருந்துதான் விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் நடைமுறை என்று தெரிவித்த கருத்துக்கு வழக்கறிஞர் சங்கரசுப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, இரு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திலேயே விடுவிக்கப் பட்டனர். கூடியிருந்த வழக்கறிஞர் குழுவினர், மகிழ்ச்சியோடு முழக்கமிட்டபடி இரு வழக்கறிஞர்களையும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு கூடியிருந்த காவல்துறை அதிகாரிகள் முகத்தில், இருவரையும் மீண்டு சிறையில் அடைக்க முடியவில்லையே, உயர் அதிகாரிகளுக்கு என்ன பதில் சொல்வது என்ற பதைபதைப்பு கண்கூடாகத் தெரிந்ததுநடந்த சம்பவங்களை கூர்ந்து காண்கையில், காவல்துறையினருக்கு வழக்கறிஞர்கள் மீது உள்ள பகைமை இன்னும் துளி கூட குறையவில்லை, இன்னமும் பழிவாங்கும் நோக்கத்துடனே இருக்கின்றனர் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. நியாயப்படி, கடும் தாக்குதலுக்கு உள்ளாகி, இன்னும் நியாயம் கிடைக்காமல் அலைகழிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்கள்தான் காவல்துறை மீது கடும் கோபத்தில் இருக்கவேண்டும். ஆனால் காவல்துறை பகைமை உணர்வோடு, இவ்வாறு நடந்து கொள்வது, தலைமையில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் து£ண்டுதலால்தான் என்பது தெளிவாகிறது.

கைது செய்யப் பட்ட இரு வழக்கறிஞர்களும் யார் ? அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் என்ன ? வழக்கறிஞர் புகழேந்தி மற்றும், ரஜினிகாந்த், ஆகிய இருவரும் சமூக உணர்வுடனும், ஏழை உழைப்பாளி மக்களுக்காகவும், ஈழத் தமிழருக்காகவும், தொடர்ந்து போராடியும் வாதாடியும் வருபவர்கள். மிக நேர்மையுடன் தொடர்ந்து, தொய்வில்லாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல், தங்கள் வழக்கறிஞர் தொழில் பாதிப்பதைக் கூட பொருட்படுத்தாமல், போராட்டக் களத்தில் உள்ள இவர்களை மிகச் சாதாரண கிரிமினல்களை நடத்துவது போல, சிறைவாசலில் கைது செய்வதும் தனி அறையில் அடைத்து வைப்பதும், மீண்டும் மீண்டும் கைது செய்வதும், காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. இந்த வழக்கறிஞர்கள் செய்த குற்றம் என்ன ? இன்றைய மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் போல, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே லஞ்சமாக உரிய மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெற்றார்களா ?, பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இன்னொருவர் செய்த ப்ராஜெக்டை தன்னுடையதாக சொந்தம் கொண்டாடி ராணி விருது பெற்றனரா ? லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே ஊழல் செய்த அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி எடுத்தனரா ? அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டு விட்டு, தி.மு.க ஆட்சி மாறியதும், சாதியைப் பயன்படுத்தி, சொந்த சாதி அமைச்சரிடம் அடைக்கலம் புகுந்து மாநகர ஆணையர் பதவி பெறுவதற்காக கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு இருக்கின்றனரா ? வீட்டில் வேலை செய்ய 10 காவலர்கள் அலுவலகத்துக்கு 20 காவலர்கள் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்களா ?முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்கு பிடித்த நிறம் என்று அலுவலக கண்ணாடி, கோப்புகள் அனைத்தையும் பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டு, அ.தி.மு.க 2006 தேர்தலில் தோற்றவுடன், இரவோடு இரவாக, அனைத்தையும் மஞ்சள் நிறத்துக்கு மாற்றினரா ?

இந்த வழக்கறிஞர்கள் நேர்மையான போராளிகள். அரசாங்கப் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் அல்ல ! சட்டம் தந்திருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போராளிகளை சிறையில் அடைப்பதனால் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என்று பகல் கனவு காணும் காவல்துறை அதிகாரிகளே ! உங்களைப்போல, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்களுக்கே எதிராக, ஆளும் வர்க்கத்திற்கு ஏவல் நாய்களாக இருப்பவர்கள் நாங்கள் அல்ல ! மக்களுக்காக உண்மையிலேயே உழைப்பவர்கள்.

கருணாநிதிக்கு இன்று இவ்வளவு விசுவாசமாக இருக்கும் இதே காவல்துறை அதிகாரிகள் அ.தி.மு.க ஆட்சி வந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா ? மீண்டும் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் நள்ளரவில் கைது செய்யத் தயங்கமாட்டார்கள். இவர்களே ஆட்சியாளர்களுக்கு என்ன வழக்குகள் போடலாம், எப்பொழுது கைது செய்யலாம் என்று யோசனையும் சொல்வார்கள்.ஜனநாயகத்தின் உண்மையான எதிரி இந்த அதிகாரிகளும் அதிகார வர்க்கமும்தான். அரசியல்வாதிகளாவது, தேர்தல் என்று வந்துவிட்டால், மக்களிடம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கெஞ்சுகிறார்கள், ஏற்றிய பஸ்கட்டணத்தைக் குறைக்கிறார்கள், இலங்கைத் தமிழர் மீது அக்கறை காட்டுகிறார்கள்¢, இன்னும் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் இந்த அதிகார வர்க்கம், நிறத்தை மாற்றும் பச்சோந்திக் கூட்டம். கடைசி வரை அதிகாரத்தை கையில் வைத்திருக்க எந்த எல்லைக்கும் போவார்கள். நல்ல பதவிக்காக கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

நம் போராட்டம் ஓயவில்லை. இந்த பச்சோந்தி காவல்துறைக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 19/2 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடவேண்டும்.இல்லையென்றால் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் போல நாளை எந்த வழக்கறிஞரும் கைது செய்யப் படலாம். காணாமலும் போகலாம். காணவில்லை என்றால் காவல்துறையிடம்தானே மீண்டும் புகார் செய்யவேண்டும்.???!!!!!

வழக்கறிஞர்களாகிய நாம் பொதுமக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் கதவுளைத் தட்டிப் போராடிக் கொண்டிருப்பவர்கள். நம்மையே இந்த காவல்துறை இக்கதிக்கு ஆளாக்கத் துணிந்தால் நம் கட்சிக் காரர்களை நாம் எப்படிக் காப்பாற்றுவது ? மனிதஉரிமைகளை எப்படி நிலை நாட்டுவது ?

தமிழ்நாட்டில் கருணாநிதியின் மோசமான நிர்வாகத்தால் இன்று ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையை மாற்றும் மகத்தான பணி வழக்கறிஞர்களாகிய நமது கைகளில்தான் இருக்கிறது. இப்பணியை முழுமனதோடு ஏற்று அடக்குமுறைக்கு எதிரான ஒரு நெடிய போராட்டத்துக்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் நமது உரிமைகளை மீட்டு எடுத்தால்தான் பாமர மக்களின் உரிமைகளுக்காக நாம் போராட முடியம். காவல்துறைக்கு கருணாநிதி ஏன் இத்தனை ஆதரவு அளித்து வந்தார் என்பதை, நாடாளுமன்ற தேர்தலில் திமுக அராஜகங்களை காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்ததிலிருந்து தெளிவாக அறிந்திருப்பீர்கள். காவல்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு, ஒரு காவல் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன் குடும்ப ஆட்சியை தமிழகம் மற்றும் டெல்லியில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் இத்திட்டத்தை கானல் நீராக்குவது நமது பொறுப்பு. இந்த கருஞ்சட்டைப் படையை கருணாநிதி குறைத்து மதிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர்களை தாக்கிவிட்டு நடவடிக்கையின்றி தப்பிவிட்டோம் என்று காவல்துறையினரும் எக்காளமிட்டு வருகின்றனர். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பது நமது கடமை. கடமையை ஏற்று பகை முடிப்போம். இறுதி வெற்றி நமதே !


நெஞ்சு பொறுக்குதில்லையே.... ......
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்... ....



/ஒப்பாரி/

Tuesday, May 12, 2009

அரசரைவிட அரசுக்கு விசுவாசம்


போலீசாரால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் வழக்கறிஞர் புகழேந்தி

கருணாநிதியின் அடிவருடியாய் செயல்படுவதில் காவல்துறை காட்டும் முனைப்பும் அவசரமும் வியக்கத் தக்கதாய் உள்ளது. ஆங்கிலத்தில் MORE LOYAL THAN THE KING HIMSELF என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் அரசனை விட அரசுக்கு விசுவாசமாய் இருத்தல். இதைப் போலவே கருணாநிதியைவிட கருணாநிதிக்கு விசுவாசமாக இருக்குமாறு காட்டிக்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருவதை காண முடிகிறது. 10.05.2009 அன்று சோனியாவின் தமிழக வருகையை ஒட்டி பழ.நெடுமாறன் தலைமையில் கருப்புக் கொடி காட்டிய பாரதிராஜா உள்ளிட்ட 120 பேரை காவல் துறை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தது. இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில் 3 வழக்கறிஞர்களும் அடக்கம்.

வழக்கமாக மந்தமாக வேலை செய்யும் காவல்துறை, 11.05.2009 விடியற்காலை 4 மணிக்கு சிறையில் அடைக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீதுள்ள பழைய வழக்குகளை எடுத்து அவசர அவசரமாக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அரெஸ்ட் வாரண்ட் வாங்கி அன்று மதியமே புழல் சிறைக்கு எடுத்துச் சென்று வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் மீது முறையே 3 மற்றும் 8 அரெஸ்ட் வாரண்ட்டுகளை வழங்கியது காவல்துறை. இவ்வளவு வேகத்தை காவல்துறை நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளில் காண்பித்திருந்தால் இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்காது.

இந்த காவல்துறையின் அவசரத்திற்கு உதாரணங்களைத் தருகிறேன். இந்த இரு வழக்கறிஞர்கள் மீதும் நிலுவையிலுள்ள வழக்குகள் ஒன்றும் பெரிய கிரிமினல் வழக்குகள் அல்ல. அனைத்து வழக்குகளுமே காவல் துறையால் புனையப் பட்ட பொய் வழக்குகள். வழக்கறிஞர் திரு.புகழேந்தியை 17.02.2009 அன்று திரு.சுப்ரமணிய சுவாமி மீது முட்டை வீசி அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக பதியப் பட்ட வழக்காகும். 19.02.2009 அன்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய கொடுந்தாக்குதலுக்குப் பிறகு அன்று இரவு கூடிய அன்றைய தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு "17.02.2009 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப் பட்ட நபர்கள் உடனடியாக விடுதலை செய்யப் படுவார்கள், அச்சம்பவம் தொடர்பாக இனி யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை காவல் துறையினர் அளித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் அளித்த உத்தரவாதத்தை மீறினால் அது நீதிமன்ற ஆணையை மீறியதாகும் " என்று வழங்கப் பட்டிருந்த உயர்நீதிமன்ற ஆணையை மீறி புகழேந்தியை இவ்வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.



போலீ்ஸ் வேனில் அமர்ந்துள்ள வழக்கறிஞர் ரஜினிகாந்த்

அடுத்ததாக 12.11.2008 அன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக உண்மையை (????!!!!)கண்டறிய நீதியரசர் (??!!) சண்முகம் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. அந்த சண்முகம் கமிஷன் அரசு சார்பான சாட்சியாக வழக்கறிஞர் ரஜினிகாந்தை அழைத்து விசாரித்தது. அரசு சார்பாக சாட்சியளித்து சாட்சிகளின் விசாரணை முடிந்தது. இந்நிலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் அரசு சார்பாக சாட்சியளித்த வழக்கறிஞர் ரஜினிகாந்தை குற்றவாளியாக கைது செய்துள்ளது கருணாநிதியின் காவல்துறை. அரசு சார்பு சாட்சி திடீரென எப்படி குற்றவாளியானார் என்பது ஆள்பவனுக்குத்தான் வெளிச்சம்.
12.05.2009 அன்று 17வது பெருநகர நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்ட இந்த இரு வழக்கறிஞர்களையும் புதிய வழக்குகளில் ரிமாண்ட் செய்ய நீதிபதி மறுத்து இவர்கள் இருவரும் புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னை மாநகர காவல் துறை ஆணையரும் மற்ற உயர் அதிகாரிகளும் கருணாநிதி நிரந்தர முதல்வர் என்று நினைத்துச் செயல்படுகிறார்களா, அல்லது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இதைவிட கூழைக் கும்பிடு போட்டு போயஸ் தோட்டத்து நாய்களாய் மாறிவிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
செல்வி.ஜெயலலிதா ஒரு ஆண்டுக்கு முன் பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் இன்று அநியாயமாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை தான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வாழ்நாள் முழுவதும் காக்கிச் சட்டையே போடவிடாமல் செய்வேன் என்று பேசியதை இந்தக் காவல்துறை அதிகாரிகள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.


"படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா போவான் போவான் அய்யோன்னு போவான்" என்ற பாரதியின் வரிகளை இந்தக் காவல்துறை அதிகாரிகள் படித்திருப்பார்களா ?

-ஒப்பாரி-

Monday, May 11, 2009

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !


தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !


எமெர்ஜென்சியில் பல நெருக்கடிகளை சந்தித்ததாக மார்தட்டிக் கொள்ளும் முத்துவேல் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் தற்பொழுது தமிழ்நாட்டில் காவல்துறையின் துணையோடு செயல்படுத்தி வரும் அராஜகங்களும் அநியாயங்களும் வரன்முறையற்று வளர்ந்து கொண்டே வருகிறன்றன. தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், மாநில ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும், தன் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும், வரண்முறையற்று ஊழலில் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனநாயக மாண்புகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் கருணாநிதியின் பதைபதைப்பை நன்கு வெளிப்படுத்துகிறது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக முத்துக்குமார் எழுச்சி இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி என்பவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கொளத்தூர் மணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகையில் காங்கிரசார் கல் வீசி எரிந்து கூட்டத்தில் கலகம் செய்திருக்கின்றனர். கலகம் செய்வதை கைது செய்வதற்கு பதிலாக போலீசார் வேட்பாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். உள்துறை அமைச்சர் பழநியப்பன் சிதம்பரம் தோல்வி பயத்தில் மிகக் கடுமையான தவறுகளை செய்து வருகிறார். இவ்வாறு நடக்கும் அனைத்து அநியாயங்களையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இரண்டாவது சம்பவம் பழ.நெடுமாறன் தலைமையில் சோனியாவின் தமிழக வருகையை ஒட்டி நடந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம். முறையாக அனுமதி பெற்று பழ.நெடுமாறன் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, சுந்தர்ராஜன், ஓவியர்கள் ட்ராட்ஸ்கி மருது, வீர.சந்தானம், வழக்குரைஞர்கள் கருப்பன், புகழேந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்ட 120 பேர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை கைது செய்த காவல் துறை, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தது. வழக்கம் போல் மாலையில் விடுதலை செய்யப் படுவார்கள் என்ற எண்ணியிருந்த வேளையில் இரவு 9 மணி வரை அவர்கள் விடுவிக்கப் படாதது சந்தேகத்தை ஏற்படுத்த மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தலைமையில் வழக்கறிஞர்கள் குழு அங்கே சென்றது. 120 பேரை கைது செய்த காவல்துறை கைது செய்யப் பட்டவுடன் கைதானவர்களின் உறவினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை காற்றில் பறக்க விட்டு அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க துடித்தது. கைது செய்யப் பட்டவர்கள் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப் படவேண்டும் என்ற சட்டத்தை புறந்தள்ளி நீதிபதியை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தது காவல்துறை. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த மாநகர காவல் ஆணையரின் புகாரின் பேரில்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சாதாரண நடைமுறையும் மீறப்பட்டு ஆணையாளரின் புகார் இல்லாமலேயே வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவை அனைத்தும் நீதிபதி முன் இரவு 11 மணி முதல் விடியற்காலை 2 மணி வரை எடுத்துரைக்கப் பட்டது. அனைத்து வாதங்களையும் பொறுமையாக கேட்ட நீதிபதி (?) இடையில் சில தொலைபேசி அழைப்புகளை செய்து விட்டு இவர்கள் அனைவரையும் 15 நாட்களுக்கு புழல் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்று ஆணையிட்டார்.

காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய திருஞானம் என்ற துணை ஆணையரின் தலைமையில் இவ்வளவு அநியாயங்களும் நடந்தேறியது. நீதிபதிகளும், காவல் துறையினரும் பதவியேற்கையில் தாங்கள் அரசியலமைப்பின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று எடுத்த உறுதி மொழியை ஆட்சியாளர்களின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் இவர்கள் கருணாநிதியின் கைக்கூலிகளாகவும், அடிமைகளாகவும் செயல்படுவது ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் ஆபத்தாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முத்துவேல் கருணாநிதிக்கு விசுவாசமாய் செயல்படும் இந்த காவல் அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இதைவிட விசுவாசமாய் ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கும் காட்சியும் நடந்திருக்கிறது, இனியும் நடக்கத்தான் போகிறது.

சட்ட விரோதமான உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தால் இந்த காவல் துறை அதிகாரிகளை தூக்கிலா போடப்போகிறார்கள் ? அதிகபட்சம் பணியிட மாறுதல் வரும். எங்கே பணியிட மாறுதல் வந்தாலும், அந்த இடத்தில் துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு பணிபுரிய ஒரு அலுவலகமும், வண்டியும், ட்ரைவரும் கண்டிப்பாக வழங்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்பொழுது இருக்கும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் நியாய தர்மங்களை காற்றில் பறக்கவிட்டு அரசியல் சட்டத்திற்கும் இயற்கை நியதிக்கும் முரணாக சட்டவிரோதமான உத்தரவுகளை நிறைவேற்றி ஆட்சியாளர்களின் அடிவருடியாகும் இந்த காவல் துறை அதிகாரிகளை காலம் மன்னிக்காது.


" நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.. .. ..


-ஒப்பாரி-

Saturday, May 9, 2009

மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்து நலம் விசாரிப்பதற்காக இன்று சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் வருகை தந்தார். இவர் வருகையை ஒட்டி ஜெமினி மேம்பாலம் முதல் சாந்தி தியேட்டர் வரை போக்குவரத்து சுத்தமாக நிறுத்தப் பட்டது. சைக்கிள் கூட அனுமதிக்கப் படவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் மீது நிலவி வரும் கடுமையான அதிருப்தி காரணமாக இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக மன்மோகன் சிங் மீது செருப்பு வீசக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நிறுத்தப் பட்டது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மவுன்ட் ரோடு மட்டுமல்லாமால் மவுன்ட் ரோட்டில் இணையும் அனைத்து சாலைகளும் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்தன. பொது மக்களுக்கு இவ்வளவு இன்னல் கொடுத்து கருணாநிதியை பார்த்து மன்மோகன் சிங் என்ன செய்யப் போகிறார் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
அநேகமாக தேர்தல் தோல்வியை முன்கூட்டியே கணித்து கருணாநிதிக்கு ஆறுதல் சொல்வதற்காக இருக்கக் கூடுமோ என்ற ஐயமும் எழுகிறது.

Tuesday, May 5, 2009

சிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு



சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிபுசோரேன், ஆளுநர் பர்னாலா மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சந்தித்து உரையாடினால் .. .. .. ... ..

(என்று ஒரு கற்பனை)



கருணாநிதி : வாங்க சோரேன். எப்படி இருக்கீங்க ?

சோரேன் : அத ஏன் சார் கேக்கறீங்க... ஒரே நாறப் பொழப்பு சார். எலெக்சன்ல ஜெயிக்கறதுக்கு கண்டவன் கேக்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதா இருக்கு... இந்த ஆதிவாசிப் பசங்க தொந்தரவு தாங்க முடியல சார். என்னா கேள்வி கேக்குறாங்க.. ..

கருணாநிதி : இங்க மட்டும் என்ன வாழுதாம். உடம்பு சரியில்ல, கடைசி வாய்ப்பு குடுங்க, உங்களுக்காக உயிரக் குடுக்கறேன்னு.. .. என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்றாங்க சார்.

சோரேன் : அட நீங்க வேற... நீங்களாவது பவர்ல இருக்கீங்க.. அங்க நான் எந்த பவர்லயும் இல்லயா. ஒரு பயலும் மதிக்க மாட்றான்.

கருணாநிதி : வாங்க பர்னாலா. நீங்க இருக்கறதாலதான் என் வண்டி ஓடுது.

பர்னாலா: அட ரொம்ப புகழாதீங்க. நீங்க என்னை கவர்னரா கூப்பிடலன்னா என்ன பஞ்சாப்ல யாரு மதிப்பா. என் பசங்கதான் இவ்வளவு செழிப்பா இருக்க முடியுமா என்ன ?





கருணாநிதி : நீங்க இல்லன்னா என் பசங்களும் செழிப்பா இருக்க முடியாதே.

சோரேன் : பேசாம நானும் பர்னாலா மாதிரி கவர்னரா போயிடலாம்னு இருக்கேன். இந்த எலெக்சன், ஓட்டு கேக்கறது, எந்த தொல்லையும் இல்லை. ஆமா கருணாநிதி சார்.. நீங்க ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க ?

கருணாநிதி : பிரச்சாரம்னு கூட்டத்துக்கு போனா என்ன பேசுறதுன்னே தெரியல... அம்மா தாயே... சோனியா தாயே காப்பாத்தும்மா அப்பிடின்னும் கெஞ்சிப் பாத்துட்டேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குது. ஒரு பயலும் நம்ப மாட்டேங்குறான்.

பர்னாலா : கருணாநிதிஜி நீங்க கவர்மென்ட் ஆஸ்பித்திரில்ல படுத்திருந்தா இன்னும் நல்லா சிம்பதி கிடைச்சுருக்கும் இல்ல ?

கருணாநிதி : அதெல்லாம் அரசு ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் சார். நான் போய் அங்க எப்படி படுக்கறது. இவ்ளோ பேசுரீங்களே ஏன் நீங்க அங்க போகாம ஏன் அப்போல்லோவுக்கு வந்தீங்களாம். அதே காரணத்துக்குத்தான் நானும் இங்க வந்தேன். அது சரி உங்க ரெண்டு பசங்களும் எப்படி இருக்காங்க ? பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா ?

பர்னாலா : நீங்க இருக்கும்போது எனக்கு என்ன குறை. பேருக்குதான் நான் பல்கலைக்கழக வேந்தர். ஆனா பசங்கதான் எல்லா யுனிவர்சிட்டி யையும் பாத்துக்கறாங்க. உங்க பசங்க எப்படி இருக்காங்க ?

கருணாநிதி : ம்ம். நீங்க பசங்களுக்கு யுனிவர்சிட்டிகளை கொடுத்த மாதிரி நான் தமிழ்நாட்டையே பிரிச்சு கொடுத்துட்டேன். ஒரு பொண்ணுக்கு டெல்லியும் ஒரு பொண்ணுக்கு பெங்களுரும் கொடுத்துட்டேன். இப்போ மதுரையை பாத்துக்கற பையன் நானும் டெல்லி போகனும்னு அடம் பிடிக்கிறான். சரி போடான்னு எலெக்சன்ல நிக்க வச்சுட்டேன்.

சோரேன் : கருணாநிதி சார்... நீங்க எப்படி சார் இந்த சர்க்காரியா கமிஷன்ல இருந்தெல்லாம் வெளியே வந்தீங்க. என் மேல கேஸ் மேல கேஸ் போட்டு உயிர எடுத்துட்டாங்க சார்.

கருணாநிதி : இதெல்லாம் ஒரு விஷயமா... ... நீங்க ஆதிவாசி மக்கள நாகரிகப் படுத்துறதுக்காக அரசியலுக்கு வந்தீங்க. நான் நல்லா இருக்கற மக்கள ஆதிவாசி மக்களா மாத்துறதுக்காக அரசியலுக்கு வந்தேன். அப்போ எனக்கு எவ்ளோ மேட்டர் தெரிஞ்சுருக்கும்னு நீங்களே யோசிங்க..







சோரேன் : அது கரெக்ட்தான் சார். உங்கள மாதிரி வருமா.

கருணாநிதி : ஆமா உங்க ஊர்ல ஆஸ்பத்திரியே இல்லையா... எதுக்கு இவ்ளோ தூரம் வந்தீங்க.

சோரேன் : சார் அங்க ப்ரைவேட் ஆஸ்பத்ரில படுத்தா.. இந்தாளு என்ன ஏழைகளுக்கு பாடுபட்றேன்னுட்டு ப்ரைவேட் ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கான்னு ஆளுக்கு ஆள் பேச ஆரம்பிச்சுடுவாங்க சார். ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் சென்னையில இருக்கற அரசு மருத்துவமனையிலதான் ட்ரீட்மென்ட் எடுத்தேன்னு சொன்னா நம்பிடுவாங்க அதான்.

கருணாநிதி : உங்க ஊர் பரவாயில்ல சார். ஈசியா ஏமாத்த முடியுது... ஆனா. இங்க தமிழ்நாட்டுல தலைகீழா நின்னு டக்கர் அடிச்சு பாக்கறேன். ஒண்ணும் கதை நடக்க மாட்டேங்குது.

பர்னாலா : கருணாநிதிஜி. ஆஸ்பத்திரிலேயே படுத்திருந்து பிரச்சாரத்த கோட்டை விட்றாதீங்க.. கவர்மெண்ட் மாறிடுச்சுன்னா என்னை ஜார்கண்ட் கவர்னரா மாத்திடுவாங்க.. அப்புறம் நான் இந்த ஆள் கூடத்தான் மாறடிக்கனும்.

கருணாநிதி : ஒன்னும் கவலை படாதீங்க பர்னாலாஜி. 12ந் தேதி வரட்டும். எப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கறேன் பாருங்க. சூப்பர் சுப்பராயனே நீங்கதான் பெஸ்ட் ஸ்டண்ட் மாஸ்ட்டர்னு சொல்றாரா இல்லையா பாருங்க..

(டாக்டர்கள் வரும் ஓசை கேட்பதால் மூவரும் கலைந்து செல்கிறார்கள்)












உடன்பிறப்புக்கு கடிதம்

உடன்பிறப்பே, மருத்துவமனையில் இருந்ததால் சில நாட்களாக கடிதம் எழுதவில்லை. இருப்பினும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சண்முகநாதனின் துணையோடு கடிதம் எழுதுகிறேன். கழக அரசு சொல்வதை செய்யும். செய்வதைத் தான் சொல்லும். இதை அறியாத எத்தர்கள் சிலர் கழக அரசுக்கெதிரான விஷமத்தனமான பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதை நீ அறிவாய்.
அவர்களுக்கு பதில் கூறும் விதமாகத்தான் இந்தக் கடிதம். பல நாட்களாய் நானே கேள்வி கேட்டு நானே பதில் கூறி அறிக்கைகள் வெளிவந்திருப்பதை நீ அறிவாய். எனக்கு வசதியான கேள்விகளை நானே கேட்டுக் கொண்டு பதில் அளிப்பதால் மக்களின் மனத்தில் கழக ஆட்சி பற்றிய சந்தேகங்கள் எள்முனையளவும் இல்லாமல் செய்வதுதான் அதன் நோக்கம். கழகத்தையே குடும்பமாக நினைத்து வாழவேண்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னதற்கேற்ப த்தானே நான் நடந்து வருகிறேன். கழகத்தை குடும்பமாக நினைப்பது போலவே குடும்பத்தை கழகமாக நினைத்து வழிநடத்தி வருவது தவறா என்பதை வரலாறுதான் தீர்மானிக்கும். அண்ணா விட்டுச் சென்ற வழித்தடத்தில் அவர் இருந்தால் அவரே மலைக்கும்படி இன்று கழகத்தை வளர்த்திருக்கிறேனா இல்லையா ? அந்த அம்மையார் போல் இன்னொருவர் குடும்பத்தின் பெயரிலா சொத்து வாங்கிக் குவிக்கிறேன் ? என் குடும்பம் நன்றாக இருந்தால்தானே நாளை என்னை விடச் சிறப்பாக கழகத்தை வழிநடத்த முடியும் ? அதனால்தோன என் குடும்பத்தினர் சொத்து வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதை நானே ஆசி வழங்கி அனுமதித்து வருகிறேன். இது தெரியாத எத்தர்கள் பொறாமையால் என்மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். அண்ணா பண்படுத்திய இதயம் இது. இதை விட என்ன கேவலம் வந்தாலும் ஆட்சியை மட்டும் இழக்க மாட்டேன். சோனியா காந்தியிடம் காப்பாற்றுங்கள் தாயே என்று என் ஆட்சியை காப்பாற்ற கெஞ்சவில்லையா ? இதைவிட என்ன கேவலம் வேண்டும் ?
புதிதாக பஸ் கட்டணத்தை குறைத்து விட்டேன் என்று கூப்பாடு போடுகின்றனர் சிலர் ! பஸ் கட்டணத்தை ஏற்றும்போது யாருக்காவது சொன்னேனா ? அதேபோல் குறைக்கும்போதும் யாருக்கும் சொல்லாமல் குறைத்து விட்டேன். இது தவறென்று இங்கே மாநிலத்தில் என்னிடமே சம்பளம் வாங்கிக் கொண்டு என்னை இது வரை வந்து பார்க்காத ஒரு தேர்தல் அதிகாரி இருக்கிறாரே அவரும் அந்த அம்மையாருடன் சேர்ந்து கொண்டு புலம்புகிறார். பஸ் கட்டணத்தை குறைத்து விட்டேன் என்று புலம்பும் யாரும் பஸ்சில் போவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் உடன்பிறப்பே ! பஸ் கட்டணம் அதிகம் இருப்பதால் அதிக பணத்தை எடுத்துச் சென்று பணிமனையில் கட்ட சிரமமாக இருக்கிறது என்று நடத்துனர்களாய் பணிபுரியும் தொழிலாளத் தோழர்கள் என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்றுத் தான் இவ்வாறு கட்டணம் குறைக்கப் பட்டது. பஸ் கட்டண குறைப்பை கண்டிக்கும் அனைவரும் தொழிலாளர் விரோதிகள் என்பதை மறந்து விடாதே உடன்பிறப்பே !
மருத்துவர்கள் கூட அந்த அம்மையாரோடு சேர்ந்து கொண்டு என்னை ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். நான் ஓய்வெடுத்தால் கழகம் மற்றும் குடும்பத்தின் நலனை யார் கவனிப்பது. பித்தர்கள் புலம்பலை புறந்தள்ளி விட்டு கழகக் கண்மணிகளாம் அழகிரி, தயாநிதி ஆகியோரின் வெற்றிக்கு பாடுபடு உடன்பிறப்பே ! புறநானூறு கண்ட புலியே ! வாக்குச் சாவடி உனக்கு எம்மாத்திரம் ! வாக்குச் சாவடியை கைப்பற்ற உடனே களம் காண வா ! ஓடோடி வா ! என் குடும்பத்தின் சரித்திரத்தில் உனக்கு என்றென்றும் இடம் உண்டு !

Friday, May 1, 2009

தம்பியின் உண்ணா விரதமும் அண்ணாவின் கவிதையும்


தமிழக அரசியல் வாரப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கவிதை
எழுதியவர் நக்கீரன்.
படம் ஒப்பாரி

சுத்தமானது என் சமாதி
சத்தியமாய்ச் சொல்கிறேன் !

ஆண்டுக்கு இரண்டு முறை தான்
தம்பிகள் என் சமாதிக்கு வருவீர்கள்
பிறந்த நாளில் ஒரு முறை
மரித்த நாளில் மறு முறை

அது என்ன ஏப்ரல் 27ல்
என் சமாதியில் இத்தனை கூட்டம் !!
கடும் கூச்சல் !!
ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை
ஏன் எழுப்பினார்கள் என்பது
புரியாமல் தவித்தேன்.

சூரிய உதயத்தை என் வாழ்வில் கண்டதில்லை
ஆனால், அதிகாலையில் தம்பி வந்ததுமே
தூக்கம் கலைந்திற்று ! துக்கம் கவ்விற்று !!
வந்தது என் தம்பி கருணாநிதியல்லவா ?

அதிகாலை என் இருப்பிடத்தைத்
தேடி வந்த காரணத்தை கருணாநிதி கொன்னதும்
தான் தெரிந்துகொண்டேன்.
இலங்கைத் தமிழர்களுக்காக
என் சமாதியில் உண்ணாவிரதமாம் !

அருமை தம்பி கருணாநிதி
பச்சை தண்ணீரை கூட அருந்தாமல்
அவர்தம் மனைவியரோடு
உண்ணாவிரதம் இருந்தது என்னை
உருக வைத்தது.

ஆருயிர் இளவலைக் காணவந்த
கட்டிளங்காளைக் கூட்டமோ
சமாதிக்கு வெளியே விற்கும் சமுசாவையும்
ஐஸ்கிரீமையும் தின்றதுதான்
மனதை நெருடியது.

என் தம்பியோ உயிரை ஓர் கையிலும்
ஆட்சியை ஓர் கையிலும்
பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும்
சக்கர நாற்காலியில்
நகர்ந்து வருவது.. .. ஐயகோ
என்னே கொடுமை !

இத்தனை கொடுமைகளுக்கிடையே
இலங்கைத் தமிழர் பிரச்சினையுமா தம்பி !
அந்தப் பிரச்னைக்குத் தான் எப்போதோ
சமாதி கட்டிவிட்டோமே தம்பி !
காலமெல்லாம் ஆட்சியை தக்க வைப்பதெப்படி ?
மத்தியிலும் மாநிலத்திலும்
நம் கழத்தின்... ... மன்னித்துவிடு தம்பி !
நம் குடும்பத்தின் குரலே
ஒலிக்க வைப்பதெப்படி ?

இனியவை நாற்பதும்
கைப்பற்றுவதெப்படி ? அதிலேயும்
மதுரை மகனுக்குத் தனி கவனம் !
தப்பித் தவறி மீண்டும்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
அழகிரிக்கு என்ன துறை ?
கனிக்கும் தயாவுக்கும் என்னென்ன ?
இப்படி எண்ணம் ஓட
எப்படி வரும் மனம்
இலங்கைத் தமிழரின் நலம் காண ?

நம் தம்பிமார்களின் மண்டையை
உடைத்து குருதியை குடித்த
காங்கிரஸை எதிர்த்துதான்
ஆட்சியையே பிடித்தோம் !
அதே காங்கிரஸ்காரனை
ஆட்சிக்கட்டிலில் ஏற்ற
தாங்கிப் பிடிப்பது இன்று
என் அருமை தம்பியல்லவா ?
அந்த அளவுக்கு உயர்ந்திருக்கும்
உனது மனிதாபிமானம்.
யாருக்கும் புரியவில்லையே தம்பி !

இருப்பது ஓர் உயிர் -
போனால் போகட்டும் என்று
மேடைதோறும் முழக்கமிடுவாய் !
இந்த வசனத்தைத் தான் நான் உன்னிடம்
அதிகமாகக் கேட்டதுண்டு !
அதே வசனத்தை
என் சமாதியில் மீண்டும் ஒரு முறை
கேட்டபோது, உனக்கு அருகே இருந்த
ஏர்கூலர் காற்றில் என் சட்டை
ஆடுவதுபோல் பரவசப்பட்டேன் !

தினம் தினம் ஆயிரக்கணக்கில்
தமிழர் பிணத்தின் ரத்தங்களை
உறிஞ்சிய ராஜபக்ஷேவைக் கண்டித்து
நீ நடத்திய உண்ணாவிரதத்தில் கண்ட
காட்சிகள் என் கண் முன்னே விரிகிறது தம்பி !

1967ல் நாம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தோமே !
அந்த தரித்திரம்தான் இலங்கைத் தமிழர்களுக்கு
இன்னலாக வந்து விட்டது தம்பி !
என்ன தம்பி ! எழுந்து விட்டாய் !
நான் சொல்ல வந்ததைச் சொல்லவிடு !
காங்கிரஸ்காரனே தமிழ்நாட்டை ஆண்டிருந்தால்
இந்தச் சிலுவையை நீ சுமந்திருப்பாயா ?

நமது முதுகில் சவாரி செய்து
கொண்டிருக்கும் காங்கிரஸ்காரன் தலையில்
அல்லவா ஆணி இறங்கியிருக்கும் -
அதற்காகத்தான் சொன்னேன்
நான் ஆட்சியைப் பிடித்தது தரித்திரமென்று !

ஆயிரம் பிரச்னைக்கு நடுவில்
இலங்கைத் தமிழர் நலன் கருதி
என் சமாதிக்கு வந்தோயே தம்பி !
நீ வந்ததால்தான், ஆண்டுக்கு இரண்டுமுறை
சுத்தமாகும் என் சமாதி,
மூன்றாவது முறையாகச் சுத்தமானது!

நன்றி தம்பி! நன்றி !!
நான் போட்ட கணையாழியை
பத்திரமாக வைத்திருந்தாய் !
நாம் வகுத்த கொள்கை ? அதுதான்
என் சமாதியிலேயே எப்போதோ
அடக்கம் செய்யப்பட்டுவிட்டதே தம்பி !

-நன்றி: தமிழக அரசியல்